Thursday, December 26, 2019

அம்ரிதா ஏயெம், ஈழத்தின் முக்கியமான கதைசொல்லி


- றியாஸ் குரானா
அம்ரிதா ஏயெம், ஈழத்தின் முக்கியமான கதைசொல்லி.
இவரை எத்தனைபேருக்கு தெரியும்..?

மிகவும் முரண்பாடான,பிரச்சினையான,சிக்கல்கள் நிறைந்த நிறுவனமாக நான் இலக்கியத்தையே கருதுகிறேன்.நிலவுகிற புனைவுச் சட்டகங்களுக்கு இசைவானதாக உருவாக்கப் படும் பிரதிகளும், அந்த மரபுகளை விமர்சித்து,அதற்கு அப்பால் கடந்து செல்ல முயற்சிக்கும் பிரதிகளும், நிலவுகிற மரபிலிருந்து முற்றிலும் முரண்படுகிற பிரதிகளும் இலக்கியமாகவே பாவிக்கப்படுகிறது.அது போல, வித்தியாசமான பிரதிகளை உருவாக்கினால் என்ன நிகழும் என்பதை முயற்சிப்பதும் இலக்கியமாகவே பயிலப்படுகிறது.

நாவல்,சிறுகதை,கவிதை என நம்பப்படுகிற வடிவம்,அது,தன்னகத்தே கொண்டிருக்கும் உள்ளடக்கம் போன்றவற்றோடு அனுசரித்துப்போகும் கதைவரைவு மற்றும் கவிதைச் செயல் போன்றவை அதிக நெருக்கடிகளைச் சந்திக்கிறது அல்லது கண்டுகொள்ளப்படாமலே போகிறது.
இந்தப் போக்கும் கவனயீனமும் எல்லாச் சூழலிலும் இருக்கிறது.அதற்கான பிரதானமான காரணம், அந்தச் சூழலில் முக்கியமானவர்களாக வலம்வருபவர்கள் பெரும்பாலும், அவர்களுக்கு அனுக்கமானவற்றையே பாதுகாக்க முயற்சிப்பர்.அதனூடாகத்தான் தமது இருப்பை மீண்டும் உறுதி செய்வர்.நிலவுகிற போக்குகளுடன் போட்டியிடத்தக்க பிரதிகளையும், அப் பிரதிகளை உருவாக்கும் புதியவர்களையும் அமைதிப்படுத்தவே அதிகமாக உழைப்பர்.(இதற்கு விதிவிலக்குகளும் உண்டு.ஆனால்,அவர்கள் சூழலில் அதிக பிரபலமில்லாதவர்களாக இருப்பர்) இதனூடாக, வித்தியாசமான எழுத்து மற்றும் புனைவுகள் இலக்கியச் சூழலில் அமுங்கிப்போகும் வாய்ப்பு அதிகம்.

இது ஈத்துச் சூழலிலும் பல கால கட்டங்களில் நடந்திருக்கிறது.நடந்துகொண்டிருக்கிறது. அதிலும், 90 களுக்குப் பின்னர் எழுதவந்த பலரை கவனிக்காமலே விட்டிருந்தனர்.மிகச் சிலரால் தீர்மாணிக்கப்படுகிற, மூடப்பட்ட வெளியாகவே ஈழத்து இலக்கியப் பரப்பு காட்சி தந்தது.அந்தக் கட்டமைப்பை ஒவ்வொரு காலகட்டத்திலும் கலங்கடிக்கும் செயற்பாடுகளும் தீவிரமாக இருந்தே வந்தன.பிரசுரத்திற்கான களம் கிடைக்காமலே அதிகம் பேர் அமைதியாகினர்.களம் கிடைத்தாலும் அந்தப் பிரதிகள் முறையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு போதுமான கவனத்தை கொடுக்க மறுத்தே வந்தனர். 2000ம் ஆண்டின் நடுப்பகுதியில் முற்றிலும் இளைஞர்களாலே நடாத்தப்பட்ட மாற்றுப்புனைவுகளும், எதிர் கருத்துநிலைகளும் கோட்டைகளை உடைத்து இலக்கியத்தை வெளியே கொண்டுவந்தது. அதற்குரிய பெரும்பங்கு 'பெருவெளி;' சிற்றிதழையே சாரும்.
எங்கும்போல, ஈழத்திலும் இலக்கியத்தை தீர்மாணிக்கும் சக்தியாக, பெரும் பிம்பங்களா கருதப்பட்ட ஆளுமைகளை சந்தோசப்படுத்துகிற புதியவர்கள் மாத்திரமே,பிற்காலத்தில் பயனடைகிற வாய்ப்புகள் அதிகமிருந்தன.தமது கருத்தோடு ஒத்துப்போகிறவர்களைNயு முதன்மைப்படுத்தும் மனித இயல்பு பெரிதும் செயற்பாட்டில் இருந்தது.

இவை ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, மறுத்தோடிகளாக செயற்படும் ஒரு தலை முறை மறு புறத்தில் உருவாகிக்கொண்டே இருந்தது.நீடிக்க முடியாமல் பலர் ஒதுங்கியும் போயிருக்கின்றனர்.இருந்தும் அவர்கள் மையக் கருத்துநிலைகளோடோ, ஜாம்பவன்காளக கருதப்பட்டவர்களுடனோ கலந்துபோகவில்லை.இப்படி நிறையப்பேர் ஈழத்தில் இருக்கிறார்கள்.அதில் ஒருவர்தான் அம்ரிதா ஏயெம்.90களில் எழுதத்தொடங்கிய மிக முக்கியமான கதைசொல்லி இவர்.2002ம் ஆண்டு மூன்றாவது மனிதன் பதிப்பகத்தினால் இவரது சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்தது.அது கவனிக்கப்படவில்லை.அந்தச் சலிப்பே அவரை இலக்கியப் புனைவிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக தூரப்படுத்தியிருந்தது. இப்போது, மீண்டும் உற்சாகத்தோடு எழுதவந்திருக்கிறார்.ஆனால், இவரின் இலக்கிய வாசிப்பு என்றும் இடைவெளிகளை கொண்டிருக்கவில்லை. ஆங்கிலத்திலும் வாசிக்கும் பழக்கங்கொண்ட இவர் தற்போது,கிழக்கு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார். கடந்த பத்தாண்டுகளில் பல மொழிபெயர்ப்புக்களை செய்திருக்கிறார். நாவல் ஒன்றைப் புனையும் முயற்சியில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அம்ரிதா ஏயெம் அவர்களின் கதைகளை எனது வலைத்தளத்தில் பதிவிட தீர்மானித்து அவரை அனுகியபோதும், மிகவும் தயக்கத்துடனே இருந்தார்.பின்,எங்களுக்கிடையிhன உறவு அதை சாத்தியப்படுத்தியது. பின்நவீன நிலவரம் குறித்து பேசக்கிடைக்கும் மிகச் சிலரில் அம்ரிதாவும் ஒருவர்.

அவரின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து 'தறு' என்கின்ற ஒரு கதையை இங்கு பதிகிறேன்.இது நிறையப் பேச நம்மைத் தூண்டுகின்ற கதை.ஒருவருடைய அதுவும் ஒரு ஆணுடைய வாழ்வை சுயசரிதைபோல சொல்லி புனைவை உருவாக்கும் தன்மைகொண்டது.இந்தக் கதை என்ன செய்கிறது என்பதைப் பற்றி அதிகம் விபரிப்பதைவிட, கதை கொண்டிருக்கிற புனைவு உத்திபற்றி மாத்திரம் சில விசயங்களைச் சொல்ல நினைக்கிறேன்.

அம்ரிதா உருவாக்கும் கதைசொல்லி, தன்னிலை விளக்கமாக தனது சரித்திரத்தை பார்வையாளர்களோடு பேசிக்கொண்டிருப்பதுதான்,இது மரபான ஒரு கதைசொல்லல் உத்திதானே என்று யாரும் நினைக்கலாம் ஆனால்,அந்த உத்தியை கதையின் நடுப்பகுதியில் முற்றிலுமாக உடைத்துவிடுகிறார். கடற்தொழிலாளியான, கதைசொல்லி கடலில் வீழ்கிறார்.அதன் பின் அவரின் மனவெளி மாத்திரமே இயங்குகிறது.உடல் சார்ந்ததும்,வெளியுலகினூடான தொடர்புகளும் இல்லாதுபோகிறது. இப்படி நிகழும் சந்தர்ப்பத்தில் வேறு கதைசொல்லி ஒருவர் அங்கு வரவேண்டும்.அப்போதுதான் கதை நகர வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி எவரையும் கொண்டுவராமல், தானே தனது கதையைச் சொல்லுவதாக தொடர்கிறது.கடைசியில் அவர் மரணித்தும் விடுகிறார்.

கதையின் நடுவில் கதைசொல்லி செயலிழந்துவிடுகிறார்,செயலிழந்த கதைசொல்லி மிகச் சாதாரண நிலையில் இருப்பவரைப்போல் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.ஆனால், கதைச் சம்பவங்களோ முற்றிலும் அதற்கு மாறாக, கோமா நிலையிலிருக்கும் ஒரு நபராக கதைசொல்லியை சித்திரித்துக்கொண்டு செல்கின்றன. ஒரே நபர் ஒரே நேரத்தில், செயலூக்கமுள்ள ஒருவராகவும், செயற்றிறன் அற்றவராகவும் கதையெங்கும் உலாவருகிறார்.இது முற்றிலும் பின்நவீன கதைச்செயல்.ஈழத்தில் இப்படியான உத்தி 90களிலே அம்ரிதா ஏயெம் அவர்களால் கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இந்தக் கதைச்செயல் இங்கு கவனிப்பாரற்று கிடந்தது.அப்போது,பின்நவீனத்திற்கு எதிரானவர்களும்,அதுபற்றிய புரிதலற்றவர்களுமே இங்கு அதிகம் என்பதும் ஒரு காரணம்.இந்த மறைக்கப்பட்ட அல்லது பேசப்படாத பிரதிகளை மீண்டும் நாங்கள் வாசித்து அதை வெளியே கொண்டு வருகிறோம். அம்ரிதா ஏயெம் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.

(08.10.2012)

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...