Thursday, December 26, 2019

06 டிசம்பர் 1973

- அமிரிதா ஏயெம்

சில நாட்களுக்கு முன், இரவு இரண்டு மணிக்கு நித்திரைக்கு போனேன். நித்திரை வரவில்லை. பின்னர் மூன்றரை மணி போல எழுந்து வந்து தொலைக்காட்சியின் ஒரு சனலை திருப்பினேன். ஆலைஸ் செபோல்ட் நாவலை அடிப்படையாக வைத்து, பீற்றர் ஜக்;சனால் இயக்கப்பட்ட த லவ்லி போன்ஸ் என்ற படம் போய்க்கொண்டிருந்தது. ஹார்வி என்ற கொலைகாரனால் கொல்லப்பட்ட ஒன்பது பெண்களில் ஒருத்தியான 14 வயதான சல்மன் என்ற சிறுமி மட்டும், மற்ற எட்டுப் பேர் அழைத்தும் வானத்திற்கு இன்னும் செல்லாமல் இடையில் கொலைகாரனின் எல்லாக் காட்சிகளையும் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அவளுக்கும், குடும்பத்திற்கும் நீதி கிடைக்க தொடங்கும் போது வானத்திற்கு சென்று மற்றவர்களுடன் இணைவதற்கு முன் பின்வருமாறு சொல்லிவிட்டு செல்கிறாள். அத்தோடு படமும் நிறைவடைகிறது.
என்னுடைய பெயர் சல்மன்
மீனைப் போன்ற பெயர்
எனது முதற் பெயர் சுசி
எனக்கு 14 வயதாக இருக்கும் போது
நான் கொலை செய்யப்பட்டேன்.
06.12.1973 ம் திகதி
இங்கே கொஞ்ச காலம் இருந்தேன்
பின்னர் இங்கிருந்து அகற்றப்பட்டேன்.
எல்லோருக்கும் நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க
நான் வாழ்த்துகிறேன்.
திருமணமாகி பல்வேறு பிரயத்தனங்களுக்குப் பிறகு உருவான இரட்டை ஆண்குழந்தைகள் இருவரும் 6 மாதங்களில் பிறந்து 1 மணி நேரமே உயிருடன் இருந்து மரணித்தது 9 வருடங்களுக்கு முன்னைய டிசம்பர் 04.
உம்மாவின் தம்பி, உதவிப் பொறியியலாளராக இருந்தவர், தனது 52 வது வயதில் தவறான சத்திரசிகிச்சை காரணமாக மரணித்தது 8 வருடத்திற்கு முந்திய டிசம்பர் 03.
மிக நெருங்கிய தாயின் உறவினர் நோய் காரணமாக மரணித்தது 7 வருடத்திற்கு முந்திய டிசம்பர் 03.
இவைகளின் எந்த துக்கமும் நான் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்பதற்கு காரணமாக இருந்ததில்லை. அடிப்படையில் கொண்டாட்ட மனநிலையே இருந்ததில்லை. பெருநாட்கள் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. உம்மா, வாப்பா, மனைவி உபயத்தில் புது உடுப்புக்கள் கிடைக்கும் அவ்வளவுதான். பிறந்தநாள் என்னைக் கடந்து போய்விட்ட பிறகு யாரும் அதனை ஞாபகப்படுத்தினால்தான் உண்டு. இந்த முறை நான் முகநூலில் இருந்த 6 வருடத்தின் கடைசி ஆறுமாதமே நான் சுறுசுறுப்பாக இருந்தத காலமாகும். அதன் காரணமாக பிறந்த நாள் ஞாபகங்கள் என்னில் தங்கிவிட்டன.
டிசம்பர் என்றாலே அது மரணத்தின் மாதம்தான். ஏனெனில் வெப்பக்காலநிலை கொண்ட எமக்கு குறைந்த வெப்பத்தை எவ்வாறு வெல்வது என்பது தெரிவதில்லை. ஹைப்போதேமியாவாகி, அதுகூட காரணமாயிருக்கலாம்.
வருடத்தின் 340வது நாளில், புதுவருடத்தை எதிர்கொள்ள 25 நாட்கள் இருக்கும் நிலையில், நானூறு வருடங்களில் ஐம்பத்தி எட்டு தடவை வியாழன் வருகிற டிசம்பர் ஆறுகளின், ஒரு ஆறில் 1973 இன் மரண டிசம்பரில் நான் பிறந்தேன்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...