Tuesday, October 25, 2022

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

 ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்தப் பிரதேசத்தின் மயான அமைதியும், அமானுஸ்யத் தன்மையும், பல்வேறு நிறங்களிலும், வடிவங்களிலும் விரவிக் கிடந்த சிறு கற்களும், சமச்சீரில்லாத நிலங்களும், துாரத்தே தெரிந்த கறுத்த மலைகளும் (பின்னர் அது அல் ஹாஜர் மலைத் தொடர்களின் ஒரு பகுதி எனத் தெரிந்து கொண்டேன்) என்னை வெகுவாகக் கவர்ந்தன. அந்த இடம் றுஸ்தாக். இறங்கி துார நடக்கின்றேன். (தனிமையில் ஏதோவொன்றால் அவதானிக்கப்படுகின்றோம் என்ற மெல்லிய அச்சமும் இருந்தது). என்ன ஆச்சரியம் நிறைய பாறைக் கற்களில் உறைந்து போன உயிர்ச்சுவடுகளைக் (fossils) காண்கின்றேன்.

பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்கள், விலங்குகள், தாவரங்கள் புதைந்து இறுகிப் பாறையாக மாறுவது உயிர்ச்சுவடுகள் எனலாம். இவற்றில் நான்கு வகைகள் இருக்கின்றன. (அச்சு, வார்ப்பு, சுவட்டு, உண்மையான உயிர்ச்சுவடுகள் என வகைப்படுத்தலாம்). ஆறு வழிகளில் உயிர்ச்சுவடுகள் உருவாக வாய்ப்பிருக்கின்றன. அவற்றில் ஒரு வழி பாறை போன்ற கனிப்பொருட்கள் உயிரங்கிகளின் இழையங்களை ஊடுருவி, மென்மையான இழையங்களை சிலிக்கா, கல்சைற், பைரைட், போன்றவைகள் பிரதியீடு செய்து, அவ்வுயிரிகளை பாறைபோன்று மாற்றி பாதுகாக்கின்றன. பெரும்பாலான விலங்குகளின் என்புகளும், தாவரங்களும் இவ் வகையான உயிர்ச்சுவடுகளாக மாற்றப்படுகின்றன. நான் றுஸ்தாக்கில் அவதானித்ததும் இந்த வகைதான்.
அடிப்படையில், நான் ஒரு பரிணாம உயிரியியலாளன் என்பதை சற்று சத்தம் குறைத்து சொல்ல வேண்டியிருக்கின்றது. படத்தில் காண்பதும் பாறையாகிய இரு வகை மரங்கள்தான். இவைகள் கிடைப்பது அபூர்வம். ஆனால் அங்கு நிறைவாக கி்டக்கின்றது. ஆய்வுக்கும், கற்கைக்கும் அந்த இடம் சுவர்க்கம்.

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...