Tuesday, November 28, 2017

அசாதாரண விலங்கு நடத்தைகள் அனர்த்த முன்னெச்சரிக்கைக்கு ஒரு கருவியாக:


ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை)





இரண்டாயிரத்து நான்காம் ஆண்டின்; சுனாமி பேரனரத்;தத்திற்கு பின்னர்தான் அனர்த்த முகாமைத்துவம், அனர்த்தம் நடைபெறுவதற்கு முன்னரான அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள் போன்றவற்றி;ன் தேவைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தோன்றத் தொடங்கியது. ஆனால் அந்த அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள் பற்றிய போதிய அறிவிருந்தால் பெருமளவிலான உயிர்;, பொருளாதார சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இதன்காரணமாக அரசாங்கம் பாரிய பொருளாதார செலவினத்தில் உயர்தொழில்நுட்பம்கொண்ட அனர்த்த முன்னெச்சரிக்கை கட்டடமைப்புக்களை நிறுவியிருக்கின்றது. இவைகளை தவிர்த்து அனர்த்த முன்னெச்சரிக்கையை எதிர்வுகூறும் பல வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் அசாதாரண விலங்கு நடத்தைகளை பாவித்து அனர்த்தங்களை முன்னெச்சரிக்கை செய்வதும் ஒரு வழியாகும். துரதிருஸ்டவசமாக அசாதாரண விலங்கு நடத்தைகள் அனர்த்த முன்னெச்சரிக்கை கருவியாக பாவிக்கலாம் என்ற விடயம் கவனத்தில் எடுக்கப்படாததாகவும், அறியப்பட்டது குறைவாகவும் காணப்படுகின்றது. அத்துடன் பொருளாதார ரீதியில் இது செலவும் மிக மிக குறைந்ததாகும்.


அதிகமான விலங்குகள் ஒலி, வெப்பம், தொடுகை, அதிர்வு, நிலைமின்னியல், இரசாயன செயற்பாடு, காந்தப் புலம் போன்றவைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை உணரக்கூடிய மிக மிகத் திறன் வாய்ந்த புலன் அங்கங்களை கொண்டிருக்கின்றன. உதாரணமாக மீன்கள் மனிதர்கள் உணருவதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்னரேயே நிலஅதிர்வுகளையும், நடுக்கங்களையும் உணரக்கூடியன. யானைகளும், சில விலங்குகளும் நில அதிர்ச்சி மிகத் தூரத்தில் தொடங்கியிருந்தாலும், அதனை உணரும் திறனை கொண்டிருக்கின்றன. பலவகையான பறவை இனங்களும், யானை, புலி போன்ற விலங்களும் 1-3 ஹேற்ஸ் அளவுள்ள கீழ்க்கழியொலிகளை உணரும் திறன் கொண்டவையாக காணப்படுகின்றன. ஆனால் மனிதர்களி;ல் இது 100 – 200 ஹேற்;ஸ் ஆகும்.


சுனாமி வருதவற்கு முன் இந்தோனேசியாவில் பல்லாயிருக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக அந்த இடங்களைவிட்டு நகர்ந்ததாகவும், இலங்கையில பல்லாயிரக் கணக்கான மக்கள் சுனாமியால் கொல்லப்பட்டபோதும், காட்டில் இருந்த ஒரு யானை அல்லது முயல் கூட கொல்லப்படவில்லை என்றும் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
ஜப்பானில் நடந்த ஒரு ஆய்வில் நாய்களின் அசாதரன நடத்தைகளான அதிகமாக கடித்தல், அதிகமாக குரைத்தல் போன்றவை இரு மாதங்களுக்கு பின்னர் வரக்கூடிய 7.2 றிச்டர் அளவுடைய பூமியதிர்ச்சியை முன்னெச்சரிக்கை செய்திருக்கின்றன என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. வுpலங்குகள் பூமியதிர்ச்சிக்கு முன்னர் இடம்பெறும், நிலம் சாய்தல், ஈரப்பதன்;, மின் ஓட்டம், காந்தப் புலம் போன்றவைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை உணரக்கூடியன. இவைகள் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடந்த ஆய்வுகளின் மூலம் நிருபிக்கப்பட்டிருக்கின்றன. சிலந்திகள், மற்றும் சில பூச்சிகள், எலி (காய்;ந்த மண்ணில் விதைகளைப் புதைத்தல்), போன்றவை இந்த ஈரப்பதனை உணரும் விலங்குகளுக்கு உதாரணங்களாகும்.

உலகின் பல நாடுகளின் உள்ளுர்க்குடிகள் இன்றும் பறவைகளின் அலறல்களையும், கடல்வாழ் உயிரினங்கள் நீந்தும் திசைகளின்; மாற்றங்களையும் வைத்து கடற் கொந்தழிப்பு, சுனாமி  போன்ற இயற்கை அனரத்தங்களை முன்னெச்சரிக்கை செய்கிறார்கள். ஆரியத்திரன என்கின்ற இலங்கை ஆய்வாளர்p சுனாமிக்கு முன்னர், சுமாத்திராவின் கடற்படுகைகளிலிருந்து இலங்கையை நோக்கி; மீன்கூட்டங்கள் இடம் பெயர்ந்ததை குறிப்பிடுகிறரார். ஏனெனில் மீன்களின் பூமியதிர்ச்சியை உணரும் திறன் மிக மிக அபாரமானது. மீன்கள் மனிதர்கள் உணருவதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்னரேயே நிலஅதிர்வுகளையும், நடுக்கங்களையும் உணரக்கூடியன. சுறா, திருக்கை போன்றவையும், பல மீனினங்களும் மின்புலத்தில் ஏற்படும் மாற்றங்கள் (அதாவது ஒரு கோடியில் ஒரு பங்கு வோல்ட்டேஜ்) மாற்றங்களை உணரக்கூடியன. டொல்பின் போன்ற திமிங்கிலங்கள் (பறவைகளும் கூட) காந்தப் புலத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு அசாதாரண நடத்தைகளை காட்டக்கூடியன.

சுவாசிலாந்தில் வெள்ளப்பெருக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்படுகின்றன வறட்சியும் மிகப் பெரிய அனர்த்தங்களாக காணப்படுகின்றன. இதனை அம் மக்கள் புளோசியஸ் என்ற பறவை மரத்தில் கூடு கட்டும் உயரத்தை வைத்து, அதாவது மரத்தில் அதிக உயரத்தில் கூடுகள் கட்டினால் வெள்ளப் பெருக்கு ஏற்படப் போகிறது என்ளும், குறைந்த உயரத்தில் கட்டினால் ஏற்படாது என்றும் அனர்த்த முன்னெச்சரிக்கைய பெற்றுக் கொள்கிறார்கள். பறவைகளின் அலறலை வைத்து மழை வரப்போவதையும், மேலும் அசாதாரண விலங்கு நடத்தைகளுடன் காற்றின் திசை, சந்திர பிறைகளின் வடிவங்கள் வைத்து இயற்கை அனர்த்தங்களை அம் மக்கள் முன்னெச்சரிக்ககை செய்கிறார்கள். தன்சானியாவில் ஆடுகளின் நடத்தைகளை வைத்து வரட்சியையும், வரப் போகின்ற உணவுப் பஞ்சத்தையும் எதிர்வுகூறுகின்றார்கள்.

ருஸ்யாவின் கம்சற் ஓர்குக் பிரதேச வேட்டையாடுபவர்களும் மேய்ப்பர்களும் சேகரிப்பவர்களும் வானத்தின் நிறங்கள், நாய் பனியில் முதுகை வைத்து உருளுதல், வானில் காகங்கள் வட்டமடித்தல் போன்றவைகளை வைத்து அனர்த்தங்களை முன்னெச்சரிக்ககை செய்கிறார்கள். இந்தோனேசியாவின் 80500 பேரைக் கொண்ட சிமிலு சமூகத்தினர் எருமை மாடுகளின் அசாதாரண நடத்தைகளிலிருந்து முன்னெச்சரி;க்கையைப் பெற்று உயர்வான இடங்களுக்கு நகர்ந்ததன் காரணமாக காரணமாக 2004ம் ஆண்டின் சுனாமி பேரழிவில் தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள். இந்தோனேசியாவின் ஆசே பிராந்தியத்தின் முழு நாடு பூராக 170000 பேர் கொல்லப்பட்டு போக, சிமிலு சமூகத்தினரில், ஏழு பேரே கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். சீனாவில் நடாத்தப்பட்ட பல ஆய்வுகள் நாய், நரி, பண்டா கரடி, பன்றி, பசு, குதிரை, கோவேறு கழுதை, லோச்சஸ், புலிகள் போன்றவை பூமியதிர்ச்சிக்கு முன் அசாதாரண நடத்தைகளைக் காட்டுவதாகவும், நெடுந் தூக்கத்திலுள்ள பாம்புகளின் தூக்கம் குழப்பப்பட்டு, அவை வெளியில் வந்து பனியில் உறைந்து போவதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஆடுகள் தங்கள் கூடுகளுக்குள் செல்ல மறுத்தல், பூனையும் பன்றியும் தங்களது குட்டிகளை கௌவிக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்தல், நடு இரவில் கோழிகள் கூட்டில்; மோதி ஒலி எழுப்பல், மீன்கள் மீன் தொட்டியுடன் மோதி ஒலி எழுப்பல், பறவைகள் தங்கள் சுடுகளை விட்டு வெளியேறல், மிருகக்காட்சி சாலைகளின் விலங்குகள் இரவில் தங்களது இடங்களுக்கு சென்று தங்குவதற்கு மறுத்தல், பாம்புகள், பல்லிகள், சிறிய முலையூட்டிகள் (எலி, மூஞ்சுறு) தங்களது பொந்துகளை விட்டு வெளியேறிச் செல்லுதல், கடற்கரையோரங்களில் பூச்சிகள் பெரும் திரளாகக் குவிதல், கால்நடைகள் உயர்ந்த இடங்களுக்கு செல்லுதல், வீட்டு வளர்ப்பு பிராணிகள் பணிய மறுத்தல், காட்டு வாழ் பறவைகள் தங்களது வழமையான வாழிடங்களை விட்டு வெளியேறல் போன்றவை பூமியதிர்ச்சிக்கு முன்னரும் மற்றைய அனர்த்தங்களுக்கு முன்னரும் நடக்கும் அசாதாரண விலங்கு நடத்தைகளுள் சிலவாகும்.

அசாதாரண விலங்கு நடத்தைகளை அன்னர்த்த முன்னெச்சரிக்கைக்கு ஒரு கருவியாக உபயோகிப்பதனை பல வளர்ந்த நாடுகளிலும், இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலும் இன்னும் ஒரு வளராத, கவனிக்கப்படாத துறையாகவும், திறன்வாய்ந்த நுட்பமாகவும் காணப்படுகின்றது. எனவே நாளாந்தம் விலங்குகளின் அசாதரண நடத்தைகளை உற்று நோக்குவதன் மூலமும், விலங்குகளின் அசாதரண நடத்தைகளை அனர்த்த முன்னெச்சரிக்கைக்கு ஒரு கருவியாக பாவிப்பதன் மூலமும், பாரியளவிலான நிதியை சேமிப்பதுடன், பெருமளவிலான உயிரிழப்பு, சொத்திழப்புக்களையும் தவிர்க்கலாம்.












Tuesday, November 7, 2017

உயிரியல் சந்தமும் (Biological Rhythm) உயிரியல் கடிகாரமும் (Biological Clock)


 -.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

கரப்பான் பூச்சிகள் இரவிலேயே உணவைத் தேடுகின்றன. வடவரைக் கோளத்திலுள்ள பறவைகள் வருடத்தின் குறிப்பிட்ட மாதங்களிலேயே தகாதகாலம் கழிக்க தெற்கு நோக்கி இடம்பெயருகின்றன. கடற்கரையோரத்தின் வளைகளிலுள்ள நண்டுகள் தாழ் அலைகளின்போதே வளைகளைவிட்டு வெளியே வருகின்றன. மனிதர்களாகிய நாங்கள் இரவிலேயே தூங்குகின்றோம். இவைகளெல்லாம் ஏன் இவ்வாறு நடைபெறுகின்றன?. ஏனெனில் விலங்குகள் தொடர்ச்சியாக அவைகளின் செயற்பாடுகளை செய்வதில்லை.
சூழற் காரணிகளுக்கேற்ப விலங்குகளும் தங்களது நடத்தைகளை மாற்றிக் கொள்ளுகின்றன. இது இயற்கையின் வட்டத்திற்குட்பட்ட முறையிலேயே நடக்கின்றது.


விலங்குகளின் செயற்பாடுகள் சூழற்காரணிகளின் மீடிறன்களுடன் நேரடித் தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன. இது உயிரியல் சந்தம் (Biological Rhythm) என அழைக்கப்படுகின்றது. உயிரியல் சந்தமானது ஒரு கல அங்கிகளிலிருந்து பல்கல அங்கிகள்வரை, தாவரங்களிலிருந்து விலங்குகள் வரை காணப்படுகின்றன. விலங்குகளைப் பொறுத்தவரை அவைகள் பல வகையான உயிரியல் சந்தங்களைக் காட்டுகின்றன. மனிதனில் நித்திரை-விழிப்பு சந்தம், அல்கஹோல் அனுசேப சந்தம், கற்றல் வினைத்திறன் சந்தம், போன்ற நூற்றுக்கு மேற்பட்ட சந்தங்கள் காணப்படுகின்றன. அவைகளைக் கற்பதும், அறிவதும் ஆர்வத்தைத் தூண்டுவனவாகவும், மனித நலன்களின் நிமித்தம் பயன்படுத்துவதற்கு பிரயோகிக்க கூடியனவாகவும் உள்ளன. உதாரணமாக- மனிதக் கற்றல் வினைத்திறன் சந்தத்தை எடுத்துக் கொண்டால்,  அதிகாலையிலிருந்து காலை 10.00 மணிவரை கற்றலும், மனனமாக்கலும் அதிகரித்து, பின்னர் பிற்பகல் 1.00 மணி வரை படிப்படியாக குறைகிறது. பின்னர் பிற்பகல் 3.00 மணிவரை அதிகரிக்கிறது. அதன் பின்னர் குறைகிறது. இந்த சந்தம் பற்றிய அறிவை எங்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பயன்படுத்தலாம்.
பல்வேறு சூழற்காரணிகள் காரணமாக உயிரியல் சந்தத்தில் பல வகைகள் காணப்படுகின்றன.

1.            மேற்சக்கர சந்தம் (Epicycle): இது குறைந்த காலத்திற்கு ஒரு தடவை நடைபெறுவது. லக்வேர்ம் எனப்படும் கடலில் வாழும் புழுக்கள் 6-8 நிமிடங்களுக்கொரு தடவை உணவு உண்ணுதல், இதற்கு உதாரணமாகும்.


2.            அலைக்குரிய சந்தம் (Tidal Rhythm): அலையடிப்பை அடிப்படையாக கொண்டு கடற்கரையில் வாழும் விலங்குகள் காட்டும் நடத்தைகள் இதற்குள் அடங்கும். உதாரணமாக சிப்பி, மட்டி போன்றன உயர் அலையில் ஓடுகளை திறந்து வைத்து உணவை பிடித்து உண்பதுடன், தாழ் அலையில் ஓடுகளை மூடி, நீரிழப்பைத் தடுக்கின்றன.

3.            நாளுக்குரிய சந்தம் (Circadian Rhythm): இருபத்து நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு முறை, இரவு நடத்தை, பகல் நடத்தை என மாறி மாறி நடைபெறுவது. ஊதாரணம் - காகம், ஆடு, மாடு போன்;றன பகல் நேரங்களிலும், எலி, மூஞ்சுறு போன்றன இரவிலும், மேலும் சில விலங்குகள் சூரிய உதயத்திலும் அல்லது சூரிய அஸ்த்தமன நேரங்களிலும் செயற்படுபவையாகக் காணப்படுகின்றன.

4.            சந்திர சந்தம் (Lunar Rhythm): இது 28 நாட்களுக்கு ஒரு தடவை சந்திரனைவைத்து நடைபெறுவது. குரியன் என்ற மீன்கள் முழுநிலவிலேயே கடற்கரைக்கு வந்து மண்ணில் முட்டையிடுதல் ஒவ்வொரு முழுவநிலவு நாளிலும் நடைபெறுகிறது. மனிதப் பெண்களின் மாதவிடாய்ச் சக்கரமும் இதன் அடிப்படையிலேயெ நடைபெறுவதாக கருதப்படுகின்றது.


5.            வருடாந்த சந்தம் (Circannual Rhythm): இரு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுவது. விலங்குகளின் கோடை நெடுந்தூக்கம், இடப்பெயர்வு, தகாத காலங்களின் உறங்குநிலை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

உயிரியல் சந்தமானது எப்போதும் சூழலில் ஏற்படும் மாற்றங்களில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. விலங்குகளில் காணப்படும் உள் நேரக்கட்டுப்பாட்டு பொறிமுறையினால் (Internal Timing Mechanism) உயிரியல் சந்தமானது பேணப்படுகின்றது. இதன் காரணமாகவே சூழலில் மாற்றங்கள் நிகழாத போதும் விலங்குகள் உயிரியல் சந்தத்தைக் காட்டுகின்றன. ஒரே மாதிரியான சூழற்காரணியில் ஒரு விலங்கை வைத்திருந்தாலும் அவை, ஒழுங்கான உயிரியல் சந்தத்தை காட்டுகின்றது. ஒரு மனிதனை ஒரு பூட்டிய அறையினுள் 24 மணித்தியாலங்களுக்கு வெளிச்சத்தில் அல்லது இருட்டினில் வைத்திருந்தாலும், அவன் இரவு நேரமானவுடன் தூக்கத்திற்கு சென்று காலை நேரமானவுடன் தூக்கத்திலிருந்து விழிக்கின்றான்.
உயிரிகள் எந்தவித சூழற் காரணிகளின் துணையுமின்றி தாங்களாகவே உயிரியல் சந்தத்தை ஒரு பொறிமுறை மூலம் பேணுகின்றன. இந்தப் பொறிமுறை உயிரியல் கடிகாரம் என அழைக்கப்படுகின்றது. உயிரியல் கடிகாரம் இரண்டு காரணிகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவது காரணி Zeitgeber அல்லது நேரம் வழங்குனர் (Time Giver) ஆகும். இது உள்ளிருக்கின்ற கடிகாரத்துடன் சூழற்காரணிகளை இணைக்கின்றது. இரண்டாவது காரணி பேஸ்மேக்கர். இது தனது சந்தத்தை தானே, சூழற் காரணிகளின் துணை எதுவுமின்றி பேணிக்கொள்ளும்.
சமீப காலம் வரை உயிரியல் கடிகாரம், அதன் உடற்றொழிலியல் சம்பந்தமாகமிகக் குறைவாகவே அறியக் கிடைத்திருக்கின்றது. இன்னும் பல்வேறு ஆய்வுகள் உயிரியல் கடிகாரத்தின் அமைவிடம் தேடி பல தசாப்தங்களாக நடந்து கொண்டிருக்கின்றன. கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகளில் நரம்புத் தொகுதி;யின் ஒப்ரிக் லோப் என்ற பகுதியிலும், முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் மூளையின் சுப்றா கியாஸ்மெற்றிக் நியுக்கிளியஸ் என்ற பகுதியிலும் பேஸ்மேக்கர் அமைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உயிரியல் கடிகாரம் செயற்படும் முறையைக் கண்டுபிடித்ததற்காக 2017ம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு இம் முறை ஜெப்ரி சி. ஹோல், மைக்கல் ரொஸ்பாஸ், மைக்கல் டபிள்யு யங் என்ற மூவருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தப் நோபல் பரிசிலிருந்தே உயிரியல் கடிகாரம் என்பது உயிரிகளுக்கும், அதன் உடற்றொழில்களுக்கும், நடத்தைகளுக்கும் மிக முக்கியமானது என்பது புலப்படுகின்றது.


Monday, September 18, 2017

வெள்ள அனர்த்தங்கள்: கற்றுக்கொள்ள வேண்டியவைகளிலிருந்து கற்கத் தவறிய பாடம்.


.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை).
உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்தங்களுள் வெள்ளப்பபெருக்கும் ஒன்றாகும். நதிகளில் நீர் நிரம்பி வழிந்து வெள்ளச் சமவெளிகளுக்கு மேலாக பாய்ந்து செல்லுதலை வெள்ளப்பெருக்கு எனக் கருத முடியும்.தொடர்ச்சியாக மழை பலநாட்களுக்கு பொழிந்து நீரேந்து பகுதிகளிலிருந்து அதிகரித்த நீர் ஆறுகளில் சேர்ந்து ஆற்று நீர் அதிகரித்து சூழவுள்ள தாழ் பிரதேசங்களினூடாக பாய்ந்து செல்லும்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.
வெள்ளப்பெருக்கு என்பது சாதாரணமாக நீரால் மூடப்படாத நிலப் பிரதேசங்கள் பல்வேறு காரணிகளினால்; நீரினால் மூடப்படுதல் என ஓரளவு வரையறுக்கலாம். இன்னொரு வகையில் ஒரு நிலப் பரப்பில் அளவுக்கதிகமாக அல்லது வழமைக்கு மாறான முறையில் நீர் நிறைந்து நில மட்டத்திலிருந்து நீர் வழியாமல் உயர்ந்த மட்டத்தினை கொண்ட நிலைமை என்றும் வரையறுக்கலாம்.
வெள்ளப் பெருக்கானது மழைவீழ்ச்சி, ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து அது தாழ்நிலங்களை நோக்கி செல்லுதல், பலமான காற்று, தாழமுக்கம், கடற் கொந்தளிப்பு போன்றவைகளினால் கடல்நீர் தரைக்குள் செல்லுதல், நிலநடுக்கம், எரிமலை, பனிக்கட்டி உருகுதல் காலநிலை மாற்றங்களினால் அதிக மழை ஏற்படல், காடுகள் அழிவடைதல், சட்ட விரோதக் கட்டிடங்கள் நீர்வழிப்பாதையைத் தடைப்படுத்துதல், தாழ்நிலங்களை நிரப்புதல், புவிவெப்பம் அதிகரித்தல், நீர்த்தேக்கங்கள் சேதமாக்கப்படுதல், ஒழுங்காகதிட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவை காரணமாக ஏற்படுகின்றது.
இலங்கையும் அடிக்கடி வெள்ள அனர்த்தத்திற்கு உட்பட்டு வரும் ஒரு நாடாக காணப்படுகின்றது. கொழும்பு, கேகாலை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை உட்பட இலங்கையின் பல பகுதிகள் அடிக்கடி வெள்ள அனர்த்தத்திற்குள்ளாகின்றன. இலங்கையில் பருவகாற்று நிகழும் காலங்களில்; வெள்ள அனர்த்தம் இடம்பெறுவது வழமையான நிகழ்வொன்றாக மாற்றம் பெற்றுள்ளது. வெள்ள அனர்த்தத்திற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. வெள்ள அனர்த்தம் இலங்கைக்கு மட்டும் பொதுவானது அல்ல முழு உலகிற்கும் தற்போது பொதுவானதாக மாறிவருகின்றது.
அண்மையில் அமரிக்காவின் ஹியுஸ்டனிலும், பிரான்ஸிலும், இந்தியாவின் மும்பையிலும், பீகாரிலும், 2015ல் சென்னையிலும் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தமானது காலநிலை மாற்றம், முறையற்ற திட்டமிடல், முறையற்ற நிலப்பயன்பாடு என்பனவற்றின் மொத்த விளைவாகும். உலகின் இனிவரும் எதிர்காலமும் இவ்வாறுதான் இருக்கும் என்பதற்கு கட்டியம் கூறிய நிகழ்வுகளாகவும் கருதப்படுகின்றது.
இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டதும், சுற்றுச் சூழலைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாததுமான உற்பத்தி, பொருளாதார முறைகளும், கட்டுப்பாடற்ற வளர்ச்சியும், நகரமயமாக்கலும் இந்த அனர்த்தங்களுக்கு பெரிதும் வழி கோலின என்றும் கருதப்படுகின்றது.
பெருகி வரும் மக்கள் தொகையால் ஹியுஸ்டன் நகரில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 2000 ம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டு மில்லியனாக அதிகரித்துள்ளது. ஹி;யுஸ்டன் நகரின் கடற்கரையைச் சுற்றி மழை நீரை உறிஞ்சக்கூடிய புல்வெளி பறந்து விரிந்திருந்ததாக 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகை கூறுகிறது. அங்குள்ள ஹேரிஸ் கவுண்ட்டியில் இருக்கும் வெள்ள நீர் வடிகால் பகுதிகளில் மட்டும் 2010 ம் ஆண்டிற்குப் பிறகு 8600 கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த சுற்றுச்சூழலுக்கு, அரைகுறையான அபிவிருத்தித் திட்டங்கள் மேலும் அதீத பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதற்கு சமீபத்தைய சென்னை வெள்ளம் ஒரு உதாரணமாகும். 2015 ம் ஆண்டு; பருவமழையால் சென்னை நகரமே நிலைகுலைந்து போனபோதும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட  புயலினால் வெள்ளம் ஏற்பட்டபோதும் அதிலிருந்து எந்த முன்னேற்றத்தையும் அவர்கள் கற்றுக்கொள்ளவும் இல்லை. இழப்புக்களை குறைக்க முயற்சிகள் எடுக்கவும் இல்லை.
ஹியுஸ்டனைப் போலவே சென்னையும் கடலோர வெள்ள வடிகால் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை நகரில் இருக்கும் இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால்களான நதிகள், ஓடைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் இருந்த நீர்நிலைகளே மழை மற்றும் புயல் வெள்ளங்களுக்கு எதிரான அரணாக உள்ளன. 1980 இல் 47 சதுர கிலோமீற்றராக இருந்த, சென்னை நகரில் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டிருந்த இடத்தின் பரப்பளவு, 2012 இல் 402 சதுர கிலோமீற்றராக இருந்ததாகவும், அதே காலகட்டத்தில் சென்னையின் சதுப்பு நிலத்தின் பரப்பளவு 186 சதுர கிலோமீற்றரில் இருந்து, 71 சதுர கிலோமீற்றராக குறைந்துள்ளதாகவும், கெயார் ஏர்த் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏரிகளும் குளங்களும் ஆற்றுப்படுகைகளும் ஆக்கிரமிக்கப்பட்டமை சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முக்கியக் காரணம் என்று 2015 இல் அமைக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது. இது மற்ற நகரங்களுக்கு எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்க வேண்டிய தருணம் என்றும் கட்டுமானத் தொழிலுக்காக சட்டவிரோதமாக நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் கும்பல்களை அரசு தடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருந்தும் சென்னையின் வடக்குப் பகுதியில் உள்ள எண்ணூர் கழிமுகம் பகுதி 8,000 ஏக்கர் பறந்து விரிந்திருக்கும் சதுப்பு நிலமாகும். சென்னையில் பாயும் மூன்று நதிகளில் ஒன்றான கொசஸ்தலை நதியின் வெள்ளநீரை அது உறிஞ்சுகிறது. 1996 முதல் 2000 வரை, ஒரு பெரிய துறைமுகம், பல நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் தேவைகளுக்காகவே அந்த சதுப்பு நிலப்பரப்பில் 1,000 ஏக்கருக்கு மேலாக விதிகளுக்குப் புறம்பாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஜூலை 2017 இல், தமிழக அரசின் காமராசர் துறைமுகத்தின் சார்பில் 1,000 ஏக்கர் பரப்பளவுள்ள கடலை ஒட்டிய நிலப்பரப்பில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதற்காக, போலியான வரைபடங்களை வைத்து ஒப்புதல் வழங்கி விதிமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் தொழிலாளர்கள், கொசஸ்தலை நதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும், எண்ணூர் சிற்றோடையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வசிக்கின்றனர். ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளாலும், இனிமேல் நடக்கவுள்ள ஆக்கிரமிப்புகளாலும் அவர்கள் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகக்கூடும். சென்னையில் உள்ள மணலி பகுதியில் ஒரு பெட்ரோலிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையும், டஜன் கணக்கில் பெட்ரோலிய வேதிப்பொருள் தொழிற்சாலைகளும் உள்ளன. அவை அனைத்தும் கொசஸ்தலை நதியின் வெல்ல வடிகால் பகுதியில் அமைந்துள்ளன.
கடந்த மாதமும், இந்த மாதமும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தென்னாசியாவெங்கும் 1.6 கோடிப் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நேபாளம், வங்காளதேசம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் 500 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஒரு அறிக்கை கூறுகின்றது.
இலங்கையும் வெள்ளப்பெருக்கும்:
இலங்கையில் வெள்ளப்பெருக்கு தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று மழை ஆரம்பிக்கும் காலப் பகுதியிலும், அயனச் சூறாவளி ஏற்படும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இடம்பெறுகின்றது. அதிக மழை வீழ்ச்சி பெறப்படுவதே அதற்கான காரணமாகம். இலங்கையின் ஈரவலயத்திலுள்ள களனிகங்ககை. களுகங்ககை. நில்வளகங்கை, கின் கங்கை, வளவை கங்கை ஆகிய நதிகளில் பெருமளவு வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. ஈரவலயத்தில் உற்பத்தியாகி உலர்வலயத்தில் நீண்டதூரம் பயணிக்கும் மகாவலி கங்கையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கிடையில் வட்டச் செயன்முறையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது விசேட அம்சமாகும். ஈரவலய ஆறுகள் பருவத்துக்கு பருவம் பெருக்கெடுத்தோடும் போதும், உலர்வலய சமவெளிகள் வெள்ள அனர்த்தத்துக்கு பொதுவாக உள்ளாவதில்லை. தாழமுக்கம் அல்லது பருவம் தப்பிய மழைகளால் உலர் வலயங்களில் ஏற்படும் வழமைக்கு மாறான வெள்ளப்பெருக்கானது ஈரவலயத்தில் ஏற்படும் பாதிப்பைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளின்படி 1940, 1957, 1963, 1978, 1989, 1992, 2003 களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளினால் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டன.
கடந்த காலங்களில் அடிக்கடி வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் நாடாக இலங்கை மாறிவருகின்றது. அதாவது சமீபகாலமாக அதிக மழைவீழ்ச்சியும், அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுதலும் ஒரு சாதாரண விடயமாக இலங்கையில் மாறிவருகின்றது. மற்றைய நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் போல் இலங்கையில் காணப்படாவிட்டாலும், அவ்வப்போது உதிரியாக சில ஆய்வு முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
அண்மையில் இலங்கையின் ஒரு நகரத்தில் வெள்ளப்பெருக்கு சம்பந்தமாக செய்யப்பட்ட ஆய்வின் மூலம், வெள்ளப்பெருக்குக்கு பௌதிக காரணிகளும் (7 %), மானிடக் காரணிகளும் (93 %) காரணமாக இருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. நகரமயமாக்கம் (60 %), அபிவிருத்தித் திட்டங்கள் (12 %), குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டுதல் (21 %) போன்ற காரணிகள் மானிடக் காரணிகளுக்கு காரணமாகின்றன. இந்த வெள்ள அனர்த்தத்தினால் சமூக பிரச்சினைகள் (49%), பொருளாதார பிரச்சினைகள் (34 %), சூழல் பிரச்சினைகள் (17 %) போன்ற சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்த ஆய்வானது, பின்வரும் தீர்வுகளையும் வெள்ள அனர்த்தத்தினை குறைப்பதற்காக முன்வைக்கின்றது. நதியின் மாசாக்கத்தினைக் குறைப்பதற்காக முறையான திண்மக்கழிவு அகற்றல் முறைமையினை பின்பற்றல், நதியின் அகலத்தை அதிகப்படுத்தல், கட்டுமான நடவடிக்கைகளினை முகாமை செய்தல், நதியில் முறையான சாய்வுப்பாதுகாப்பு முறையினை உருவாக்கல், பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி நதியின் பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பழித்தல், மாணவர்களுக்கு குறிப்பிட்ட நதி தொடர்பான செயற்திட்டங்கள் செய்ய ஊக்குவித்தல் போன்ற முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதனூடாக வெள்ள அனர்த்தம் ஏற்படுவதனை தடுத்து மக்களின் வாழ்வு நிலையினை எழில் மிகுந்ததாக மாற்றலாம்.
இலங்கையைப் பொறுத்த வரையில், மேலே குறிப்பிட்ட காரணிகளுள் திட்டமிடப்படாத வகையில் நடைமுறைப்படத்தப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களே முக்கியமான காரணியாக மற்றைய துணைக் காரணிகளுடன் சேர்ந்து இருக்கலாமென்று நினைக்கின்றேன்.
சுனாமிக்குப் பிறகு திட்டமிடப்படாத வகையில் கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட உள் வீதிகளைக் குறிப்பிடலாம். பல்வேறு காரணங்களால், அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒரே வீதியை பல தடவைகள் திட்டமிடாத வகைகளில் நிர்மாணித்தன. இதன் காரணமாக உள் வீதிகளின் உயரம் உயர, குடியிருப்பு வளவுகள் மேலும் தாழ்ந்து போயின. இதனால் பல ஆண்டுகளாக இயற்கை நீர் வடிகால் அமைப்பைக் கொண்டிருந்த பிரதேசங்களின் புவியியல் அமிசங்கள் மாற்றத்துக்குள்ளாகி உயர்த்தப்பட்ட வீதிகளினால் நீர் வடிந்தோடுவது தடுக்கப்பட்டு குடியிருப்புக்களில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. தாழ்த்தப்பட்ட வளவுகளை நிரப்புவதற்கு வசதியுள்ளவர்கள் வேறு இடங்களிலிருந்து மண்அகழ்ந்து கொண்டுவர வேண்டியிருந்தது. இதன் காரணமாக அகழப்பட்ட பிரதேசங்களும் வெள்ளப்பெருக்குக்குள்ளாகின. இதுபோல மண் அகழப்படும் ஆயிரக்கணக்கான இடங்கள் சட்டவரைமுறைகளுக்கு உட்படுகின்றனவா என்பதும் கேள்விக்குறியே. இந்த சட்டவிரோதச் செயற்பாடுகளும் மேலும் நிலைமைகளை மோசமாக்குகின்றன.
சமீபத்தில் உயரமாக அமைக்கப்பட்ட பெருந்தெருக்களும், விரைவு வீதிகளும், நீர்வடிந்தோடாமல் தடுத்து வெள்ளப்பெருக்கிற்கு பாரியபங்களிப்பினை வளங்கிக் கொண்டிருப்பதனை, ஒவ்வொருவருடமும் அவர்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் முயன்று தவறிகற்று புதிது புதிதாக மதகுகள், கான்கள் வைத்து திருத்தம் செய்வதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக அதற்கு ஒரு அல்லது இதற்கு ஒரு (உதாரணம்: கிராமத்திற்கொரு அபிவிருத்தித் திட்டம்) அபிவிருத்தித ;திட்டம் என்ற அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் வீதிகளை குறிப்பிடலாம். இந்தக் கொங்கிறீட் வீதிகள் இலங்கைக் காலநிலைக்கு உகந்தவையா என்று பேசாத அல்லது பேச அச்சப்பட்ட ஒரு பக்கமும் உண்டு. ஒரு வளவுக்குள் இருந்து இன்னொரு வளவுக்குள்ளும், ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கும் நீரை வடிந்தோடவிடாமல் ஒவ்வொரு வளவையும் சிறு குளங்களாக்கிய பெருமையும் இக் கொங்கிறீட் வீதிகளையேசாரும்.
அதீத பொலித்தீன் பாவனையும், அவை வெள்ளநீரை நிலத்தடி நீருடன்; சேரவிடாமல் தடுக்கின்ற தன்மையும் நிலைமையை இன்னும் மோசமாக மாற்றுகின்றது.
ஓவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்திற்கு இலங்கை உட்பட்டாலும், அது தருகின்ற கற்றுக் கொண்ட பாடங்களை சரியான முறையில் கவனத்திலெடுக்கத் தவறுவதால், மீண்டும் மீண்டும் அந்த அனர்த்தத்திற்கு ஆட்படுகிறோம்.
பேரழிவை உண்டாக்கும் வெள்ளத்தை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருதிக் கையாளப்படுவதைத் தவிர வேறு பாடங்களை யாரும் கற்றுக்கொண்டதாகத் தோன்றவில்லை. இந்தப் பேரழிவுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ள இயலாமல் இருப்பதைவிடவும், அவ்வாறு கற்றுக்கொள்ளாமல் இருப்பதால் யாருக்கு பயன், யாருக்கு பாதிப்பு என்பதே முக்கியம். ஏனெனில் பாடங்களை கற்றுக்கொள்ளாத தன்மையும் இன, வர்க்க வேறுபாடுகளுடன் சம்பந்தப்பட்டவையாகவே சமூகவியல் அடிப்படையில் கருதப்படுகின்றது. ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து, பணம் படைத்த மேல் தட்டு வர்கத்தினர் பழைய வாழ்க்கைக்கு உடனடியாக திரும்புகின்ற அதே வேளை, ஏழைகள் தாங்கள் பல தசாப்தங்களாக பெற்ற நம்பிக்கையை ஒரே நாளில் ஒரே பேரழிவில் இழந்துவிட்டு, தங்கள் வாழ்வை மீண்டும் கட்டமைக்கவோ, பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவோ முடியாமல் தவிக்கின்றனர்.
இறுதியாக கூறப்போனால், இந்தக் காரணிகள் எல்லாம் புதிய உலக ஒழுங்கு என்ற ஒருகாரணியுடன் சங்கிலித் தொடர்பு உள்ளவை போன்று தெரிகின்றன. இலாப நோக்கைக் கொண்ட உற்பத்தி முறைமைகள் எவ்வாறு உலகின் காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி அனர்த்தங்களுக்கு வழிகோலுகின்றதோ, அவைகளுடன்; சேர்த்து இலாப நோக்கைக் கொண்ட திட்;டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியவகையிலும் துரதிருஸ்டமாகவும் இந்த வெள்ளப்பெருக்கு அனர்த்;தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், வெள்ளப்பெருக்கின் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து பாடங்களைக் கற்று அதனை பிரயோகிப்பதற்கு நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது என்றும்  நினைக்கின்றேன்.








பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...