Monday, January 13, 2025

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

 வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுபவள்” நுாலுக்கு நான் அளித்துள்ள முன்னுரை.

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்
-அம்ரிதா ஏயெம்

இருபதாம் நூற்றாண்டின் பின்னரான கவிதை வளர்ச்சியில் நுண்கதையாடல்களும்
சொல்லல் முறை சார்ந்த செயல் நிகழ்த்துகைகளும் அதிக கவனத்தைப் பெற்று வருகின்றன. ஏற்கனவே இங்கு அதிகம் பாவனைக்குட்படுத்தப்பட்டிருக்கின்ற கவிதை சொல்லல் முறைகளாலும் யதார்த்த மையவாதத்தாலும் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகள் கண்களை கட்டிக் காட்டுக்குள் விட்டது போலவே இருக்கும். எனவே ஏ.நஸ்பபுள்ளாஹ்வின் பிரதிகளை வாசிப்புச் செய்ய நாம் ஏற்கனவே எங்களிடம் இருக்கின்ற மதிப்பீட்டுப் பெறுமானங்களையெல்லாம் தளர்த்த வேண்டியுள்ளது.

ஏ. நஸ்புஷீள்ளாஹ் தனது பிரதிகளில் பல அற்புதங்களை புனைவுச் செயல்களினூடாக நிகழ்த்திக் காட்டுகின்றார். படிமங்கள் மற்றும் குறியீடுகளால் வேயப்பட்ட இப்பிரதிகள் புதிய வாசிப்பு வெளியை அல்லது முறையை நோக்கி எம்மை அழைத்துச் செல்கின்றன. இவரின் கவிதைகளில் புனைவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலுள்ள எல்லைக்கோடு தெளிவற்றது. அத்துடன் இவரது கவிதைகள் யதார்த்தத்தின் மீதான தீவிரமான விமர்சனங்களையும் முன்வைக்கின்றது.

“நினைவு நகர்ந்து நகர்ந்து
கடலில் இறங்குகிறது
எனது படுக்கையறையிலிருந்து
நழுவிய நினைவு அது
பால்யம் தாழ்ப்பாள் இட்டுக் கொள்ள
பிரிந்து
ஒதுங்கிய நினைவு அது
இரவைக் கடப்பதைப் போல
அல்லது
ஒரு கடலைக் கடப்பதைப் போல
நினைவைக் கடக்க முடியவில்லை”

‘நினைவு’ என்ற இக்கவிதை புனைவுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தக் கவிதையில் ஏ.நஸ்புள்ளாஹ்வின் மொழி புனைவுகள் புரிந்து யதார்த்தங்களை கேள்விக் குள்ளாக்குகிறது. ஏ.நஸ்புள்ளாஹ்வின் அனைத்து புனைவுச் செயல்களும் விதந்து உரைக்கப்பட வேண்டியவைதான். இருந்தும் விரிவஞ்சி அவற்றில் சிலவற்றை மட்டும் நோக்குவோம்.
‘சவாரி’ யில் கவிதை சொல்லியின் மனம் குளம் ஒன்றின் ஓடமாய் மாறியதும் ஓடத்திற்கும் மனத்திற்கும் இடையிலான குழப்பத்தை நீக்க சில சொற்கள் மீன்களாக மாற்றப்படுகின்றன.

கவிதையில் இரவின் மேல் கவிதை சொல்லியின் நிழல் வைக்கப்பட்டதும் அந்நிழலைத் தாங்கிக் கொண்டு இரவு பறக்கின்றது. ‘கடல் றெக்கைகள்’ கவிதையில் கடலானது அலைகளை இறக்கைகளாக கற்பனை செகது கொண்டு பறக்கின்றது. ‘வளர்ப்புப் பூனை’ யில் சிகரெட்டுக்குப் பதிலாக நிலவைப் பிடித்து பற்ற வைத்ததும் வெளிவிட்ட புகையில் பூனை ஒன்று உயிர்த்தெழுகின்றது. ‘சம்பவம்’ கவிதையில் கற்பனைக்குள் நாவல் பிரதியன்று புனைவுச் சம்பவங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க அக்கற்பனையினூடே தவளைபாகந்து சம்பவங்களை நிறைவுக்கு கொண்டு வருகின்றது.‘மீன் மனசு’ கவிதையில் மனம் மீனொன்றாக மாறி குளத்தில் குதிக்கின்றது. இவ்வாறாக ஏ.நஸ்புள்ளாஹ்வின் பல புனைவுச் செயல்களை குறித்துரைக்கலாம்.

‘மகளுக்குப் பொழுது போகவில்லை’, ‘மின்மினிகளின் நகரம்’, ‘கனவுக்குள் நுழைதல்’ போன்ற கவிதைகளில் குழந்தைகளுக்கான வெளியை வழங்கி அதில் அவர்களுக்கான அன்பையும் ஆதரவையும் விளையாட்டையும் காட்டி அதில் நீண்ட பிரயாணமே செய்து காட்டுகிறார். ‘ரகசிய வலி’, ‘இடம்பெயர்வு’, ‘இலையின் கதை’ போன்ற கவிதைகளில் பறவைகளின் வாழ்விடங்கள் அழிப்பு போன்ற விடயங்களைக் கையிலெடுத்து தன்னைச் சுற்றி நடக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் மீது தனது கரிசனையையும் காட்டுகின்றார்.

‘சிற்பங்கள்’ போன்ற கவிதைகள் மனித மற்றமைகளுக்கு அச்சுறுத்தலான பிரபஞ்சவெளி குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தி பிரதிகளுக்குள் அந்நிலையினை மாற்றியமைப்பது சம்பந்தமாக பேசும்போது ‘மலையைத் தின்று முடிப்பவர்கள்’ போன்ற கவிதைகள் ஆன்மவியலைப் பேசுகின்றன. என்னைப் பொறுத்தவரையில் ஏ.நஸ்புள்ளாஹ் அற்புதமான ஒரு கவிதை சொல்லி. எந்த நேரத்தில் எந்த விடயத்தை எடுத்து கவிதையை சொல்லத் தொடங்குபவர் என்பதை யூகிக்க முடியாதவர். கனவிற்குள் சம்பவங்களைப் புனைந்து கவிதை சொல்லுவார். நினைவிற்குள் கவிதை சொல்லுவார். ஓவியம் வரைந்து கவிதை சொல்லுவார். புத்தகம் வாசித்துக் கவிதை சொல்லுவார். எழுதிய எழுத்துக்களாக சேர்த்தும் அழித்தும் திருத்தியும் இடம் மாற்றியும் கவிதைகளைச் சொல்லுவார். சொற்கள் அனைத்தும் தாங்களே தங்களுக்குள் உரையாடத் தொடங்கி அவைகளாகவே கவிதைகளை சொல்லுவதாகவும் கவிதை சொல்லுவார். (சில உதாரணங்கள்: ‘அத்துமீறல்’,‘பட்டாம்பூச்சியால் எப்படி?’, ‘மீன் மனசு’)

ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகள் இருண்மை நிறைந்தவை, உட்புக முடியாதவை என்ற கூச்சலுக்கு மத்தியிலும் அவர் ஆங்காங்கே கவிதைகளில் வாசகர்கள் பிரதிகளுடன் இடைவினை புரிவதற்கான வெளியையும் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார். அல்லது வாசகர்களுடன் கவிதைசொல்லி தொடர்பைப் பேசுகின்றார். தற்போது உலகின் பல எல்லைகளையும் மொழிகளையும் தாண்டி நிற்கும் ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகள் கொண்டாடப்பட வேண்டியவை என்பதோடு இந்தப் பிரதிகள் கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகளே எனலாம்.
அம்ரிதா ஏயெம்,
தென்கிழக்கு பல்கலைக்கழகம்,
இலங்கை.

விலங்குகள் பிளாஸ்ற்றிக், பொலித்தின் உண்ணுதல்


தவறுதலாகவும் அல்லது வேண்டுமென்றும் பொலித்தீன். பிளாஸ்ரிக் போன்றவைகளை உணவுடன் விலங்குகள் உண்ணும் நிலை மனிதனால் ஏற்படுத்தப்படுவதே வனசீவராசிகளுக்கும், விலங்குகளுக்கும் அழிவை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது. இதன் காரணமாக வருடாந்தம் இலட்சக்கணக்கான கடல்வாழ், தரைவாழ் உயிரிகள் இறந்தபோகின்றன. பொலித்தீன் அல்லது பிளாஸ்ரிக்குகளை விலங்குகள் உண்ணும் போது அவை கொண்டுள்ள நச்சுப்பொருட்கள் காரணமாக நோய்கள் உண்டாவதுடன், இனப்பெருக்கத்தையும் பாதிக்கின்றன. அத்துடன் விழுங்கிய பொலித்தீன் இரைப்பையின் பெரும்பகுதியை அடைப்பதால், பசி உணர்வைக் குறைத்து, குறைவான உணவை உண்டு, குறைந்த சக்தியைப் பெற்று, பலவீனமான நிலைக்கு உள்ளாகி மாதக் கணக்காக அல்லது வருடக் கணக்காக வருந்தி உயிரை இழக்கின்றன.

விலங்குகள் இறந்து உக்கிப்போனாலும், அவை உட்கொண்ட பொலித்தீன் உக்குவதற்கு 1000 வருடங்கள் எடுக்கும் என்பதை மனதி

ற்கொள்ளுவோம்.
விலங்குகள் பொலித்தீன் உண்பதைத் தவிர்ப்போம், ஆகக் குறைந்தது, பசித்த விலங்குகளுக்கு பொலித்தீனை அகற்றிவிட்டாவது உணவைக் கொடுப்போம்.

கூழா மரங்கள்

 அம்பாரை, மத்திய முகாம் பகுதியிலுள்ள கூழா மரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பழங்களை அதன் விதைகளுக்காக பெற முடிந்தது. அத்துடன் அந்த மரங்களுக்கு கீழே முழைத்திருந்த கூழாக் கன்றுகளையும் பிடுங்கி பைகளில் அடைக்க முடிந்தது.

Schleichera oleosa என்ற விஞ்ஞானப் பெயருள்ள, ஆங்கிலத்தில் Ceylon Oak எனவும், சிங்களத்தில் කෝන් எனவும், இந்தியத் தமிழில் கும்படிரி எனவும் அழைக்கப்படும், கூழா மரங்கள் மிகவும் அருகி வரும், மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தென்னாசியாவிற்குரிய மரங்களாகும். இதன் பழங்கள் சாப்பிடக்ககூடியவை. புளிப்புச் சுவையுடையவை. இதன் வித்து எண்ணெய்த் தன்மையானது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும், பல்வேறு தேவைகளுக்கு பயன்படுவதுடன், இந்த மரத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளும் பல்வேறு நோய்களைக் குணமாக்கப் பயன்படுகின்றன.
நன்கு தயாரிக்கப்பட்ட மண்ணை பொலித்தீன் பைகளிலிட்டு, அந்த பைகளில் விதைகளை விதைப்பதன் மூலம் அல்லது நாற்று மேடைகளில் விதைத்து நாற்றுக்களை பெறலாம். தேவையான இடங்களில் மீண்டும் நடும்போது, வேர்கள் அறுந்துவிடாமல் பாதுகாப்பது முக்கியமாகும்.
இன்னொரு முறையில் வித்தின் முளைவேரை கிள்ளிவிட்டு, விதைகளை நீரில் 24 மணித்தியாலங்களுக்கு ஊறவிட்டு, அல்லது 500 பீபீஎம் செறிவுள்ள GA3 கரைசலில் ஒரு இரவு முழுவதும் ஊறவிட்டு விதைக்கலாம். இதனால் முழை திறன் 80 தொடக்கம் 85 சதவீதம் அதிகரிக்கும். முழைத்தல் 15 தொடக்கம் 30 நாட்களுக்குள் முற்றுப் பெறும்.
கூழாவடி என்ற பெயருடனே தமிழ்பேசும் பிரதேசங்களில் நிறைய கிரதமங்களும், இடங்களும் உள்ளன. கூழா மரங்கள் போன்ற எங்கள் வாழ்வுடனும், கலாச்சாரத்துடனும் சம்பந்தப்பட்ட அருகிவரும் மரங்களைப் பாதுகாப்பது. மரபுரிமையைப் பாதுகாப்பதாகும்.











Tuesday, October 25, 2022

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

 ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்தப் பிரதேசத்தின் மயான அமைதியும், அமானுஸ்யத் தன்மையும், பல்வேறு நிறங்களிலும், வடிவங்களிலும் விரவிக் கிடந்த சிறு கற்களும், சமச்சீரில்லாத நிலங்களும், துாரத்தே தெரிந்த கறுத்த மலைகளும் (பின்னர் அது அல் ஹாஜர் மலைத் தொடர்களின் ஒரு பகுதி எனத் தெரிந்து கொண்டேன்) என்னை வெகுவாகக் கவர்ந்தன. அந்த இடம் றுஸ்தாக். இறங்கி துார நடக்கின்றேன். (தனிமையில் ஏதோவொன்றால் அவதானிக்கப்படுகின்றோம் என்ற மெல்லிய அச்சமும் இருந்தது). என்ன ஆச்சரியம் நிறைய பாறைக் கற்களில் உறைந்து போன உயிர்ச்சுவடுகளைக் (fossils) காண்கின்றேன்.

பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்கள், விலங்குகள், தாவரங்கள் புதைந்து இறுகிப் பாறையாக மாறுவது உயிர்ச்சுவடுகள் எனலாம். இவற்றில் நான்கு வகைகள் இருக்கின்றன. (அச்சு, வார்ப்பு, சுவட்டு, உண்மையான உயிர்ச்சுவடுகள் என வகைப்படுத்தலாம்). ஆறு வழிகளில் உயிர்ச்சுவடுகள் உருவாக வாய்ப்பிருக்கின்றன. அவற்றில் ஒரு வழி பாறை போன்ற கனிப்பொருட்கள் உயிரங்கிகளின் இழையங்களை ஊடுருவி, மென்மையான இழையங்களை சிலிக்கா, கல்சைற், பைரைட், போன்றவைகள் பிரதியீடு செய்து, அவ்வுயிரிகளை பாறைபோன்று மாற்றி பாதுகாக்கின்றன. பெரும்பாலான விலங்குகளின் என்புகளும், தாவரங்களும் இவ் வகையான உயிர்ச்சுவடுகளாக மாற்றப்படுகின்றன. நான் றுஸ்தாக்கில் அவதானித்ததும் இந்த வகைதான்.
அடிப்படையில், நான் ஒரு பரிணாம உயிரியியலாளன் என்பதை சற்று சத்தம் குறைத்து சொல்ல வேண்டியிருக்கின்றது. படத்தில் காண்பதும் பாறையாகிய இரு வகை மரங்கள்தான். இவைகள் கிடைப்பது அபூர்வம். ஆனால் அங்கு நிறைவாக கி்டக்கின்றது. ஆய்வுக்கும், கற்கைக்கும் அந்த இடம் சுவர்க்கம்.

Tuesday, August 3, 2021

தொலைதலின் இனிமை – 43 (இனிமையின் இறுதிப் பகுதி):

ஏ.எம். றியாஸ் அகமட்

ஒரு சூரியன் உதித்த அதிகாலையில் வடக்கு அல் சர்க்கியா மாகாணத்திலுள்ளவித்தியா என்னுமிடத்திலுள்ள சர்க்கியா அல்லது வஹிபா பாலைவனத்தை முடித்துவிட்டு அங்கிருந்து மஸ்கட் மாகாணத்திலுள்ள பிம்மாவிலுள்ள ஹவியத் நஜீம் எரிநட்சத்திரத்தின் கிணற்றுக்கு கூகிள் மெப் காட்டிய வழியில் ஒரு வாகனத்தில் இரண்டு தாய்கள், இரண்;டு தந்தையர்கள் அவர்களின் பிள்ளைகள் (17, 12, 7 வயதுகளயுடைய மூன்று பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை (வயது 13), இதில் ஒரு பிள்ளை நடக்க முடியாதவர். சக்கர நாற்காலி பாவிப்பவர்). இவர்கள் எல்லோரும் வழி தவறி, தொலைந்துவிடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் எவ்வாறு தொலைதலிருந்து மீண்டார்கள்? தொலைதலின் கசப்பு எவ்வாறு இனிமையானது? என்பதுதான் இந்த தொலைதலின் இனிமை தொடர்கள்.

எனக்குத் தொலைதல்கள் ஒன்றும் புதிதல்ல. தொலைதல்களை நான் விரும்புகின்றேன். அவை கற்றல் தரும். அறிவு தரும். அனுபவம் தரும். எம்மைப் புடம் போடும். ஆகவே தொலைதல்களை விரும்புகின்றேன்.

1980ம் ஆண்டு எனக்கு 7 வயது. பெற்றோருடன் பாடசாலையால் அம்பாறையில் நடந்த கம்முதாவ கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அது இலங்கையில் நடந்த முதலாவது கம்முதாவ (கிராமத்தின் உதயம்) கண்காட்சி. அங்கே நிறைய விடயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெற்றோருடைய கைகளைப் பிடித்துக்கொண்டே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்தேன். காட்டுன்கள் எனக்கு புதிதாக இருந்தன. பறவைகளும், விலங்குகளும் பேசின. ஒரு கட்டத்தில் ஆர்வமிகுதியால் அவர்களின் கையை உதறிவிட்டு, தனியே சென்று எல்லாவற்றையும் பார்த்து, முடித்து, திரும்பினேன். எல்லோரையும் தொலைத்துவிட்டு, நானும் தொலைந்திருந்தேன். அழுகை, அழுகையாய் வரப் பார்த்தது, வெள்ளைச் சேட், சாரன் போட்டவர் என்னைப் பார்த்தார். என்னைக் கூட்டிச் சென்று ஒரு மாடிக் கட்டடத்தின் என்னை கொண்டு ஒப்படைத்தார். அங்கே ஒருவர் (பின்னாளில் அது பீ.எச். அப்தல் ஹமீத் என தெரிந்து கொண்டேன்) இருந்தார். தெளிவாக உம்மா, வாப்பா, வீதி, ஊர் பெயர்களை கூறினேன். அவரும் அறிவித்தார். பின்னர் வாப்பா வந்து கூட்டிச் சென்றார்.

எனது மாமா பொறியியல் உதவியாளராக, பெருந்தெருக்கள்திணைக்களத்தில் மின்னேரியாவில், வேலை செய்தார். அவரின் அரசாங்க தங்கு விடுதி கதுருவெலயில் இருந்தது. 1990ன், ஆரம்பத்தில் நான் .பொ.. (சாதாரணதர) பரீட்சை எடுத்த பிறகு, இருந்த லீவு காலத்தில் அவருடன் தங்கியிருந்தேன். கதுறுவெலியிலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்கப்பாலுள்ள பொலநறுவையில் இலங்கையின் பழைய இராதானி கட்டடங்கள் இருந்தன. அது அழிவடைந்த சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான இலங்கையின் தலைநகர். பெரும்பாலான எனது பின்நேரங்கள் அந்த பழைய இராசதானியின், கல்விகாரை இடிபாடுகளுடனேயே கழிந்தன. (சைக்கிளிலேயே சென்றேன்). அந்தக் கல்விகாரைக்கு அருகிலுள்ள காடுகளுக்குள் அலைந்திருக்கிறேன். தொலைந்திருக்கிறேன். அங்கு குரங்குகளில் வெளிநாட்டுப் பெண் ஆய்வாளர் செய்த ஆய்வுகளை அருகிலிருந்தே அவதானித்திரக்கிறேன். அந்த ஆய்வுகளும், அவதானிப்புகளும் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டிருந்தன. இந்த அவதானிப்புகள் பின்னொரு காலத்தில் பட்டப்படிப்புக்காக குரங்குகளில் ஆய்வுகளைக் செய்வதற்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கின்றது. இந்த அனுபவங்களை எனது பதினேழாவது வயதில், 'எனது குரங்குத் தோப்பு அனுபவங்கள்' என எழுதிப் பார்த்திருக்கின்றேன். நன்றாக வந்திருந்தது. எழுதியது தொலைந்துவிட்டது என்றாலும் இப்போதைய எழுத்திற்கும், அப்போதைய எழுத்திற்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லைபோல் இப்போதும் தோன்றுகின்றது. விலங்கு நடத்தைகள், குரங்குகளின் இராச்சியத்தில், குளங்கள் போன்ற கதைகளுக்கு அடிப்படையாகவிருந்த தொலைதல்.

1993களில் பொதுவெளிகளில் பகிரமடியாத தொடர் தொலைதல்கள் இருந்தன. எனது தந்தையும், சாச்சாவும் (சித்தப்பா) என்னைக் கண்டுபிடித்து, மீட்டுக்கொண்டே இருந்த தொலைதல்.

1995களில் பல்கலைக்கழக முதலாவது வருடத்தில், ஹோட்டன் சமவெளிக்கு பிரயாணம் போனோம். பெரிய பேருந்துவண்டியில் வந்த நாங்கள், அதற்கப்பால் பெரிய வண்டி செல்ல முடியாததாகையால், அந்த இடத்திலிருந்து பத்து, பதினைந்துபேர்களாக குழுக்களாக சிறிய வாகனங்களில் சென்றோம். முதலாவது குழுவில், 10 பெண்களுடன் சென்ற நான், உலக முடிவு பார்க்கப் போய், அதனைப் பார்த்து, பார்த்தும் அதுதானென்று தெரியாமல், அதனை காட்டுக்குள் தேடி, வழி தவறி, தொலைந்து, அந்தப் பெண்களுடன் அடர்ந்த காட்டுக்குள் வழிதெரியாமல் அலைந்து திரிந்து, பின்னர் வந்த குழுவிலுள்ளவர்கள் எங்களை காணாது தேடி, ஆற்றின் நீரேட்டத்தை தொடர்ந்து வந்து மீட்ட தொலைதல்.

1998களில் கந்தளாய், பேராறு, கோமரன்கடவெல, ஹொரவப்பொத்தானகாட்டுத் தொகுதிகளில் எனது பல்கலைக்கழ இறுதி வருட ஆய்வுக்காக அங்குள்ளவர்களுடன் சேர்ந்து சுற்றியபோது, 'மாயமான்' என்னும் கதையாக வந்த தொலைதல்.

கண்டி மாநகரின் நடுவில் ஒரு அடர் காடு என்றால் யாரும் நம்பப் போவதில்லை. ஹந்தானையில், 2003ல், ஒரு இரவில், வழி தவறி நான் மீட்கப்பட்ட தொலைதல்.

2005களில், தென்னாபிரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்தபோது, அதற்கான ஆய்விற்காகவும், கள வேலைகளுக்காகவும் அருகிலுள்ள புமாலங்கா மாகாணத்திலுள்ள (பல்கலைக்கழகம் இருப்பது கௌடங் மாநிலம்) சவானா காடொன்றிற்கு என்னைக் கொண்டு சென்று விடுவது வழக்கம். அது மிகப் பெரிய காடு. அந்தக் காட்டிற்கு நடுவில், ஒப்பன்ஹைமர் என்ற தனவந்த கொடை வள்ளல் மரத்தினாலும், களிமண் சுவர்களினாலும், ஒருவகை கோரைப் புற்களினால் வேயப்பட்ட கூரைகளினாலான வசதிகள் நிறைந்த ஒரு விடுதியைக் கட்டி ஆய்வாளர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் இலவசமாக கொடுத்திருந்தார். மாலை 6.00 மணிக்கெல்லாம் விடுதியில் உள்ளடங்கிய எங்களுக்கு வரவேற்பறையின் முன்பகுதியில் கண்ணாடியாலான பகுதி எங்களைச் சுற்றியுள்ள விலங்குகளின் இராச்சியத்தைக் காட்டும். ஒரு நாளும் எந்தக் கெடுதியும் செய்ததில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவ்வித மனித சஞ்சாரமும் இல்லாத, தொடர்பிற்கு நோக்கியா 3310 மட்டுமேயுள்ள, நான் ஆய்வுகள் செய்ய வேண்டிய இடத்திற்கு என்னை பல்கலைக்கழக வாகனம் காலையில் இறக்கிவிட்டுச் சென்றுவிடும். எல்லாவகையான விலங்குகளும் சுற்றியிருக்கும். ஆரம்பத்தில் கொஞ்சம் கலக்கும். பின் பழகிவிடும். தொலைவில் மனித ஊசலாட்டத்தை உணர மனம் பதறும். நானும், சவானாவும் இறண்டறக் கலந்திருந்த, ஆளுயர புற்களுக்கிடையில் திரும்பிவரும் பொழுதுகளில் தொலைதலும், கண்டுபிடித்துச் சேர்தலுமாகி அற்புத வாழ்வு கலந்த தொலைதல்.

இப்போதைய காலங்களிலெல்லாம் அவ்வளவு இலகுவாக நாம்விரும்பினாலும், தொலைய முடியாது. ஒரு இடத்திற்கு செல்லும்போது, அந்த இடத்தின் வரைபடத்தை (map)  இன்னுமொரு தொடர்பிலக்கத்திற்கு அனுப்பிவிட்டு, தொலையக்கூடிய சாத்தியங்கள் ஏற்படும்போது நாங்கள் ஏற்கனவே அனுப்பிய மெப்பை பயன்படுத்தி எங்களை சரியான வழியில் தொலையாமல் இட்டுச் செல்லலாம். அதற்கு நெற்வேர்க்கும் தொலையாமல் இருக்க வேண்டும். மலேசியாவின் கெபொங், செலாங் டாருல்இசான் அயனமண்டல மழைக்காட்டில் ஒரு நாள் இந்த ஏற்கனவே சேமிக்கப்பட்ட மெப் ஒன்று மீட்ட தொலைதல்.

நான் காடுகளில் பசுமையாக்கம், மரநடுகை, விதைப்பந்து வீசுதல் என்று சென்றபொழுதெல்லாம் தொலைந்துபோகக்கூடிய சந்தர்ப்பங்களும், சாத்தியங்களும் இருந்திருக்கின்றன. கூடவருகின்றவர்கள், உத்தியோகத்தர்கள் யாராவது ஒருவர் எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றார்கள். யாராவது ஒருவர் எப்போதாவது தொலையாமலிருக்க குரல்களைத் தந்து கொண்டே இருக்கின்றார்கள்.

இப்போது 17ம் இலக்க மஸ்கட்-குறாயத்-சுர் பெருந்தெரு எங்களுக்கு நேரெதிரே சுமார் 3 கிலோமிற்றர் தூரத்தில் வந்துவிட்டது. நல்ல பாதை தொடங்கியது. வாகனம் வேகமாகியது. இப்போது கட்டடங்களும், மரங்களும் (பேரீச்சை) முளைக்கத் தொடங்கின. மனிதர்களும் பிறக்கத் தொடங்கினர்.

17ம் இலக்க மஸ்கட்-குறாயத்-சுர் பெருந்தெருவை பின்ஸ் இடத்தில் எங்கள்வாகனம் சந்தித்தது. பெருந்தெருவின் நாற் சந்தியை சந்தித்தது. 400 மீற்றர் தொலைவில் நேரே இந்தியப் பெருங்கடல் ஆர்ப்பரித்து ஓசையுடன் எங்களை வரவேற்பது போலிருந்தது. இதுதான் உங்கள் இறுதிப் போக்கிடம் இதற்கப்பால் நீங்கள் செல்ல முடியாது என்று சொல்வதைப் போலிருந்தது.

இடது பக்கம் திரும்பி 150 கிலோமீற்றர் தூரம், ஒன்றரை மணித்தியாலம் சென்றால் மஸ்கட், வாதி அல் கபீர் வீட்டை இலகுவாக அடைந்துவிடலாம். பெற்றோர்கள் மனநிலை அப்படியே இருந்தது. அவர்களின் மனங்கள் மிகவும் களைத்தும்;, அலுத்தும் போயிருந்தன. ஒரு பக்கம் பசியாகவும், தாகமாகவும் இருந்தன. வீடு திரும்பவே பெற்றோர்கள் ஆவலாக இருந்தனர்.

அதே இடது பக்கம் செல்லும்போது, பின்ஸ் சந்தியிலிருந்து 5, 6 கிலோமீற்றர் தொலைவில் வலதுபக்கம் திரும்பினால் வாதி அல் சாப், ஹாவியத் நஜீம் (70 மீற்றர்கள் உயரமும், 50 மீற்றர்கள் அகலமும், 20 மீற்றர்கள் ஆழமும் கொண்ட எரிநட்சத்திரத்தின் ஆழ் கிணறு) போன்றவைகளும் இருந்தன.

பெற்றோர்கள் வீடு என்றபோது (வலதா? இடதா? என்றபோது), பின்னாலிருந்த பிள்ளைகள் 'இல்லை, வலது பக்கம் பிம்மாவின் ஹாவியத் நஜீம் (எரிநட்சத்திரத்தின் ஆழ் கிணறு)' என்றார்கள். யாருமே பார்த்திராத களைத்துப் போயிருந்த கணத்தில் பிள்ளைகளுடன் புன்னகைகளைப் பரிமாறிக்கொண்டேன். இடது பக்கமாக சென்றுகொண்டிருந்த வாகனம் ஹாவியத் நஜீம் நோக்கி வலது பக்கம் திரும்புகின்றது. பயணங்களும் முடிவதில்லை. தொலைதல்களும் முடிவதில்லை. தொலைதல்களும் தொடரப் போகின்றன. அதன் இனிமைகளும் தொடரப் போகின்றன.

'தொலைதல் என்பது அறிவு, அனுபவம், கற்றல், கற்பித்தல், திறமை, நுட்பம், புதுமை, தைரியம்'

-முற்றும்





கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...