Thursday, July 28, 2016

தந்தைகளும் மகள்களும்



தந்தைகளும் மகள்களும்
தந்தைகளுக்கு மகள்கள் ஒளிந்திருக்கிற இடம் தெரிந்தும் இல்லாத ஒவ்வொரு இடமாய் தேடுவார்கள். கடைசியில் மகள்களே காட்டித் தருவார்கள். தந்தைகள் நடிகர்களாகி தோற்றுப் போவார்கள். மகள்கள் தோற்றுப்போக எந்த தந்தைகள்தான் விரும்புவர்.

Wednesday, July 27, 2016

மஹா சொப்பனத்தின் கொடுங்கனவு

மஹா சொப்பனத்தின் கொடுங்கனவு


நான் தற்போது வேலை செய்யும் இடத்தில் இறுதியாண்டு பரீட்சை எழுதிவிட்டு வேலைக்கு சேரும் வரை, எனது பிரதேசத்தில் அமையவிருந்த துறைமுகம் ஒன்றிற்கான சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கைக்காக ஆய்வு உதவியாளராக குறுப்பிட்ட காலம் வேலை செய்தேன். துறைமுகம் அமைக்கப்பட போவதால் கடலில் உள்ள உயிரினங்களுக்கும் தரையில் உள்ள உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் சமூகத்திற்கும் சூழற்றொகுதிகளுக்கும் என்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது பற்றிய ஆய்வாகும். மேற்கூறிய பிரதேசம் கடல்வளமும் மீன்வளமும் நீர் வளமும் நில வளமும் வனவளமும் (கண்டல்) நிரம்பிப் பொங்கி நான் தவழ்ந்து திரிந்த இடமாகையால் மிகுந்த உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வேலை செய்தேன்.


சொ.வே. செ.வே


மஹா சொப்பனத்தின் கொடுங்கனவு

இயற்கையை சேர்ந்தால்
வழி கிடைக்கும்
இயற்கையை சோர்ந்தால்
வலி கிடைக்கும்.

Tuesday, July 19, 2016

ஜமீலுடைய (தாளில் பறக்கும் தும்பி), குர்சிதுடைய (விசித்திரங்களால் நிறமூட்டப்பட்ட உலகு) பிரதிகளின் உளவியல் அணுகுமுறையின் ஒத்துணர்வு (Empathy) களை முன்வைத்து.



ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஸ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை.

உள்ளத்தின் கோலங்களையும், கோணங்களையும் அதன் காரணமாக ஏற்படுகின்ற விளைவுகளையும் ஆராய்கின்ற விஞ்ஞானமே உளவியல் எனப்படும். இது பொது, ஒப்பு, பிறழ்வு, உடற்றொழிலியல், சமூக, கல்வி, பணிசெய்யும் இட உளவியல் என்று பல வகைப்படும். 

இலக்கியம் ஒரு படைப்பாளியின் கைதேர்ந்த செய்திறனால் மட்டுமல்ல பிரத்தியேகமான ஒரு மனவெழுச்சியினாலும் உருவாவதாகும். ஒருமனத்தின் வழியாக இன்னொரு மனத்துடன் அது பேசுகின்றது. மனித வாழ்வின் அனுபவங்களையும், அவற்றிற்கு அடிப்படையாக உள்ள மனத்தையும், ஆழமாகவும், அழகாகவும், சித்திரிக்க முயல்கின்றது. இலக்கியம் உள்ளம் சம்பந்தப்பட்டதாகையால் உளவியல் அதில் அக்கறை கொள்கின்றது. ஏனெனில் மனித உள்ளத்தின் உணர்வே எல்லா அறிவியல்களுக்கும் கலைகளுக்கும் மூல காரணமாக அமைகிறது. எனவே உள்ளத்தை ஆராய்கிற உளவியல் இலக்கியத்தையும் ஆராய வேண்டும்.

உளவியல் திறனாய்வுக் கொள்கை, இலக்கியத்தின் மனநிலை தொடர்பான பல அம்சங்களிலும், தனது கவனத்தை செலத்துகின்றது. இலக்கியத்தின் அல்லது படைப்பின் புரியாத இடங்களைப் புரிந்து கொள்ளவும், முக்கியமான உட்பொருட்களை குறிப்பிட்ட கோணத்தில் விளங்கிக் கொள்ளவும், பெரிதும் உதவுகின்ற இவ் உளவியல்நெறி, இலக்கிய கோட்பாட்டிலும், திறனாய்வுக் கோட்பாட்டிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த அடிப்படையில் ஜெமிலீன் தாளில் பறக்கும் தும்பி (xi + 69 பக்கங்கள், புதுப்புனைவு பதிப்பகம், மருதமுனை), ஏ.எம். குர்சித்தின் (விசித்திரங்களால் நிறமூட்டப்பட்ட உலகு (xvi + 80  பக்கங்கள், புதுப்புனைவு பதிப்பகம், மருதமுனை) உளவியல்முறைகொண்டு திறனாயலாமென நினைக்கின்றேன்.

எளிதில் நொறுக்கப்படக்கூடிய விளிம்புநிலையில் உள்ள பெண்கள், சிறுவர்கள் தேவைகள், பிரச்சினைகள் பற்றி யாரும் பேசுவதுமில்லை, பெரிதாக கவனமெடுப்பதுமில்லை, அதிலும் சிறுவர்கள் பற்றி எளிதில் பாடுவதுமில்லை. பாடுபொருளாக கொள்வதுமில்லை. கவிஞர் ஜெமில் நீண்ட காலமாக சிறுவர்கள் தொடர்பில் தனித்து கவனம் செலுத்துபவராக கவனத்திற்கொள்ளப்படுபவராக இருந்து வருகின்றார்.

தாளில் பறக்கும் தும்பியில் சிறுவர்களின் விருப்பு, வெறுப்பு, முறையிடுதல், குதூகலிப்பு, துயருறுதல், கனவுலகம், கழிவிரக்கம், காருண்யம், கற்பனை உத்திகள், வகுப்பறை செயலுர்க்கங்கள், வெளிநடத்தைப் பிறழ்வுகள்,  உளவியல் சிக்கல், நுணுக்குமான பார்வை அல்லது அவதானம், பிரிவின் நீட்சி, ஏங்கித் தவிப்புறுதல், குழi;நதைக்கும் இயற்கைக்கமான நெருங்கிய உறவு, ஆசை, பாசம், கோபம், கவலை, ஏக்கம், அவதானம், கற்பனை, வகுப்பறை, வெளி நடத்தைகள், காவோலை குருத்தோலை நடத்தைகள், துஸ்பிரயோகம், உளவியற் பிரச்சினைகள், குழந்தைகளுக்கும் இயற்கைக்குமான உறவு, பிரிவு போன்றவைகள் போன்றவை பாடுபொருள்களாக உள்ளன.

ஏ.எம். குர்சித்தின் விசித்திரங்களால் நிறமூட்டப்பட்ட உலகோ, யாருடைய ஒப்பனையும் பாவனையுமில்லாத தனக்கேயுரிய தனி மொழியொன்றுடன் வலம்வருகிறது. இவரது கவிதைகள் பாவஒப்புக்கோடலாய் பெண்ணுணர்வுகளை உள்வாங்கி வலிகளாய் வெளிப்படுகின்றன. குரல்வளை நெரிபட்டுக்கொண்டிருப்பவர்களின் குரல்களாயும் கேட்கின்றன. மேலும் எதிரே நடப்பவற்றுக்கு ஏதும் செய்யவொண்ணா பெருமூச்சுகளாயும் வெளிவருகின்றன. 


உணர்வுகளிலும், உற்சாகத்திலும் அனுபவங்களை உள்வாங்கிப் புலப்படுத்துவதில் ஏனைய படைப்பாளிகளிலிருந்து கவிஞர்கள் வித்தியாசப்பட்டவர்கள் என்றும், கவிதை ஒரு வித்தியாசமான மனவெழுச்சியினால் உருவாக்கப்படுகின்றது என்றும் கருதப்படுகின்றது. கலைப்படைப்பின் உள் அமிழ்ந்த பொருள்களையும், ஒரு மனிதன் என்ற முறையில் படைப்பாளியின் மனவுணர்வுகளையும் விளக்க முடியுமென்கின்றார் பிராய்ட்.


பிறருடைய மனவுணர்வோடு தன்னுடைய மனநிலையானது உணர்வு அடிப்படையில் ஒத்துப் போதலை ஒத்துணர்வு குறிப்பிடுகின்றது. அத்தகைய சூழ்நிலைகளில் உள்ள ஒருவரைக் காணும்போது, படைப்பாளர்களே அச் சூழ்நிலைகளில் தங்களை ஏற்றிக் கொள்கின்றனர். அப்போது அவர்கள் பெறக்கூடிய அல்லது அப்படிப் பெறுகிறார்கள் என்று எண்ணக்கூடிய உணர்வுநிலைளை வாசகர்களும் பெறுகிறார்கள். இவ்வாறு பிறருடைய உணர்வுகளிலும், ஒருமித்து அவர்களுடன் தன்னை, தனது உணர்வுகளை ஒரு சேர இனங்காண்பதே ஒத்துணர்வாகும் (emphathy). இன்னொரு வகையில் சொல்லப் போனால் இன்னொருவரது இடத்தில் இருந்து கொண்டு அதே வலியை, அதே உணர்வை புரிந்துகொள்ளும் பண்பு என்று வரைவிலக்கணப்படுத்தலாம்.

படைப்பாளனுக்கும், அனுபவவாளனுக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது. மேலும் படைப்பாளனுடைய மொத்த மனநிலை, கடந்த கால அனுபவங்கள், விருப்பங்கள், சூழ்நிலைகள், இந்த அறவியல் ஒத்துணர்வு முற்றிலும் விடுபடுவதில்லை. இவ்வாறான அழகியல் ஒத்துணர்வின்போது படைப்பாளன் முதலாம் நிலை அனுபவஸ்த்தர்களில் தங்களை மறந்து ஒன்றிப் போய்விடுகிறார்கள். இத்தகைய அழகியல் ஒத்துணர்வின் அடிப்படையிலேயே கலை இலக்கியம் பிறப்பெடுக்கிறது என்று கருதப்படுகிறது. மேலும் வாசகனை பிரதிகளின் மேல் அல்லது படைப்புக்களின் மேல் கவரச் செய்ய இந்த அழகியல் ஒத்துணர்வு காரணமாக இருக்கிறது. மேலும் உளவியலாளர்கள், திறனாய்வாளர்கள், வாசகனுக்கும், இலக்கியத்திற்குமுள்ள உறவை அக்கறையுடன் நோக்குகிறார்கள். வாசகனின் படைப்பு சார்ந்த ஆர்வ நிலைக்கு, குறிப்பிட்ட படைப்போடு, அல்லது இலக்கியத்தோடு ஓரளவாவது உள்ள ஒத்துணர்வே காரணமாகுமெனலாம்.

ஜமீலுடைய பிரதியிலும், குர்சித்துடைய பிரதியிலும் ஒத்துணர்வுகளே அதிகம் காணப்படுகின்றன. மற்றவர்களின் பிரச்சினைகளை, வலிகளை, துன்பங்களை அவர்களிடத்தில் இருந்துகொண்டு அதே பிரச்சினைகளை, வலிகளை, துன்பங்களை புரிந்துகொள்கிறார்கள். இது அவர்களுடைய உளப் பண்பைக் காட்டி நிற்கின்றது.

நனவிலி மனத்தின் ஒரு வெளிப்பாட்டு முறையாக படைப்பு வழிமுறைகளைக் கருதலாம். ஜமீலுடையதும் மற்றைய பிள்ளைகளினதும் பிள்ளைப் பருவத்தின் குழந்தைத் தனமான விளயாட்டுக்கள், வயது ஏறிய பிறகு விநோதப்படுத்தலில் ஈடுபட்டு, சாதாரணமான சங்கதியை, செய்தியை, செயலை, சாதாரணமாக இயல்பாகப் பார்க்காமல் ஓர் அற்புதமான, மாயமான, ஆற்றலாகவும், பொருளாகவும், ஓர் கனவுத் தோற்றத்தின் தன்மையோடு ஜமீல் பார்க்கிறார். அவருடையதும், மற்றையவர்களினதும் பிள்ளைப் பராயத்து ஏக்கங்களும், ஏமாற்றங்களும், ஓரங்கட்டல்களும் உள்ளார்ந்த காரணங்களாக இருக்க முடியும். இன்னும் இவரது விளிம்போர பிரம்மைகள், பயம், விரக்தி இருண்மை முதலானவற்றை அவருடைய சுயவாழ்க்கையின் பிரத்தியேக நிலைகளாகப் பார்க்கலாம். 

பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் கோர்வைகளைக் கொண்ட பெண்நிலைச் சிந்தனைகளை குர்சித் உள்வாங்கி வெளிப்படுத்தி நிற்கிறார். எந்நதளவுக்கு பெண்களின் பிரச்சினைகளை ஆண் பெண்ணாக உருமாறி வெளிப்படுத்த முடியும் என்பதில் பல்வேறு கருத்துநிலைகள் காணப்படுகின்றன. அவரது பிரதி ஏற்படுத்தும் நேர்மை, அதில் சந்தேகம் கொள்வதை பெரும்பாலும் குறைக்கிறது. இங்கு ஒத்துணர்வு ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றே கருதுகின்றேன். ஆண்கள் செய்த பாவங்களுக்காய் பெண்ணாக மாறி பாவ ஒப்புக்கோடலாய் மாறிய ஒத்துணர்வுக் கவிதைகளுக்கும் அவரின் படைப்பின் உளவியலுக்கும் இடையே சிறிய கடக்கக்கூடிய இடைவெளிதான் காணப்படுகின்றது. இதே போன்ற இடைவெளிதான் சமூக அன்றாட நிகழ்வுகளில் சிறுவர்களின் பிரச்சினைகளைகளை தனது கவிதைகளில் கொண்டு வந்த ஜமீலிடமும் காணப்படுகின்றதென்றால் அது மிகையல்ல.


மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்


மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்










Monday, July 18, 2016

நஞ்சினில் விளையவோ



நஞ்சினில் விளையவோ - ஒரு வீதி நாடகமும், சில குறிப்புகளும்.



பிள்ளை அழுத கண்ணீர்




பிள்ளை அழுத கண்ணீர் - நாடகம் விஞ்ஞானம் பரப்பலில் புதிய உத்தி! புதிய வரவு!



கபானி


நான் மொழிபெயர்த்த சீ.எஸ். சந்திரிகாவின் கபானி என்ற சிறுகதை ( பெண் (2000) தொகுதி 05 இல 02).










பெண்

நான் மொழிபெயர்த்த Jamaica Kincaid யின் பெண் என்ற சிறுகதை ( பெண் (2000) தொகுதி 05 இல 04).



மகள் - 04

சிறகுகள் சிதைந்த 
சிறு பறவை ஒன்று
நிறை பறவைகளுடனும்,
முதிர் பறவைகளுடனும்
வானத்தை தொட்டுவிட போட்டி
சற்றும் சளைக்காமல்
வானத்தை வென்றது.
மகளே
வெல்லாதிருந்திருந்தாலும்
பங்குபற்றி எதிரிக்கு
நெருக்கடிகொடுத்த
வரலாறு முக்கியம்.
உனக்கான உலகில் 
சமனான சிறகுகள் இல்லாது போனாலும்
ஒரு இரவில் 
உன் சிறகுகள் உதிர்ந்து தொலைந்தாலும்
ஒரு வேளை பறக்கவே முடியாது போனாலும்
நீ வானம் தொடுவாய்
ஏனெனில் 
நீ அக்கினிச் சிறகின் குஞ்சு.





ஆறு

நான் கால் தழுவி 
குனிந்து கழுவி 
ஸ்நானம் செய்து 
மீன் பிடித்து
 தவளை துரத்தி 
முதலை விலக்கி 
அமிழ்ந்து நீந்தி 
சுழியோடி 
பட்டங்கள் எடுக்க 
காலாக இருந்த ஆறு. 
ஐந்தாகி
நான்காகி 
பின் மூன்றானது. 
இரண்டாகி 
ஒன்றாகுமுன்னே 
ஒன்றாகுவோம்.

மகள் - 03

பெற்றதால்
பெற்றது
இத்தினம்
மகளே!

மகள் - 02


ஒரு நூற்றாண்டுத் தனிமையின்

இருண்ட அடர்வனத்தின் குகையில்


சிறைப்பட்டிருந்தபோது


எனைமீட்டு எழுதவைத்த மகளே!


மகள் - 01

ஒரு பெரும்பிரளய
நீளவால் நுனி நச்சுச்சாம
அதிகாலையின்
பொசு பொசுத்த பூனைக்குட்டியென
வந்துதித்த மகளே.
பின்னொரு நாளில்
உன் கால்கள் தொலைந்ததை
வடக்கிலும் கிழக்கிலும்
மேற்கிலும் தெற்கிலும்
மேலும் கீழும் தேடியலைந்தோம்.
நமது வீட்டின் சூரியக் கதிர்கள்
என்றும் படாத எனது கால்களுக்குள்
உனது கால்கள் ஒழிந்திருப்பதாக
கண்டனர்.
வீட்டு முன் பெருந்தெரு நேர்கோட்டின்
ஆர்ப்பரிக்கும் நீலக்கடலை
கண்களால் ஒருமுறையேனும் விழுங்கிட
தூரிகைப்புல் நுனி தேன்குடிக்கும்
தும்பியின் வாலுடன் பறந்திட
ததும்பிய குட்டையின் வாலாந்தவளையை
வாரியணைத்து நீந்திட
வலசை போகும் வண்ணத்துபூச்சிகளின்
வண்ணங்களில் குழைந்தெழுந்து நடனமாடிட
அயல் வேம்பின் குயிலொடு குரலிட
ஆடு விரட்டி குழை கொடுத்திட
மாடு துரத்தி பின் வாங்கிட
பள்ளிசெல்பவர்களுக்காவது ஒரு கையசைத்திட
பத்துநாள் பட்டினியோடு
பசியாக பரதேசிபோல்
உன் கால்களுக்காக
விழிமேல் வழிவைத்து பாத்திருப்பாய்.
மகளே
கோப்புகளுக்குள்ளும் நூல்களுக்கும்
கூடங்களுக்குள்ளும் கூட்டங்களுக்கும்
சிக்கிக்கொண்ட எனது கால்கள்
உனக்கு மட்டும் சொந்தமல்ல.


யானைகள்
  -அம்ரிதா ஏயெம்


உயரக் கிளைகள்
முறிந்து கீழக்கிடக்கும்.
சிறு விலங்குகள்
அரைத்து உண்ணும்.
பதைத்த உயிர்கள்
பாங்காய் பசியாறும்.
காலால் உதைத்து
நீர் சுரக்கும்.
தகித்த உயிர்கள்
தாகம் போக்கும்.
கோடையின் கொடுமையோ
மெல்லக் குறையும்.
மலையாய் விட்டை
எங்கும் விரவிப்போடும்.
காடு சீராட்டி
உயிர் வளர்க்கும்.
ஊட்டுவதால் தாயாகும்.
உதவுவதால் நண்பனாகும்.
காப்பதனால் காவனாலாகும்.
யானைகள் நம்
சூழலின் தோழனாகும்.
வணங்கப்படு பொருளாகும்
வேட்டையின் இலக்காகும்
பேரசர்களின் பெருமையாகும்
போரின் இயந்திரமாகும்
கலாசார சின்னமாகும்
கலைகளின் கோலமாகும்
வளர்த்தலில் மித்துருவாகும்
மிரளலில் சத்துருவாகும்
சுமைகளின் தாங்கியாகும்
தாங்கவொண்ணா சுமையுமாகும்
யானைகள் நம்தோழனாகும்.

யானைகள்

யானைகள்
     - அம்ரிதா ஏயெம்

உயரக் கிளைகள்
முறிந்து கீழக்கிடக்கும்.
சிறு விலங்குகள்
அரைத்து உண்ணும்.
பதைத்த உயிர்கள்
பாங்காய் பசியாறும்.
காலால் உதைத்து
நீர் சுரக்கும்.
தகித்த உயிர்கள்
தாகம் போக்கும்.
கோடையின் கொடுமையோ
மெல்லக் குறையும்.
மலையாய் விட்டை
எங்கும் விரவிப்போடும்.
காடு சீராட்டி
உயிர் வளர்க்கும்.
ஊட்டுவதால் தாயாகும்.
உதவுவதால் நண்பனாகும்.
காப்பதனால் காவனாலாகும்.
யானைகள் நம்
சூழலின் தோழனாகும்.
வணங்கப்படு பொருளாகும்
வேட்டையின் இலக்காகும்
பேரசர்களின் பெருமையாகும்
போரின் இயந்திரமாகும்
கலாசார சின்னமாகும்
கலைகளின் கோலமாகும்
வளர்த்தலில் மித்துருவாகும்
மிரளலில் சத்துருவாகும்
சுமைகளின் தாங்கியாகும்
தாங்கவொண்ணா சுமையுமாகும்
யானைகள் நம்தோழனாகும்.


கண்டல் காடுகள் (Mangroves).
- அம்ரிதா ஏயெம்

பச்சை பச்சையாய்
இலைகள் பளபளத்துக் கைகள் காட்டும்.
மிண்டி வேரும் உதைப்பு வேரும்
காவல்காரர்களாய் நிற்கும்.
மீன்கள் மரமேறி
பின் வழுக்கி கீழே விழும்.
நண்டுகளும், நத்தைகளும்
ஊரிகளும், மட்டிகளும்
பெருநடையில் படையெடுக்கும்.
பாம்புகளும் முதலைகளும்
ஓடிப்பிடித்து விளையாடும்.
இறால்களும், மீன்களும்
துள்ளிக்குதிக்கும்.
ஒரு பறவை மீன்களைக்
கௌவக் கொத்தும்.
பின்னொரு பறவை முட்டையிடும்
குஞ்சும் பொரிக்கும்.
நாளுக்கு பலமுறை
நீரோ ஏறியிறங்கும்.
குடியானவனின் வாழ்க்கையோ
ஏறியிறங்காமல் ஓட்டும்.
இந்த அற்புத வனம்
அழகுமிகு கண்டல்வனம்.


கண்டல் காடுகள் (Mangroves).
  - அம்ரிதா ஏயெம்

பச்சை பச்சையாய்
இலைகள் பளபளத்துக் கைகள் காட்டும்.
மிண்டி வேரும் உதைப்பு வேரும்
காவல்காரர்களாய் நிற்கும்.
மீன்கள் மரமேறி
பின் வழுக்கி கீழே விழும்.
நண்டுகளும், நத்தைகளும்
ஊரிகளும், மட்டிகளும்
பெருநடையில் படையெடுக்கும்.
பாம்புகளும் முதலைகளும்
ஓடிப்பிடித்து விளையாடும்.
இறால்களும், மீன்களும்
துள்ளிக்குதிக்கும்.
ஒரு பறவை மீன்களைக்
கௌவக் கொத்தும்.
பின்னொரு பறவை முட்டையிடும்
குஞ்சும் பொரிக்கும்.
நாளுக்கு பலமுறை
நீரோ ஏறியிறங்கும்.
குடியானவனின் வாழ்க்கையோ
ஏறியிறங்காமல் ஓட்டும்.
இந்த அற்புத வனம்
அழகுமிகு கண்டல்வனம்.

முருகைக் கற்கள்



முருகைக் கற்கள்

- அம்ரிதா ஏயெம்

நீலத் திரையின் கீழே
மச்ச வெளியின் ஊடே
வண்ணங்கொண்டு குழைத் தெடுத்த
ஒரு ஓவியக்காடு.
வெண்மையாயொரு காடு
உறுதியாய் தாங்க
பசுமையாயொரு காடு
ஒளி தொகுக்க
நீலமாயொரு காடு
இரையாக மாற
கருமையாயொரு காடு
இரை கொல்லியாக
செம்மையாயொரு காடு
திகில் கொடுக்க
மண்ணிறமாயொரு காடு
வன்முறைகள் செய்ய
மஞ்சளாயொரு காடு
மறைந்து ஒழிக்க
நடத்தைக் கோலங்களின்
கும்மாளம்
வண்ணங்கொண்டு குழைத் தெடுத்த
ஓவியக்காடு.

பஞ்சபூதம் ஒரு யதார்த்த மாயாதந்திர யதார்த்தவாத (Realistic magical realism) நேர்கோட்டு நேர்கோடற்ற (Linear non-linear) பிரதி.

பஞ்சபூதம் ஒரு யதார்த்த மாயாதந்திர யதார்த்தவாத (Realistic magical realism) நேர்கோட்டு நேர்கோடற்ற (Linear non-linear) பிரதி.

அம்ரிதா ஏயெம்.


1. நாவலின் தாவரவியல் பெயர் Syzygium. நாவல் மத்திய கோட்டு அமரிக்கா, அவுஸ்தரேலியாவை பூர்வீகமாகக் கொண்டு உலகெங்கும் பரவி 1100 இனங்களைக் கொண்டு காணப்படுகின்றது. பல்வேறு உயரங்களிலும் காணப்படும் நாவலானது 30 மீற்றர் உயரம் வரை வளர்ந்து 100 வருடம் வரை ஆயுளைக் கொண்டது. இதன் பழங்கள் கறுப்பு, சிவப்பு, கருஞ்சிவப்பு, இளம் சிவப்பு, கரும்பச்சை போன்ற பல்வேறு நிறங்களில் காணப்படும். நாவல் பெரிதும் மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக சர்க்கரை வியாதிக்கு. காபோஹைட்ரேட், புரதம், கொழுப்பு. விற்றமின்கள், கனியுப்புக்கள் போன்றவற்றை தாராளமாகக் கொண்டது. பழங்களின் அளவுக்கும் மரத்தின் அளவுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. பெரிய மரத்திற்கு பெரிய பழமும், சிறிய மரத்திற்கு சிறிய பழமும், பெரிய மரத்திற்கு சிறிய பழமும், சிறிய மரத்திற்கு பெரிய பழமும் காணப்படும். அதன் போசணையும் நாவலின் அளவில் தங்கயிருப்பதுமில்லை. இது இரண்டு நாவலிற்கும் பொருந்தும்.

2. நேரடியாக கதைசொல்லாமல், விதியின் குறுக்குவெட்டுப் பரப்பில் கதை நகர்த்தப்பட்டு அலைவு கொள்வதே நாவல் - (ஜோர்ஜ் லூயி போர்ஹெ).

3. “யாராலும் எனது பிரதியினை எட்ட முடிந்ததா? ஒரு சொல்லையேனும் எனது விலா எலும்பிலிருந்து பிடுங்க முடிந்ததா? இசைக் கலைஞனின் கொடூர இசைக்கு நான் ஆட்பட்டுக் கொண்டேனா? விரிந்த கடற்பரப்பில் இஸ்ஸத் மகாராஜாவின் சிறையில் நான் அடைக்கப்பட்டேனா? பாலைவனப் பறவைகள் என்னை என்ன செய்தன? முனியாண்டி என்னை எப்படி நினைத்தான்? ஏன் மூதாதையர்களின் பாடல்கள் என்ன மொழியினைக் கூறியது?; மண்வாசனை கொண்ட மந்திரவாதிகள் எங்கு சரணடைந்தனர்? காயம்பட்ட கழுகு என்ன வடிவில் கரைந்தது? முப்பெரும் சக்திகொண்ட வேடன் எங்கு விடைபெற்றான்? புலிகள் எந்த இடங்களில் மாய்ந்து போயின? அவைகளின் கூடாரங்கள் எப்படி தீயில் எரிந்து போயின? மேகங்கள் தங்கள் போராட்டங்களை எங்கு ஆரம்பித்தன? காற்றுகள் தங்கள் போர்வைகளை எங்கு தொலைத்தன? நெருப்புஜீவிகளின் தலைவன் எங்கு சென்றான்? வெள்ளை மரங்களின் நான், எது எனது பிரதி? வாசகனே எது எனது பாடநூல்? நான் கற்பிப்பது யாருக்கு? எனது எழுத்துக்களை யார் வாசிப்பது? யார் புரிந்து கொள்வது? கனவுகளின் நாயகனான உன்னைத் தவிர யாருமே புரிந்து கொள்ளமாட்டார்கள்”.
4. பெரும்பான்மையால் (வெள்ளை மரங்களால்) எனது தேசம் ஒன்றைப் பெறுவது இன்னும் தடுபட்டுக் கொண்டே இருக்கின்றது. எனது தேசம் பற்றிய விடுதலைக்கான கதையாடலை நிறத்திவிட்டால் பெரும்பான்மை என்னைக் கொன்றுவிடும். அதனால் உயிருக்கு பயந்தபவனாக எனது தேசம் பற்றி மூச்சுவிடப்படாத கதையினை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

5. தனது தேசத்தை மீட்க இசைக்கலைஞன் வருகிறான். அவனை அடக்க நினைத்தனர். அவன் தேசத்திற்குரிய தனது உரிமைகளையும், அபிலாசைகளையம், தராவிட்டால் இந்த தேசத்தில், இரத்த ஆறு ஓடுவதை தடுக்க முடியாது என்கிறான். இரத்த ஆறு ஓடாமலிருக்க கதைசொல்லியை (தேசமீட்பனை) அழித்து அந்த இனத்தின் வரலாற்றை மழுங்கடித்து, தம்மை உயர்த்திக் கொள்ளலாம் என்கிறான்.

6. அரசனின் அடாத்திலிருந்து தப்பிக் கொள்ள, தனது தேசம் பற்றிய கதையை கைவிட்டு, தனது இன்பத்திற்குரிய தேசம் வரலாறு இல்லாத தேசமான நிலைமையில் ஒரு கடற் பயணத்தை கதை சொல்லி மேற்கொள்கிறான். மன்னனும் இறந்து போகிறான். அதற்கு பின்னர் மன்னனுக்குரிய இரு இராணிகளினதும் கதை சொல்லிகள் தேசமீட்புக்கு எதிரானவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்.

7. ஹாரிஜ், ஜெஸ்மின், இஸ்ஸத் - இரு வேறு உப பிரதிகளாக பார்க்கப்படக்கூடிய பொருந்திவரக்கூடிய தன்மையினைக் கொண்டு காணப்படுகின்றன. இவைகளில் எந்தப் பிரதிகளை எடுத்தாலும், ஒரு சரியான மூச்சாகத்தான் இறுதி மூச்சுக்குள் நுழையக் கூடியவைகாளக இருக்கின்றன. எவ்வாறு அர்த்தம் கொடுத்தாலும் பிரதான பிரதிக்கு பாதிப்பு வரப்போவதில்லை.

8. கதைசொல்லி சார்ந்த இனத்தின் மறைந்த தலைவர், அவரை எதிர்த்த அவரின் இனத்தைச் சார்ந்த இடையின விடுதலைக்கு போராடிய மறைந்த உள்ளுர் போராளி, போன்றவர்களுக்கிடையில் நடந்த ஆரம்பகால இழுபறி நிலைமைகள் பூடகமாக சொல்லப்படுகின்றன. அந்த மகாராஜாவின் கையாலாகாத அமைச்சர்கள் பற்றியும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே இந்த விடயங்களைச் சொல்வதற்காவது கதைசொல்லி எழுதுவதை நிறுத்தக்கூடாது என்கிறது பிரதி.

9. பாலைவனம் கொண்ட நாட்டிலிருந்து வந்த வெண்ணிற பறவைகள் (அறபிகள்), பரியாத பாசை (அறபு) பேசிக்கொண்டு பல நூறு வருடங்களுக்கு முன் இத் தேசத்திற்கு வந்திருக்கிறார்கள். அதை நிருபிப்பதற்கு ஆதாரத்தை சேகரித்திருந்தால், நமது சிற்றின தேசம் வளம் கொள்ளும், ஒரு கட்டத்தில் தேசமாகவும் மாறும். ஆனால் முனியாண்டியோ இந்த தனித்துவத்தை உணராமல் பொது மொழித் தனித்துவத்திற்குள் எங்களை நுழைக்க நினைக்கிறான்.

10. நாங்கள் இருந்த வளங் கொழிக்கும் தேசத்திலிருந்து முனியாண்டி பிரதிநிதித்துவம் செய்த ஆட்களால் தாக்கப்பட்டு துரத்தப்படுகிறோம். பின்னர் அவர்களுக்குப் பின்னர் பலம் பொருந்திய பாசிச மண்பித்துப் பிடித்த இராணுவ கழகம் ஒன்றினாலும் ஆண்டாண்டு காலமாக பிறந்து வளர்ந்து வாழ்ந்த பூமியிலிருந்து அடித்து துரத்தப்படுகிறோம்.

11. எனது இனம் வெளியேற்றப்பட்ட வடக்கும் எனது வாழிட பூமி. மீண்டும் அங்கு குடியேறி அதனை வளங் கொள்ள செய்ய வேண்டும். கதைசொல்லியின் தேச விடுதலைக்கு உதவதயார் என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு பெரிய இயக்கமான மண்வாசைன கொண்ட மந்திரவாதிகளால், அடுத்த கட்ட இயக்கத்தைச் சேர்ந்த முனியாண்டி கொல்லப்பட்டது துன்பியல் வரலாறாகும்.

12. விரட்டிவிடப்பட்ட என் இனத்தவர்களின் தற்காலிக தேசம்; அகதி முகாம்; இருக்கிறது. அவர்கள் விரட்டிவிடப்பட்ட அவர்களின் தேசத்தில் மீண்டும் குடியமர மந்திரவாதிகள் இடமளிக்கப் போவதுமில்லை. முனியாண்டி சிற்றினமாகவோ இருந்தாலும் இவன் இடையினத்திற்காக போராடியதால் அவனுக்கு சிற்றினத்தில் மதிப் பிருக்கவில்லை. சிற்றினத்தினதும், அரசினதும் உதவியுடன்தான் முனியாண்டி கொல்லப்படுகிறான்.

13. தரைப்படை, கடற்படை, விமானப்படை போன்ற படைகளைக் கொண்ட முப்பெரும் சக்தி கொண்ட வேடனான பெரிய இயக்கத் தலைவன் முன்னைநாள் பெண் ஜனாதிபதியை காயப்படுத்தி ஒரு கண்ணை இழக்க செய்கிறான். பின்னர் ஒற்றைக் காயப்பட்ட கழுகு மற்றைய இனத்தவர்களுடன் சேர்த்து என்னைச் சேர்ந்தவர்களுக்கும் வேடனை அழிக்க பயிற்சி தருகிறது.

14. வேடன் மீது கொண்ட பயம் காரணமாக சிற்றின கட்சிகள் எல்லோருமே வாய்மூடி மௌனியாக விருந்தார்கள். அதாவது மரங்களில் இருந்த இலைகள் கூட அசையாமல் இருந்தன. எப்படியும் அவன் அதாவது கதை சொல்லி கழுகின் உதவியுடன் வேடனை கொல்லத்துடிக்கிறான்.

15. வேடன் கழுகிற்கு சொந்தமான காடு, வானம், மலை போன்றவைகளை தனது அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவர நினைக்கிறான். வேடன் மீது தாக்குதல் நடாத்த இருந்த (சிற்றியக்கங்கள்) வேடனின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வி கண்டு அழிகின்றன. பாசிசம் கட்டவிழ்க்கப்பட்டு, பன்மைத்துவம் ஒருமைத்துவமாகிறது. வேடன் யாரையும் (கழுகுகள், புலிகள், பூக்காடுகள்) ஏற்றுக்கொள்ளவில்லை.

16. வேடனை புலிகள் கொன்ற போது, வேடன் ஏற்கனவே சிற்றினத்துக்கு கொடுத்த பிரச்சினைகளை புலிகள், சிற்றினத்திற்கும் இடையினத்திற்கும் கொடுக்கப்போவதாக கொக்கரிக்கின்றன.

17. வெள்ளை மேகங்கள் (பேரினம்), கறுத்த மேகம் (இடையினம்) சண்டையிட்டபோது, அரச இராணுவ இயந்திரத்தின் உதவியோடு வெள்ளைமேகங்கள் கறுத்த மேகங்களை அடக்கிவிட்டு கும்மாளம் போடுகின்றன.

18. புதிய சிற்றின அரசியலின் நம்பிக்கை தரும் ஒளி (விண்மீன்கள்) தோன்றுகிறது. அது தோன்றும் போதெல்லாம் அதன் வீரியத்தை வெள்ளை மேகங்கள் காயடிக்கின்றன.

19. பின்னர் அந்த சிற்றின தனித்துவ கட்சிகள் பெரும்பான்மை நீலக் கட்சிக்குள் இரண்டறக் கலக்கின்றன. அதற்குள் வேத புத்தக வாசகங்களுடன், மதத்தையும் கலந்து தங்களது வாக்கு வங்கிகளை தக்கவைத்துக் கொள்கின்றன.

20. இந்த சிற்றின கட்சிக் காற்றுகள் நேரத்துக்கு நேரம் நிலையில்லாமல் மாறுகின்றன. இந்தக் கட்சிகளின் வருகைகள் காரணமாக பெரிய சிற்றினக் கட்சி நிலைகுலைந்து வீழ்ச்சியடைந்து மரங்கள் வேர்களுடன் பிடுங்கப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. எனவே சிற்றின உணர்வை, சிறு கட்சிகள் உணர வேண்டியிருக்கிறது. தங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நிவர்த்தித்து ஒற்றுமையாக வேண்டியிருக்கிறது.

21. இந்த சிற்றினக் கட்சிகள் கொள்கை இல்லாதவர்கள். நேரத்திற்கு நேரம் தங்களது நிறத்தை மாற்றக்கூடிய பச்சோந்திகள். ஆனால் தூய்மையான தங்களது அடிப்படை நிறத்திலே கொஞ்ச நேரமும் இருக்க முடியாதவர்கள்.

22. நாங்கள் சிற்றினம் பெரும்பான்மையால் துன்புறுத்தப்படுதையும், அவை ஓட ஓட விரட்டுவதையும், அரைந்துழல்வுகளைத் தந்ததையும், கதைசொல்லியின் பிரதிகள் கூறுவதையும், வாசகனான நீ அதனை கவனத்திற் கொள்ளாமையும் மீண்டும் (வெள்ளைமரம்) தனது வேலையை தொடங்க அப்போதும் நீயே கதைசொல்லியாகவே இருப்பதும், இந்த போரின் செயற்பாடு நிறுத்தப்பட்டால்தான் நாம் சுதந்திர மனிதர்களாக எங்கள் நிலங்களில் வசித்து வாழ்ந்து திரியலாம்.

23. எனவே வாசகனே உனது கனவின் வெள்ளை மரங்கள் உதிர்வதை நான் காண்கிறேன். அவை ஒரு சீரிய ஒளி பரந்து செல்லும் மின்மினிகள் மட்டுமே பிரகாசித்த, அடிவானின் சூரிய சலனத்தில் மதிப்பற்ற ஓசைகள் அதில் புகுந்து பல நிறச் சந்திரன்களாக வெடித்தன. அதனைப் பற்றிய புரிதலுக்கு நீ தயாராகி இருப்பதை உனது அமைதி உணர்த்துகிறது. இதுவே எனது பஞ்ச பூதத்தின் முற்றுப் பெறாவாழ்வு.

24. ஏ.எம். சாஜித்தின் பஞ்சபூதத்தை வாசிக்க கையிலெடுத்த போது மிகுந்த வாசக ஈர்ப்பு கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.. வேகமான முதலாவது வாசிப்பினை முடித்தபோது அதன் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கின. இரண்டாவது வாசிப்பில் நொன்லீனியராக இருந்தது லீனியராகவும், மாயாதந்திர யதார்த்தமாக இருந்தது யதார்த்தமாகவும் புரியத் தொடங்கியது.

25. இலங்கைத் தீவின் இனத்துவ முரண்பாட்டை, பல நூறு வருட வரலாற்றை, தனக்கேயுரிய பாணியில் எழுத்துக்களை நிறங்களாக குழைத்து, பஞ்சபூதத்தை நிறந்தீட்டியிருக்கின்றார். இந்த பிரதி தரும் இன்பம் அலாதியானது. ஏனெனில் எம்மில் பலருக்கும் முடிச்சுக்களை அவிழ்ப்பதிலும், புதிர்களை விடுவிப்பதிலும் இருக்கிற இன்பம் அலாதியானதுதான்.

26. எழுத்தின் உட்பரப்பினதும், மொழியின் எல்லாச் சாத்தியங்களையும் தன்னால் இயன்றளவு சாத்தியப்படுத்த முனைந்திருக்கிறார். புற உலகில் கவனத்தை குவித்து, பல தளங்களில் இயங்கக்கூடிய சாத்தியத்தை உருவாக்குகிறார். இந்த எழுத்து கவிதைக் குணம் கொண்டு காணப்படுகின்றது. பிரதிகளினூடே தீட்டும் நிறங்கள், விநோதமான அற்புத ஓவியம் போல வசீகரிக்கச் செய்கிறது. இங்கே யதார்த்தமா? கற்பனையா? என்று புரியாத கலந்துணர்வாக்கமொன்றை அனுபவிக்க முடிகிறது.


27. இந்தப் பிரதி நேர்கோட்டு வாதிகளுக்கும், வன்மைகொண்ட யதார்த்தவாதிகளுக்கும் பிடிபடாத புரியாத எழுத்துக்கள். ஞாபகத்தின் அடித்தளத்தின் முடிவற்ற சுழல்வழியே பயணம் செய்ய முயன்ற இந்நாவலை இருநூறு பேரில் பன்னிரெண்டு பேர் புரிதலுக்குள்ளாக்கினாலே போதும். வாழ்த்துக்கள். சாஜித் அடுத்த கட்டத்திற்கு தயாராகுங்கள்.

சகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்:

சகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்:
(1)
இங்கே எந்த கிளுகிளுப்பும் இல்லை. 
கிளர்ந்தெழுதலும் இல்லை.
ஒரு பெண்மையின் சதைகளைத் தாண்டிய
துயர் கவிந்த இதயத்தின் வலிகளைத் தவிர.

(2)
“இந்த நூல் சுயசரிதையல்ல. போராடும் ஒவ்வொரு மனிதனதும் ஒப்புதல் வாக்குமூலம் இது. நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுகிறேன். மிக அதிகமாக போராடிய ஒரு மனிதனின் - வாழ்க்கையின் பெருமளவு கசப்புக்களை விழுங்கும் நிலைக்கு ஆளானவனின் - பெருமளவு எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்த மனிதனொருவனின் கடமை இது”.
- நிக்கொலஸ் கஸான்த்சாக்கீஸ்

(3)
பெற்றோருடன் சேர்த்து 9 பேருள்ள குடும்பத்தில் பிறந்து (தகப்பனின் முன்னைய தாரத்துக்கு இரு பிள்ளைகள், பின்னைய தாரத்துக்கு சகிலா உட்பட ஐந்து பிள்ளைகள்), கற்பதற்கு கஸ்டப்பட்டு, பாடசாலைகளில் நிலவிய பல்வேறு வடிவமான வன்முறைகளின் (உடலியல், பாலியல் போன்ற துஸ்பிரயோகங்கள்) காரணமாக பல்வேறு பாடசாலைகளுக்கு மாறி, கல்வியில் தோல்வியடைந்து, சிறு வயதில் தந்தையால் மதுப்பழக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தாயினால் பதின்மவயதில் பணத்திற்காக பல்வேறு நபர்களுக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் அதே பெற்றோராலும், குடும்பத்தவராலும், தமிழ் சினிமாவுக்கு நடிக்க அனுப்பப்பட்டு, அங்கு நடந்த கொடுமைகள் காரணமாக சினிமாவை புறந்தள்ளி ஒதுங்கி சாதாரண கனவுகளைக் கொண்ட வாழ்க்கை வாழலாம் என்று வந்த பெண்ணை, மீண்டும் மலையாள சினிமாவுக்கு அனுப்பி, அங்கு எதிர்பாராத வெற்றிகளை பெற்று, முடிசூடா ராணியாக்கி, இரவு பகலாக கஸ்டப்பட்டு உழைத்து, சேர்த்த பணத்தையும், சொத்துகளையும், வாழ்க்கையையும் ஏமாற்றி அபகரித்து, சினிமாக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, மீண்டும் பல ஆண்களால் எமாற்றப்பட்டு, சக்கையாக உறுஞ்சப்பட்டு, அநாதரவாக நடுத்தெருவில் வீசப்பட்ட ஒரு பெண்ணின் இரத்தமும் சதையுமான, கண்ணீரும் கம்பலையுமான சாட்சியம்தான் இந்த சுயசரிதை. மலையாளத்திலிருந்து சிறிபதி பத்மனாபா தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். உயிர்மை பதிப்பக வெளியீடு (224 பக்கங்கள்).

தான் ஏன் கல்வியில் தோல்வியுற்றேன் என்று பாடசாலைக் கல்வி மேல் வைக்கும் விமர்சனம் இன்றைய கல்விமுறை மீது வைக்கப்படுகின்ற சாட்டையடி. “பணம் பெரிதென்று நான் நினைப்பதேயில்லை. என்னைப் பொறத்தவரை பணம் ஒரு வெறும் காகிதம் மட்டுமே. அதன் மதிப்பு அவ்வளவுதான். எனக்கு விருப்பங்கள் குறைவு. அதனாலேயெ பணத்தால் என் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியாது” என்பதில் பாசாங்குகளை காணமுடியாதுள்ளது. இந்த இருவிடயங்களுமே இந்தப் பெண்ணின் தனித்துவத்திற்கு போதுமான சாட்சிகளாகும். பரந்த ஞாபகசக்தியுள்ள. ஆளுமையுள்ள, உருது, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அத்துடன் ஆங்கிலத்தையும் மிக சரளமாக பேசத் தெரிந்த பெண்ணின் கதை. இங்கே எந்த கிளுகிளுப்பும் இல்லை. கிளர்ந்தெழுதலும் இல்லை. தன் வாழ்க்கையின் பக்கங்களைச் சொல்கிறார். தனது வாழ்க்கையின் இனிப்பும் கசப்புமான பெண்மையை சொல்கிறார். வேதனையை சொல்கிறார். முடிந்த அளவுக்கு உண்மையாக இருக்கப் பார்க்கிறார். இவரது வானொலி, தொலைக்காட்சி பேட்டிகளிலும் இந்த நேர்மையின் ஒத்த தன்மையை காணமுடியும்.
“தென்னிந்தியர்களின் மதியங்களையும், இரவுகளையும் ரதிபாவங்களாக மாற்றிய புகழ்பெற்ற நடிகை சகிலாவின் சுயசரிதம் இது. சினிமாவுக்கும் வாழ்க்கைக்குமிடையில் சகிலாவின் துயரம் நிறைந்த பக்கங்கள் நம்மை சஞ்சலமடையச் செய்பவை. ஒரு பெண்ணுடலாகவே மட்டும் பார்க்கப்படும் சகிலாவின் பிம்பத்தை கடந்த ஒரு துயர்மிகுந்த இதயத்தை, காமத்தின் வேட்டை நிலங்களை கடந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை இந்நூல் பேசுகிறது. சகிலா தன்னுடைய வாழ்வை எந்தப் பாசாங்குமில்லாமல் தன்மேல் விழும் வெளிச்சத்திற்கு அடியில் இருக்கும் கனத்த இருளை நேரடியாக வெளிப்படுத்துகிறார்”.
மொத்தத்தில் வலிகளினதும், ஏமாற்றல்களினதும், கண்ணீர்களினதும் காவியம்.
- அம்ரிதா ஏயெம்.

Wednesday, July 6, 2016

மூன்றாம் பிறையின் கண்ணே கலைமானே தந்தைகளுக்கும் மகள்களுக்குமான என்றென்றைக்கும் சாசுவதமான உயிரை உருக்கும் ரசவாதப் பாடல்.

மூன்றாம் பிறையின் கண்ணே கலைமானே தந்தைகளுக்கும் மகள்களுக்குமான என்றென்றைக்கும் சாசுவதமான உயிரை உருக்கும் ரசவாதப் பாடல்.

- அம்ரிதா ஏயெம்

“தேவலோக வாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா. ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம்.அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். 

“மூன்றாம் பிறை” படம் மூலமாக. மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன்.
ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு........
எனக்கு......
எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்...!”
                                                                                                  - பாலுமகேந்திரா
                                                                       **
எனது மகள் பிறந்தவுடன் மகளைத் தூங்க வைக்க நிலா நிலா ஓடி வா, ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் களுடனான பயணத்தின் அலுத்துக் களைத்துப் போன ஒரு சந்தர்ப்பத்தில் Lullaby of tamil child என்று google பண்ணினேன். அதிலே ஒரு பதிவு பீ. சுசிலா பாடிய எல்லா பாட்டுக்களுமே தாலாட்டுக்கள்தான் என்று கூறியது. அன்றிலிருந்து மகளின் பணயம் தொடங்கியது. ஏனெனில் வலிகளும், தனிமைகளும், அலைச்சல்களும் நிறைந்த துண்பக் கடலை தாண்டுவதற்கு ஒரு தோணி தேவைப்பட்டது. துன்பக் கடலை தாண்டும் போது தோணியாவது கீதம்.
                                                                             **

அமைதியான நதியினிலே ஓடம், அத்தை மடி மெத்தையடி, அத்திக்காய் காய் காய், சின்ன சின்ன கண்ணனுக்கு, எங்கிருந்த போதும் உன்னை, என்னாளும் வாழ்விலே, இதய வீணை தூங்கும் போது. காகித ஒடம், காதல் சிறகை, காலமென்னும் நதியினிலே,, கண்ணனின் சந்நிதியில், காவேரி ஓரம், மாலை பொழுதின் மயக்கத்திலே, மலர்ந்தும் மலாராத பாதி மலர், நானே வருவேன், நெஞ்சம் மறப்பதில்லை, பார்த்த ஞாபகம் இல்லையோ, பூந்தேனில் கலந்து, பொழுதும் விடியும், லவ்பேட்ஸ் லவ்பேட்ஸ், சிட்டுக்குரவி முத்தம் கொடுத்து, அழகே வா, அருகே வா, சொந்தமில்லை பந்தமில்லை, தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே, ஊர் உறங்குது பொழுதும் உறங்குது, தன்ணிலவு தேனிறைக்க, சொன்னது நீதானா?, உனது மலர் கொடியிலே, உன்னை ஒன்று கேட்பேன், பதினாறு வயதினிலே, செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம், பக்கத்து வீட்டு பருவ மச்சான், தேடினேன் வந்தது, உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன், பார்த்தால் பசி தீரும், தங்கத்திலே ஒரு குறை, தென்றல் வரும், ஆடாமல் ஆடுகிறேன், உன்னை நான் சந்தித்தேன், இரவுக்கு ஆயிரம் கண்கள், பச்சை மரம் ஒன்று, காலமென்னும் நதியினிலே. கண்ணா கருமை நிற கண்ணா போன்றவை இந்த தாயுள்ள பிள்ளைக்கு இன்னொரு மடியாயின.
ஆசையே அலைபோல, அதிசய ராகம், அன்னக்கிளி, சின்ன கண்ணனுக்கு, சின்னக் கண்ணன் அழைக்கிறான், தெய்வம் தந்த வீடு, என் இனிய பொன்னிலாவே, உன்னைவிட்டால் யாருமில்லை, இலக்கணம் மாறுதோ, இளமை என்னும் பூங்காற்று, இந்த மன்றத்தில் ஓடி வரும், இரவும் நிலவும், காலையும் நீயே மாலையும் நீயே, காலங்களில் அவள் வசந்தம், மாமன் வச்சான், மயக்கமா கலக்கமா, மௌனமான நேரம், சிங்காரவேலனே தேவா, ஒரு வானவில் போலே, மோகன புன்னகை, போய் வா நதியலையே, தேனே தென்பாண்டி மீனே, சம்சாரம் என்பது வீணை, சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தில் நல்ல உள்ளம், உள்ளம் என்பது ஆமை, நந்தா என் நிலா, வான் நிலா நிலா, காதலின் பொன் வீதியில், வசந்த கால கோலங்கள் போன்றவைகளும், இந்த சீசனுக்கான பஞ்சுஅருணாசலத்தின் முதற்பாடலாகிய பொன்னெழில் பூத்தது புதுவானில் வரை இன்னொரு மடியாய் இருக்கின்றன.
                                                                                       **

இந்தப் பயணத்தின் தோணி கொண்டு தாண்டும் போது ஓரிடத்தில் தரைதட்டி கண்டடைந்ததுதான், மூன்றானம் பிறையின் கண்ணே கலைமானே. அன்றிலிருந்து எங்கே பயணம் செய்து விட்டு வந்தாலும், அலைந்துவிட்டு வந்தாலும், கண்ணே கலைமானே தவிர்க்க முடியாத தாய்வீடாகியது. தரிப்பிடமாகியது. யூடியுப்பில் கண்ணே கலைமானே 802896 வியுக்களில் ஆகக் குறைந்தது 5வீதமாவது மகளால் நிகழ்த்தப்பட்டிருக்கும். ஐபேட்டும், ரெப்பும், லெப்டொப்பும், ஸ்மார்ட் போன்களும் இந்த பணயத்தில் தேய்ந்துவிட்டிருந்தன.

பின்னொருநாளில் மகள் கண்ணே கலைமானேயின் அடுத்த கட்டத்துக்குள் தாவி விட்டிருந்தது. சுருமை அக்கியொன் மெய்ன், (சத்மா (ஹிந்தி), ஜேசுதாஸ்), கதாகெ கல்பனாகெ. (வசந்த கோகிலா (தெலுங்கு), எஸ். பி. பாலசுப்ரமணியம்), அதற்குப் பின்னர் எஸ்.பி. பாடாத பாடல்களில் கண்ணே கலைமானே, பின்னர் வயலின், பல வகையான கிட்டார்கள், புல்லாங்குழல், வீணை, பியானோ, பல்வேறு தனித்த இழை இசைக் கருவிகள், மேலும் மேடை நிகழ்ச்சிகள், பல சுப்பர், சீனியர், ஜீனியர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஆண்களும் பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும், இளைஞர்களும், இளைஞிகளும், கிழவர்களும், கிழவிகளுமாகவும், கரோக்கிகளாகவும் சாத்தியமான மொழிகளிலும் புகுந்து விளையாடியிருந்தனர். இதன் காரணமாக கண்ணே கலைமானே இசையின் எல்லா சாத்தியப்பாடுகளையும் சாத்தியப்படுத்தியது. அந்தளவுக்கு கண்ணே கலைமானேயில் என்ன இருக்கிறது?.
                                                                  **

கமலஹாசன், பாலுமகேந்திரா ஆகிய இருவருக்கும் தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்து காலங்களையும் மீறி, ரசனை மாற்றங்களையும் மீறி, மனதையும் பாதித்து, அதில் என்றும் நிற்கின்ற செவ்வியல்தன்மை கொண்ட, அற்புதமான திரைப்படம்தான் மூன்றாம் பிறை. கண்ணதாசன் தனது நோய்க்காக அமெரிக்கா செல்லும் வழியில் 1981 ஆம் ஆண்டு கவிஞர் போது தி.நகரிலிருந்து அவர் மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் வழியில் இயக்குனர் பாலு மகேந்திரா காரில் உடன் செல்கையில் இரண்டே நிமிடங்களில் எழுதிய வரையறுக்க முடியாத ஆயுளைக் கொண்ட பாடல்தான் கண்ணே கலைமானே. ஜேசுதாசும், இளையராஜாவும், பாலு மகேந்திராவும் கண்ணதாசனின் பாடல்களுக்கு அற்பதமாக உயிர் கொடுத்திருப்பார்கள்.

விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படு;ம் விஜி (சிறிதேவி) மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் வழியில் தவறிவிடுகிறார். பின்வர் தவறுதலாக விலைமாதுவாக விற்கப்பட, அங்கு அவரைச் சந்திக்கும் சுப்ரமணி (கமலஹாசன்) என்னும் ஆசிரியர் அவளைக் காப்பாற்றி அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றான். விஜியின் நிலைகண்டு பரிதவிக்கம் சுப்ரமணி ஒரு கட்டத்தில் அவள் மேல் அவனை அறியாமலேயே காதல் கொண்டு அவளை பாதுகாக்கிறான். அந்தச் சூழலில் இடம்பெறும் பாடல்தான் இது. கண்ணே கலைமானே பாடலில் மூன்றாம் பிறை திரைப்படத்தின் மொத்தக் கதையையும் சொல்லப்பட்டிருக்கும். இதுதான் கண்ணதாசன்.

இப் பாடல் இளையராஜாவுக்கு மிகவும் சவாலான பாடலாகும். காதலிக்கு உடம்பில் பிரச்சினையில்லை. மனதில்தான் பிரச்சினை. மனதளவில் குழந்தையாய் இருப்பவளிடம் பாடும் தாலாட்டு. அதில் அதிகம் தாய்மையும் இருக்க வேண்டும். ஆழ்ந்த சோகமும் இருக்க வேண்டும். எனவே இரண்டையும் கலந்து காபி ராகத்தில், ஜேசுதாசின் மனத்தின் அடித்தளத்திலிருந்து சோகமாய் ஊற்றெடுக்கும் மெலன்ஜொலிக்கல் குரலில் வரும் அற்புதமான பாடல். இந்தப் பாடலில் ராஜாவின் புலாங்குழல் பல்லவிக்கும் இடையில் புகுந்து ஒரு ராஜாங்கமே நடாத்தியிருக்கும்.

கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ…ஓராரிராரோ… ராரிராரோ…ஓராரிராரோ…
கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ…ஓராரிராரோ… ராரிராரோ…ஓராரிராரோ…
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி…
கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ…ஓராரிராரோ… ராரிராரோ…ஓராரிராரோ…

ஜனனி தினகரன் என்பவர் மொழிபெயர்த்த இந்தப்ப பாடலின் உயிரை உருக்கும் ஆங்கில வரிகளும் எங்களின் உயிரைப் பிழிகிறது.
Dear beautiful deer, I found you like a young peacock
I see you in the mornings and evenings (implying all day)
I’m asking god for this
(lullaby syllables)
(lullaby syllables)
If you were a mute, it is peaceful in a way
If you were poor, there is a peace in that too
You are a parrot’s little one or a cuckoo’s little one singing about the earth
For some reason, god has deceived you, fate has made you mentally ill
I felt love, I have dreamed and nurtured the love
Sweet one, I have filled my thoughts with you
I became your life, don’t ever forget me
Without you, what is peace? You are my sacred sanctuary
(By Janani Dhinakaran, The Outsider's Journey)

கண்ணதாசன் இந்தப் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்றவர், அமெரிக்காவில் சிகிச்சை பலனின்றி இறந்த கவிஞரின் பூத உடல் தான் சென்னைக்கு திரும்பி வந்த போது அப்போது ஆறு வயாதான கவிஞரின் மகளான விசாலியும், இளம் வயதிலேயே மறைந்து கவிஞரின் மகனான கலைவாணனும் கண்ணே கலைமானே பாடலை தங்கள் தந்தை தங்களுக்கு பாடி வைத்து விட்டுச் சென்ற தாலாட்டாகவே நினைப்பதாகப் கூறினார்கள். 

கன்னியின் காதலி படத்தில் ‘கலங்காதிரு மனமே’ என்று தொடங்கிய அவரது சினிமா வரிகள் மூன்றாம் பிறை படத்தில் கண்ணே கலைமானே’ என்ற வரிகளோடு அமரத்துவம் பெற்றது. ‘கண்ணே கலைமானே.. ‘ என்ற பாடலைப் போல், மீண்டுமொரு ரசவாதப் பாடல் திரையில் தோன்ற வாய்ப்பேயில்லை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
கண்ணே கலைமானே ஏன் எனக்கும் மகளுக்கும் இன்னும் பிடித்துப் போகிறது? வரிகளுக்காகவா? இராகத்திற்காகவா? இசைக்கோர்வைக்காகவா? ஆடிமனத்திலிருந்து பீறிட்டெழும் சோகத்தைப் பிழியும் குரலுக்காகவா? ஊட்டியின் ஊசிப்பனியின் துவாரங்களுக்குள் நுழைந்து வெளிவரும் நுண்ணுணர்வுகளைக் காட்டிநிற்கின்ற ஒளிப்பதிவுக்காகவா? விஜிக்காகவா? சுப்ரமணிக்காகவா?

துன்பக் கேணியிலிருந்து தாண்டும் நிச்சயமற்றிருக்கும் குழந்தையுள்ளம் கொண்ட காதலிக்கும், காதலனுக்குமானது இந்தப் பாடல் என்று யாரு சொன்னது?
ஆங்கே இருக்கும் சுப்ரமணியும், விஜியும் நானும் மகளும்தான்.

”கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி…”

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...