Saturday, May 30, 2020

பூவரசு



ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஷ்ட விரிவுரையாளர்0, தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

49வது இலக்கியச் சந்திப்பு (கிளிநொச்சி-வன்னி) நிகழ்வில் கலந்துகொள்ள சென்றபோதுவன்னியின் பல பிரதேசங்களை சுற்றிப் பார்க்க கிடைத்தது. தென்னாசியாவின் மிக முக்கியமான, உயிரினப் பல்வகைமை கூடிய ஒரு வனத்தொகுதி வன்னி வனத்தொகுதியாகும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அல்லது யுத்தத்திற்கு முன்னர் இருந்த வனங்களின் அளவு கண்ணுக்குள் வந்து போனது. தற்போது வேகமாக நடைபெறுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் வன்னி வனத்தொகுதிகளின் இருப்புக்கு எதிர்காலத்தில் பெரியதொரு சவாலாக இருக்கப்போகின்றது. என்றும் பசமையான உலர் வலய காடுகளிற்கு பாலை மரம் ஒரு குறியீட்டு மரமாகவே நான் கருதுகின்றேன். பாலை மரங்களின் வயது, அதன் செழுமை போன்ற அம்சங்களைக் கொண்டே அந்தக் காட்டின் வரலாற்றைக் கூறிவிட முடியும்

வன்னி வனத்தொகுதி வனப்பும் செழுமையும் கொண்ட, மிகவும் கவர்ச்சியான வனத்தொகுதியாகும். அதன் செழுமைக்கு பாலை இன்னும் வனப்பைக் கொடுக்கின்றது. அதே போல வன்னிப் பிரதேசமும் கவர்ந்திழுக்கக்கூடிய பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் என்னைக் கவர்ந்த மிக முக்கியமான அம்சம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பூவரச மரங்களாகும். பொதுவாக வேலிகளிலும், வளவுகளிலும் எங்கும் விரவிக் காணப்பட்டிருந்தது. ஒப்பீட்டு ரீதியில் கிழக்குப் பிரதேசத்தில் மறைந்து வருகின்ற ஒரு மரமாகவே பூவரசு எனக்குத் தென்படுகின்றது. பூவரசு பற்றிய சில அடிப்படை அம்சங்களை நோக்குவோம்.
பூவரசு:
இந்த மரம் கொட்டைப் பூவரசு, சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும்.
உள்நாட்டுக்குரிய, கரையோரப் பிரதேசங்களில் வளரும், நிழல் தரும், மல்வாசே குடும்பத்தைச் சேர்ந்த, 6 10 மீற்றர் வரை வளரும், வருடம் முழுவதும் பூக்கக்கூடிய தாவரமாகும். உலகம் பூராகவும் பரவிக் காணப்பட்டாலும், இதன் பூர்வீகம் இந்தியாவென்றெ கருதப்படுகின்றது. கரையோரப் பிரதேசத்தில் காணப்படும் பல்வேறு வகையான சூழல்களிலும் சிறப்பாக வளரக்கூடியது. கண்டல் சூழற்றொகுதியின் துணைக்கண்டல் தாவரமாகவும் இது காணப்பட்டு பல்வேறு பறவைகள், உயிரினங்களுக்கு வாழ்விடமளிக்கிறது.
தாவரவியல் பெயர்: Thespesia populnea
ஆங்கிலப் பெயர்: Indian tulip tree/ Pacific rosewood
சிங்களப் பெயர்: சூரியா/ கன்சூரியா
பயன்கள்:
பழமும், பூக்களும், இளம் இலைகளும் சில நாடுகளில் உண்ணக்கூடியவைகளாக காணப்படுகின்றன. இதன் இலை, பூ, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை

இந்தியாவில் இதன் பட்டை தோல் நோய்களை குணப்படுத்தவும், மொரிசியசில் வயிற்றுளைவு, இரத்தப்போக்கு போன்றவற்றைக் குணப்படுத்தவும், இதன் இலைகள் மூட்டு வீக்கத்தை குறைக்கவும், இதன் பழங்கள் காயங்களை குணப்படுத்தவும், வட்டப் புழுக்களை மனிதர்களில் கட்டுப்படுத்தவும், வேர்கள் சத்துமருந்துகளாகவும், உயர் அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படுகின்றன. இதனைவிட இன்னும் நூற்றுக் கணக்கான நோய்களை தீர்க்கக்கூடிய மருந்துகளை பூவரசின் பல பாகங்களிலும் பெற்றுக்கொள்கிறார்கள்.

மிகவும் உறுதியானதும், நீரால் பாதிக்கப்படாததுமான அதன் மரங்கள் வண்டிச் சக்கரம்படகு, நாற்காலி, வண்டி, துப்பாக்கிக் கட்டை, வேளாண் கருவி, இசைக் கருவி, தளப் பலகை ஆகியவற்றைச் செய்வதற்கும் பயன்படுகின்றது. செதுக்கு வேலைகள் செய்வதற்கு உகந்ததாக காணப்படுவதால் மரத்தளபாடங்கள் செய்வதற்கு பயன்படுகின்றது. விறகாகவும் பயன்படுகின்றது. தமிழகத்தில் வாழ்ந்த ஆதிகால தமிழர்கள் இந்த மரத்திலிருந்து வாத்தியக் கருவிகளைச் செய்தார்கள். தற்போது இந்தியாவின் தமிழ்நாட்டில் தவில் என்னும்; இசைக்கருவி செய்யப் பயன்படுத்தப்படுகின்றது. பொலினேசியர்கள் இந்த மரத்திலிருந்து பல பாத்திரங்களை செய்தார்கள். அதன் நார்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதன் பட்டைகளிலிருந்து சிவப்பு சாயம் பெறப்படுகின்றது. நோய்க்கு ஒரு நிவாரணியாகவும் இது பயன்பட்டிருக்கின்றது.

உவர் நிலங்களில் சிறப்பாக வளரும் பூவரசு கரையோர நிலங்களில் காற்றுத் தடையாக பயன்பட்டு காற்றின் வேகத்தை குறைத்து அழிவுகளைக் தடுப்பதுடன், காற்றில் கலந்துவரும் உப்பு சிவிறலையும் தடுக்கிறது. உவர்நிலங்களில் நன்றாக வளர்வதால் கரையோர மண்ணரிப்பை பாதுகாக்கும். அதன் இலைகள் விவசாய நிலங்களில் பசுந்தாட் பசளையாக பயன்படுகின்றது. ஒளித்தொகுப்பின்போது வளியிலிருக்கும் காபனீரொட்சைட்டை அதிகளவு உறிஞ்சி, அதிகளவு ஒட்சிசனை வெளிவிடுகிறது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது. எனவே இது புவி வெப்பமயமாதலைத் தடுப்பதில் உதவும் எனவும் கருதப்படுகின்றது.

பூவரசும், வாழ்வியலும்:
பூவரசு தமிழ்பேசும் மக்கள் வாழ்வியலில் முக்கிய இடம் பிடித்த ஒரு மரம். இரு தசாப்த காலங்களுக்கு முன்னர், சிறார்களின் வாழ்வில் இறண்டறக் கலந்த ஒரு மரம். அதிகாலையில பூவரசு பூவுடன்; சாணியில் பிள்ளையார் பிடித்து வைத்தல், மீலாதுன் நபி எனப்படும் நபிகள் நாயகம் பிறந்த நாளில் பிள்ளைகள் கொண்டு செல்லும் கொடிகள் கட்டல், விநாயக சதுர்த்திக்கு பூவரசங் கொழுக்கட்டை செய்தல், திருமணம், இறுதிச் சடங்குகள், கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களை கிணற்று மேட்டில் நடுதல் போன்றவைகளுக்காவும், பிள்ளைகளைக் கண்டிக்க ஆசிரியர்களும், மற்றவர்களும் பாவித்த கம்பாகவும் இருந்து மக்களின் நாளாந்த வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த மரமாக இருந்து வந்துள்ளது. இலங்கையின் சுதந்திர போராட்டத்துடன் பூவரசம் பூ தொடர்புபட்டுக் காணப்படுகின்றது. சூரிய மல் இயக்கம் இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தை நினைவுகூருகின்றது. ஏகாதிபத்தியவாத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் குறியீடாகவும் திகழ்கின்றது. 1934-1935 களில் இலங்கையில் மலேரியா நோய் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தபோதும், வரட்சி, வெள்ள அனர்த்தங்களின்போதும் இந்த சூரிய மல் இயக்கம் நிவாரண வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றது.

பூவரச மரத்தடியும், சிறுவர்களும்:
ஒரு காலத்தில் பூவசர மரத்தடிகள் சிறுவர்களின் ஆளுமை விருத்தி, திறன்விருத்தி ஏற்பட உதவிய பாடசாலைகளாகவும் இருந்துள்ளன. சிறுவர்கள் கூடுவதற்கு தீர்மானிப்பது, கூடும் இடத்தை தீர்மானிப்பது, கூட்டமாக சேர்வது, அங்கு கூடுவது, ஒற்றை இலை, இரட்டை இலை, பாதி இலைகளை உருட்டி பீப்பீ எனப்படும் ஊதல்களைச் கூட்டாகச் செய்து ஊதுவது, பலவிதமான மெட்டுகளுக்கும், பாடல்களுக்கும் ஊத முயற்சிப்பது, அதனை சிகரெட்டாக கற்பனை செய்து நடித்துக் காட்டுவது, பாபி டோல்கள் போன்ற பொம்மைகளைச் செய்வது, பூக் காம்புகளைக் கொண்டு உருளைகள் செய்து உருட்டி மகிழ்ந்து விளையாடுவது, இட்டுக் கட்டி பாட்டுக்கள் படிப்பது போன்ற மாணவர் மையப்படுத்திய கற்கைகள் நடைபெற்று கல்வியும், ஆளுமையும் விருத்தி செய்யப்படுகின்ற ஒரு பாடசாலையாகவே பூவரச மரத்தடிகள் திகழ்ந்திருக்கின்றன. அந்தப் பூவரச மரங்கள் அபிவிருத்தி, நகரமயவாக்கம், வீதி அகலிப்பு போன்றவைகள் காரணமாக வேகமாக அழிக்கப்பட்டுவிட்டன.

பூவரசு மீளுவாக்கம்.
பல சிறப்புக்கள் வாய்ந்ததும், வேகமா அழிந்து வருவதுமான பூவரசு மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புக்கள் மிகவும் குறைவு. பத்து வருடங்களுக்கு முன், மட்டக்களப்பில் மூன்றாவது கண் அமைப்பினால் பூவரசுத் திருவிழா என்ற ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. அங்கே அந்த மரங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம் பெற்றிருக்கின்றன.
'
பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இந்த மரங்களை மீளுருவாக்கம் இரு முறைகளில் செய்யலாம். முதலாவது விதைகள் மூலம். இதன் விதைகள் நீர் உறிஞ்சப்படாதவாறான உறையைக் கொண்டிருப்பதால் நேரடியாக வளராது. மார்ச் - ஏப்ரல் மாத காலத்தில் நெற்றுக்கள் சேகரிக்கப்பட்டு (ஒரு நெற்றில் 3 தொடக்கம் 10 விதைகள் இருக்கும், ஒரு கிலோவில் 1800 தொடக்கம் 2000 விதைகள் இருக்கும்) நன்றாக வெயிலில் உலர்த்தப்பட்டு, பின்னர் கொதித்து இறக்கப்பட்ட நீரில் ஊறவைக்கப்பட்டு விதைகள் பரிகரிப்பு செய்யப்படுகின்றது. பின்னர் நாற்று மேடையில் விதைக்கப்பட்டு, இரு இலைகள் துளிர்விட்டு நாற்று வந்தவுடன் பொலித்தீன் பைகளுக்கு மாற்றப்பட வேண்டும். விதை முளைப்புதிறன் வீதம் 50 தொடக்கம் 75 சத வீதமாகும். இது கடினமானது.

இரண்டாவது முறை: பதியமுறை மூலம் இனப்பெருக்கம் செய்வது. இதை குச்சிகள் அல்லது தடிகள் மூலமாக நடவு செய்வது சிறந்தது. தடிகளை, செங்குத்தாக நடவு செய்தால், மரம் வளர்ந்த பிறகு, நிறைய பொந்துகள் உருவாகும். அதனால் படுக்கை முறையில் பதியன் போட்டால், இந்த பிரச்னையைத் தவிர்க்கலாம். 6 அடி நீளம், அரை அடி ஆழம் அளவு கொண்ட குழியை வெட்டி, முக்கால் பங்கு மணலையும், காய்ந்த சாணத்தையும் இட்டு, பூவரசம் தடிகளை பதித்து, மண்ணால் மூடி, காற்றுப் போகாமல் மிதித்து, தண்ணீர் தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். ஓரளவு பராமரிப்பின் பின் மரம் வேகமாக வளரும். இது இலகுவானது.
இதய வடிவிலான இலைகள், மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல், குளிர்ந்தக் காற்று, இவைதான் பூவரசு மரத்தினது அடையாளம். பூவுக்கெல்லாம் அரசனாகவிருந்து பல நோய்களை தீர்த்து நூறாண்டுகளுக்கு மேல் வாழ்வதால்தான் இந்த மரம் பூவரசு என அழைக்கப்படுகின்றது.; நூறாண்டுகளுக்கு மேல் வளரும் மரம் காயகல்ப மரம் என அழைக்கப்படும். பூவரசு ஒரு காயகல்பம். அது நூற்றுக்கணக்கான பிணிகளைத் தீர்க்கும் தன்மையது. நமது நிலங்களின் பொருளாதாரம், சமூகவியல், சூழலியல், மருத்துவம், புவியியல், கல்வியியல், கலை, கலாச்சாரம் போன்றவைகளுடன் தொடர்புபட்டு, எங்கள் வாழ்வில் இரண்டறக் கலந்து, ஒரு காலத்தில் செழித்தோங்கியிருந்த பூவரசு மரங்களை மீண்டும் மீளுருவாக்கம் செய்வது எல்லோரினதும் கடமை என்றே நான் நினைக்கின்றேன்.

படங்கள் - பொன்நகர், அறிவியல்நகர், இரணைமடு, வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிகளில் பிடிக்கப்பட்டது.
குறிப்புக்கள்-
·         Vadakovay Varatha Rajan யாழ்ப்பாணத்தில் புகையிலைக்கும் வாழைக்கும் தாழ்ப்பதற்கு வண்டில் வண்டிலாக ( தற்போது டிராக்டர்) பூவரசம் குழைகள் தென்மராட்சியில் இருந்து கொண்டு வரப்படுகின்றன . இன்னும் நகரமயமாகத தென்மராட்சியின் உட்புற கிராமங்களில் இன்னும் பூவரசு வேலிகளே உள்ளன . அண்மைக்காலமாக தகரவேலிகள் ,இம்மரத்தின் அழிவை துரித படுத்துகின்றன
Vadakovay Varatha Rajan யாழ்ப்பாணத்தில் பாரிய முதிர் பூவரசமரங்கள் இருந்தன .இவை இடியப்ப உரல் செய்வதற்காக அழிக்கப்பட்டு விட்டன.
Vadakovay Varatha Rajan யாழ்ப்பாணத்தில் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு பூவரசமரமே பயன்படுகிறது .பச்சை மரம்கூட நன்றாக எரியம் . பல முதியவர்கள் 'இது என்னை எரிக்க' சில பூவரச மரங்களை அடையாளப்படுத்தி தமது வளவுகளில் வைத்திருப்பார்கள்
உடுவில் அரவிந்தன் குறிப்பாக நெஞ்சாங்கட்டைக்கு.
Top of Form
Vadakovay Varatha Rajan மயிர்கொட்டிகள் விரைவாக வளரவேண்டும் என்றால் அதிக போசணை உள்ள இலைகளை உண்ணவேண்டும் . எனவே வண்ணத்து பூச்சிகள் பூவரசயையும் , முருங்கையையும் தேர்ந்தெடுத்து முட்டைகளை இடுகின்றன . இவற்றை அவதானித்த நான் எனது ஆடுகளுக்கு பூவரசம் குழைகளையே கொடுத்து வருகிறேன் .
Thevarasa Mukunthan பூவரசம் இலையை ஆடுகளுக்கு அதிகம் இடும் போது அவற்றுக்கு கொழுப்பு கூடி குட்டி ஈன மாட்டா என ஐயா ( அம்மப்பா) முன்பு சொன்னது நினைவுக்கு வருகிறது.
Vadakovay Varatha Rajan Thevarasa Mukunthan
கிராமத்தில் அப்படி ஒரு கதை நிலவுகிறது .எனது அனுபவத்தில் அப்படியில்லை
Kumaravelu Ganesan நான் என்ன பின்னூட்டம் போடுவம் எண்டு நினைத்தேனோ அவ்வளவும் Vadakovay Varatha Rajan போட்டு விட்டார். விடுபட்ட ஒன்று - வாத்தியாரின் பிரம்பு . அருமையான கட்டுரை Riyas Ahamed .
Ehamparam Ravivarmah பூவரசின் அருமை தெரியாமல் அழிக்கிறோம்.
Mohamed Sabry பயனுள்ள தகவல். நன்றி தோழர் அம்ரிதா
Nawfeer Atham Lebbe இயற்கையை நேசிக்கும் உங்கள் நடத்தை போற்றுதற்குரியதே. அழகே
Siraj Mashoor பயனுள்ள தகவல்கள்.
உடுவில் அரவிந்தன் அருமையான பதிவு.
Slm Hanifa பூ! அரசியே உன் தாள் பணிந்தேன்
Raguvaran Balakrishnan அருமை.பயனுள்ள பதிவு
Thamayanthy Ks எனது வளவின்நாற்புறமும் பூவ ரசுதான்
Vadakovay Varatha Rajan தவிலின் 'கொட்டு' , பலாமரத்தில் அல்லவா செய்யப்படுகிறது .அதுவும் தெருவோர பலாமரம். சிறப்பு என கேள்விப்பட்டுள்ளேன்
Thevarasa Mukunthan கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைத் தொகுப்பொன்றின் தலைப்பு "பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் "இந்த நூலைப் பற்றி நூலகர் என் .செல்வராஜா ( Nadarajah Selvarajah )கொழுந்து இதழில் இப்படி எழுதினார் //பனைமரம் எவ்வாறு யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பிரதியீடSee More

Vadakovay Varatha Rajan Thevarasa Mukunthan
இந்திய இராணுவமும் ,இலங்கை இராணுவமும் ; செயின்புளோக் கொண்டு எம் வேலிகளை அழித்து ,எல்லைகளை இல்லாமல் ஆக்கியபோது ; ஆழ வேர்களில் இருந்து தழைத்து எம் எல்லைகளை அடையாளப்படுத்தியது பூவரசமரங்களே.
Malini Mala Vadakovay Varatha Rajan ஆமாம் பூவரசைத்தான் தாய்க்கதியால் என எல்லைக்குப் போடுவார்கள்Top of Form

Thevarasa Mukunthan அந்தக் காலத்தில் தமிழரசுக் கடசியை கேலியாக "தமிழரசு பூவரசு " எனப் குறிப்பிடுவதாக எனது அம்மம்மா சொன்னதை கேட்டதாக நினைவு
·         Ayathurai Santhan அபிவிருத்திக்கும் இயற்கைக்குமிடையில் ஒரு சமநிலை பேணப்படாவிடில், எல்லா மரங்களும், எல்லா உயிர்களும், இயற்கையுமே தொலைந்து போகும்! Essentials, Comforts. Luxuries என்கிற மூன்றில், மூன்றாவதை முழுமையாயும் இரண்டாவதை ஓரளவேனும் விடாதவரை மீட்சியே இல்லை!
·         Ayathurai Santhan பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்,' 'ஆலவாயன்,' 'அர்த்தநாரி' நாவல்களில் பூவரசும் ஒரு பாத்திரமே!
Kumaravelu Ganesan நிலைக்குத்தாக பதியமிட்டால் அந்த மரம் நன்றாக வராது, கிடையாக பதியமிடவேண்டும் என்ற தகவல் பலருக்கும் புதிதாகவிருக்கும் என்றே நம்புகின்றேன். வேலிக்கு கதியாலாக பாவித்து பழகியதால் இதை ஒருவரும் சிந்தித்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.
Thevarasa Mukunthan கடலில் பட்டி போடுபவர்கள் சொல்வார்கள் பட்டிக்கு ஊன்றிய பூவரசம் கம்பு துளிர்விட்டதாக.
Thevarasa Mukunthan பூவரசம்பூவை பூசைக்குரிய பூவாகக் கருதுவதில்லை. ஆனால் கோவில்களில் திருநீறு சந்தனம் கொடுக்க பூவரசம் இலையைப் பயன்த்துகிறனர்.
Vadakovay Varatha Rajan Thevarasa Mukunthan
மார்கழிப் பிள்ளையார் பிடித்து வைக்கும் போது பூசணிப்பூவையும் பூவரசம் பூவையும் பிள்ளையாரில் வைப்பதை சில இடங்களில் கண்டுள்ளேன்
Thevarasa Mukunthan செல்வச் சந்நிதி கோவிலின் தல விருட்சமாக பூவரசம் மரம் விளங்குகின்றது.
Vadakovay Varatha Rajan வல்லை முனியப்பர் கோவில் தல விருட்சமும் பூவரசே
உடுவில் அரவிந்தன் துலாக்கள் போனதும் பூவரசு ஆடுகால்களை மறந்துவிட்டோம். கொக் (கை) குத்தடிக்கும் பிரபலம்

மற்றைய அரசுகள் (மரங்கள்) இலகுவில் வீழ்த்தப்படுவது போன்று பூவரசுகள் இலகுவில் வீழ்த்த முடியாதவை. வீழ்ந்தாலும் உடனே அதிலிருந்து பல அரசுகள் கிளைத்தெழுந்து ஆட்சி செய்யும்.
(கோணாவத்தை கண்டல் காடு, அட்டாளைச்சேனை)










Poovarasam Poo || பூவரசம் பூ பூத்தாச்சு || S. Janaki Love Melody H
Thevarasa Mukunthan தும்புத்தடி செய்வதற்கு பூவரசம் தடியை இலேசான எரித்து தடியின் தோலை அகற்றிப் பயன்படுத்துவது வழக்கம்
Thiagarajah Wijayendran அற்புதமான அறிவுப் பகிர்வு!
·         Nisa Thurai இடியப்ப உரல் பூவரசு மரத்தில் தான் செய்யப்படும்.
Sarathanjali Manoharan Thank you. It is informative
Prashan Vinayagamoorthy திருக்கோவில் பிரதேசத்தில் களப்பினை அண்டிய கோரைக்களப்பு பகுதியில் 100 கும் மேற்பட்ட மரங்கள் ஓரிடத்தில் உள்ளது.
Riyas Ahamed Prashan Vinayagamoorthy மிகவும் சந்தோசம். அவைகள் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
Sarathanjali Manoharan வன்னியில் சில ஊர்கள் இம்மரத்தின் பெயரைக்கொண்டமைந்திருக்கும் .
பூவரசங்குளம்
கதிரவேலர் பூவரசங்குளம்See more
Ibnu Suhood M. A In 2006 we planted more than 1000 "POOWARASU" seed links from Pottuvil to Akkaraipattu as Coastal belt planting under FOA programme.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...