Sunday, May 31, 2020

புவி வெப்பமடைதல் - ஒரு பார்வை


.எம். றியாஸ் அகமட், சிரேஸ் விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்.


அறிமுகம்:

காலநிலை
மாற்றம் என்ற பதம் சிக்கற் தன்மையானதுஇது விஞ்ஞானத்துடனும், அரசியலுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்டது. அமெரிக்க தத்துவவியலாளர் நோம் சொம்ஸ்கி கூறியதுபோல உலகம் இரண்டு மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. ஒன்று அணு ஆயுதம் மற்றது புவி வெப்பமடைதல். முதலாவது எங்கள் கண்முன்னே தெரிகிறது. மற்றொன்று எங்களுக்க முன்னே உருவாகி வருகின்றது. இரு நிகழ்வுகளுமே பூமியிலிருந்து மனித குலத்தை முற்றாக துடைத்தெறியும் வல்லமை வாய்ந்தன.

பூமியின் மேற்புற பகுதியியின் சராசரி வெப்பநிலையில் ஏற்படும் சீரான அதிகரிப்பு புவிவெப்பமடைதல் எனப்படும். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து வளிமண்டலத்தின் சாசரி வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதும், தொடர்ச்சியாக அதிகரித்துவருவதுமான நிகழ்வையே இது குறிக்கின்றது. இதற்கு பிரதான காரணங்களாக பெற்றோலிய பொருட்களின் தகனம், காடழிப்பு போன்ற மனித செயற்பாடுகளே என காலநிலை மாற்றத்திற்கான அரசுக்களின் குழு அடையாளப்படுத்தியுள்ளது (IPCC). கைத்தொழிற் புரட்சி தொடக்கம் 1950ம் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியக் கதிர்வீச்சு, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகளே புவி வெப்பமடைதலுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என இந்த அமைப்பு கூறியுள்ளது. கைத்தொழிற் பரட்சிக்குப் பின்னர் (1850ம் ஆண்டுக்கு) புவியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 10 பாகை செல்சியசினாலும், காபனீரொட்சைட்டின் செறிவு 28 சதவீதத்தாலும் அதிகரித்திருப்பதாக ஆய்வுக்ள் கூறுகின்றன.

காபனீரொட்சைட்டு, மீதேன், நைதரசனீரொட்சைட்டு, நீராவி போன்ற பச்சை வீட்டு வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கதிகமாகச் சேர்ந்து கொள்வதனால் வளிமண்டலத்தினுள் நுழையும் வெப்பக்கதிர்களை அவை உறிஞ்சும். இதனால், வெப்பக் கதிர்கள் மீண்டும் தெறிப்படையாது வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கும். பூகோள வெப்பமுறுதலின் பெறுபேறுகளாக வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கின்றமையால் அவை பலத்த பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

பாதிப்புக்கள்:
ஆட்டிக் அந்தாட்டிக் பிரதேசங்களிலுள்ள பனிப்பாறைகள் உருகல், கடல் மட்டம் உயருதல், இதனால் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள், வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ், 2.0 பாகை செல்சியஸ் அளவில் உயர்ந்தால் முறையே 69 மில்லியன், 79 மில்லியன் மக்களும் பாதிக்கப்படுவார்கள், இன்னும் 500 வருடங்களில் கடல் மட்டம் 7–13 மீட்டர் வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நடந்தால் உலகின் பல பிரதேசங்கள் கடலில் மூழ்கிவிடும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக மாலை தீவுகள், ஒல்லாந்து ஆகிய நாடுகள் கடலினுள் முற்றாக அமிழ்ந்து விடக்கூடிய அபாயம் காணப்படுகின்றது, கரையோரப் பிரதேசங்கள் நீரில் அமிழ்தல், காடுகளும், பயிர்களும் பல வகையான பீடைகளினால் தாக்குப்படுதல்வெப்பக் காற்று, முருகைக் கற்பாறைச் சூழற்றொகுதி, காடுகள், புன்னிலங்கள் போன்ற வாழிடங்கள் அழிக்கப்பட்டு, அதன் பல தாவர, விலங்குப் பன்வகைமையும் அழிக்கப்படுதல், ஒவ்வாமை, ஆஸ்த்மா, தொற்று நோய்கள் போன்றவை ஏற்படல், சமுத்திரங்களின் வெப்பநிலை அதிகரிப்பால் மீன் போன்ற உயிரினங்கள் குளிரான பிரதேசங்களை நோக்கி இடம்பெயருவதால் மீன்பிடித்துறையில் வீழ்ச்சி, வெப்ப மண்டலத்திற்குரிய அதிக புயல்கள் உருவாதல், அதிக வறட்சி, பலத்த மழைவீழ்ச்சி, வெள்ளம், மண்ணரிப்பு, நிலச்சரிவு, நதிகளின் நீரோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படல், நீர்ச் சூழற்றொகுதியின் நீரின் அளவு குறைக்கப்படல், அதிகரித்த வெப்ப அலை வீச்சு, பாலைவனமாதல் அதிகரித்தல், அதிக பனிப்பொழிவு, அதிகரித்த காபனீரொட்சைட்டு கடலில் கரைந்து, கடல் அமிலமாகி, அவை உயிரினங்களைப் பாதித்தல்போன்ற அனேக பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

புவி வெப்பமடைதல் உருவாக்கும் சமூக பொருளாதார இழப்புகளும் கணக்கிட முடியாதன. வெள்ளம், சூறாவளி போன்ற  பேரழிவுகளால் உண்டாகும் செலவுகளை நாம் ஒவ்வொரு பத்தாண்டு காலத்திற்கும் இரட்டிப்பாக கணக்கிட வேண்டும். ஏனென்றால் கட்டிடங்கள் அதிக அளவுகளை, மாற்றங்களை சந்திப்பதுடன் அவற்றை கட்ட பணமும் அதிக செலவாகும்",
இவை நேரடியாக உணவு, போக்குவரத்து, சுகாதாரம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளைப் பாதிக்கும். அழிவுகளும், சேதங்களும் கூடும்போது இன்சூரன்ஸ், வங்கிகள் திவாலாகும் தன்மை அதிகரிக்கும். இது பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

காலநிலை மாற்றம் சம்பந்தமான விஞ்ஞான ஆய்வுகளின் உதவியுடன், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் காலநிலை நிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் அபாயங்களையும், அதனை நிவர்த்திப்பதற்கான வழிகளையும் முன்மொழியும் நோக்குடன் (The Intergovernmental Panel on Climate Change (IPCC)) காலநிலை மாற்றத்திற்கான அரசுக்களின் குழு என்ற அமைப்பு 1988 ஆம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தற்போது வரை ஐந்து முழு அறிக்கைகளையும் அவ்வப்போது சில சிறப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் அனைத்து உலக நாடுகளும் கலந்துகொண்டு உலகவெப்பத்தை 2  பாகை செல்சியசிற்கு அதிகமாகாமல் 1.5  பாகை செல்சியஸ் என்கிற அளவிலேயே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். அதே மாநாட்டில், ஐபிசிசி அமைப்பு 2018 ஆம் ஆண்டு 1.5  பாகை செல்சியஸ் என்பதைப் பற்றி ஓர் அறிக்கை அளிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தனர். இதன் அடிப்படையிலேயே இந்தச் சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.

2015ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானபோது நிகரகுவா, சிரியா ஆகிய நாடுகள் மட்டுமே அதில் அதிகாரபூர்வமாக இணைந்து கொள்ளாமல் இருந்தன. பின்னர் அவை அந்த அமைப்பில் சேர்ந்துகொண்டன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் றம்ப் பதவியேற்றவுடன் 2017ம் ஆண்டு ஜீன் மாதம் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. தற்பொது அமெரிக்க நாடு மட்டுமே இந்த அமைப்பில் சேராமல் தனித்து நிற்கின்றது.

புவி வெப்பமடைதல் கைத்தொழிற்புரட்சி தொடங்கிய 1870 களிலிருந்து தற்போது வரை அதிகரித்துக்கொண்டே வந்திருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தும் 2030 களில் புவியின் வெப்பம் 1.5 பாகை செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்த முடியாமல் 2.0 செல்சியஸ் அளவிற்கு அப்பால் சென்றுவிடும் என்று கருதப்படுகின்றது. தற்போதைய சனத்தொகையில் 11 சதவீதம் கொண்ட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே 41 சதவீத காபனீரோட்சைட்டை வெளிவிடுகின்றன. 6 சதவீதம் சனத்தொகை கொண்ட ஜப்பான் உட்பட மற்றைய நாடுகள் 17 சதவீதமும், சீனா 15 சதவீதமும் வெளிவிடுகின்றன. ஆனால் 64 சதவீத சனத்தொகையைக் கொண்ட இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகள் 27 சதவீத அளவிலான காபனீரொட்சைட்டேயே வெளிவிடுகின்றன. உலகில் அதிக காபனீரொட்சைட்டு வாயுவை வெளிவிடுவதன் காரணமாக அதிக பங்கை வகித்திருக்க வேண்டிய அமெரிக்கா, காபனீரொட்சைட்டின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு எதிராக இருப்பது வரலாற்றுத் தவறும், சோகமும் ஆகும்.

2015ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில அனைத்து உலக நாடுகளும் கலந்து கொண்டு உலக வெப்பத்தை 2 பாகை செல்சியசிற்கு அதிகரிக்கவிடாமல், 1.5 செல்சியஸ் அளவிவில் வைத்திருக்க வேண்டும் எனத் தீர்மானத்திற்கு உடன்பட்டு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த பாரிஸ் உடன்படிக்கையை பின்பற்றுவதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம். அவையான:
பூமியில் சில அதிக வெப்ப நாட்களைத் தவிர்க்கலாம். வரையறுக்கப்பட்டட கடல் மட்ட உயர்வு (1.5 பாகை செல்சியசால்; வெப்பம் அதிகரித்தால் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 0.26 – 0.77 மீற்றர் உயரும். 2.0 பாகை செல்சியஸால்; வெப்பநிலை அதிரித்தால் கடல் மட்டம் மேலும் 0.1 மீற்றரினால் அதிகரிக்கும்), இரண்டு மடங்கு, தாவரங்களும், விலங்குகளும் பாதுகாக்கப்படும், நீருக்கான அழுத்தம் (நீர்ப் பற்றாக்குறை காரணமாக ஏற்படும்) குறையும், நோய் வீதம், மரண வீதம் குறையும், அத்துடன் உயிர்கொல்லி நோய்களான மலேரியா, டெங்கு போன்றவற்றின் தாக்கமும் குறையும், உலகின் பல பகுதிகளில் பயிர் உற்பத்தி, தானிய உற்பத்தி அதிகரிக்கும், கால்நடைகள் நீர், ஊட்டச்சத்து குறைபாடு , நோய்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.
ஓவ்வொருவரும் தாம் வெளிவிடும் காபனைக் கட்டுப்படுத்துவதிலேயே அல்லது சம்பந்தப்பட்ட பாவனைகளை குறைப்பதன் மூலமே ஓரளவு காபனீரொட்சைட்டு வெளிவிடலைக் கட்டுப்படுத்துவதன் பூமி வெப்பநிலை அதிகரிப்பை குறைப்பதற்கு முயற்சிக்கலாம். காபனை உறிஞ்சுவதற்கான செயற்திட்டங்களை உருவாக்கலாம். பச்சை வீட்டு விளைவைக் கட்டுப்படுத்துவதன் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய பரிகார நடவடிக்கைகளாக பச்சை வீட்டு வாயுக்களினது விடுவிப்பைக் கட்டுப்படுத்துதல், சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளல், காடுகளைப் பாதுகாத்தல், வளர்த்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இலங்கைக்கான பாதிப்பு: புவி வெப்பம் அதிகரிப்பால் இலங்கை பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. இங்கு முறையான ஆய்வுகள் செய்யப்படாததனால், இலங்கை முகங்கொடுக்கவிருக்கும் பாதிப்புக்களை இந்தியாவில் நடைபெற்ற ஆய்வுகளை கொண்டே உய்த்துணர முடியும். ஏனெனில் வளிமண்டலத்திற்கு அரசியல் எல்லைகள் கிடையாது. பம்பாய், சென்னை, கேரள, கர்நாடக வெள்ளம், உத்தரகாண்ட் காட்டுத்தீ, வடகிழக்கு மாநிலங்களின் அனல்காற்றுக்கள் போன்ற பல நிகழ்வுகள் புவி வெப்பமுறலினால் எங்களது அயல்நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தங்களாக இருக்கின்றன. மேலும் 600 மில்லியன் இந்தியர்கள் எதிர்காலத்தில் பாதிப்பை எதிர்கொள்வர் என்றும் கூறப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்பது திண்ணமாகும்.

புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரச்சினை கிடையாது. உலக நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய ஒரு பாரிய பிரச்சினையாகும். இருந்தும் பச்சைவீட்டு வாயுக்களை அதிகமாக வெளியிடும் அபிவிருத்தியடைந்த நாடுகள் இதில் பாரிய பங்காற்ற வேண்டும். இதற்கு அங்கு இது சம்பந்தமான தெளிவுள்ள தலைமை வேண்டும். ஆனால் வரலாற்றில் இதனைக் காண்பது அரிது. புவி வெப்பமடைதல் என்பது கப்பலின் மேற்தளத்திலுள்ள வளர்முக நாடுகளுக்கு கப்பலின் அடிப் பகுதியில் உருவான ஓட்டை. ஒரு நாள் இந்தக் கப்பலே எல்லோருடனம் சேர்ந்து மூழ்கும் என்ற புரிதலைத் தடுக்கும்அதீத இலாபத்தை மையமாகக் கொண்ட உற்பத்திஎன்ற திரை விலக்கப்பட்டாலேயே அந்தக் கப்பல் மூழ்குவதை தவிர்க்க முடியும்.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...