ஏ.எம். றியாஸ் அகமட்


சாச்சா, அற்புதமான நேர்த்தியான தையற் கலைஞர். அவர் எப்போதும் நேர்த்தியாகவும், அழகான உடைகளையுமே உடுத்துவார். ஏப்போதும், தன்னையும், தனது உடைகளையும் சுத்தமாக வைத்திருப்பதில் அதிக அக்கறைகாட்டுவார். அவர் இனிமையான குரல் வளம் வாய்க்கப்பெற்ற பாடகரும்கூட. அவரிடம் அலாதியான இசை ஞானமும் இருந்தது. 1980களின் நடுப்பகுதியில் இலங்கை கானொலியின் பாட்டுக்குப் பாட்டு போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டியது இன்னும் ஞாபகத்திற்கு வருகிறது. அதே காலப் பகுதியில் வானொலி விவசாயப் போட்டியில் பங்குபற்றியதும் ஞாபகத்திற்கு வருகிறது.

சாச்சா ஒரு இயற்கை உபாசகன். இயற்கை விரும்பி. மிக நீண்ட பயணங்களை மோட்டார் சைக்கிளிலேயே நண்பர்களுடனே பயணிப்பார். அவருக்கும் அவரின் சில நண்பர்களுக்கும் இடையே இருபது வயது வித்தியாசம்கூட இருக்கும்.

அவரின் பழைய வீட்டிற்கு அருகில், புதிய வீடு ஒன்றை கட்டத் தொடங்கும்போது, அந்த மா மரத்தை வெட்டிவிட பல ஆலோசனைகள், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தபோதும், சாச்சா எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த மரத்தை அவர் மிகவும் நேசித்தார். இலங்கையின் எங்கோ ஒரு முனையிலிருந்து மரணத்தின் விதையாக அந்த மரத்தை கொண்டு வந்த போதும், அந்த மரத்தை யாரும் வெறுத்ததை நான் அவதானிக்கவில்லை.
அவரின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த சனத்திரளைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். என் வாழ்க்கையில் நான் கண்ட மிகப் பிரமாண்டமான இறுதி ஊர்வலங்களில் ஒன்று அது. பணத்தைத் தவிர எல்லாவற்றையும் சம்பாதித்த சாச்சா அன்று மிகப் பெரிய செல்வந்தனாக எனக்குத் தெரிந்தார்.
தன்னைச் சூழ்ந்துள்ள சுழிகளின் அழுத்தங்களை உள்வாங்காமல், வாழ்க்கையை இயல்பாகவும், மகிழ்வாகவும் எதிர்கொண்டு, தனது சக மனிதர்களை எப்போதும் மதித்து, சந்தோசமாக வைத்திருந்த ஒரு தந்தையாக, நண்பனாக, உறவினனாக, ஆசிரியனாக, உளவளத்துணையாளராக, ஆற்றுப் படுத்துனராக, தையற்காரனாக, கலைஞனாக, பாடகனாக, ஓவியனாக, பொழுதுபோக்கு மீனவனாக அவர் நிரப்பியிருந்த வெளிகள், இன்று அவர் இல்லாதபோது மிகப் பிரமாண்டமான இடைவெளியாய் விரிகிறது. சாச்சாவின் மரணம் மந்திரக் கீசாவினுள் இதுவரை காலமும் அடக்கிவைக்கப்பட்டிருந்த அவரின் பிரமாண்டத்தை திறந்துவிட்டிருக்கின்றது. இன்னும் வியந்து கொண்டிருக்கின்றேன். மரங்களுக்கு பல கதைகள் இருக்கின்றன. அதில் இப்படி ஒரு கதையும் இருக்கிறது. இது ஒரு மா மரத்தின் கதை. இருக்கும்போது மரங்களை கொண்டாடியது இல்லை உலகு.
No comments:
Post a Comment