யானை - 03

”இந்த கொம்பன் யானையும், இந்த மனிதரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மனிதர் ஏதோ பணிக்கர் எனப்பட்டார் (பின்னாளில்
உமறு லெப்பை பணிக்கர் எனத் தெரிந்தது). 1925 களில் ஏறாவூரில் பிடித்து வளர்க்கப்பட்டு, பின்னர் தலதா மாளிகைக்கு அன்பளிப்பாக வழங்கினார். பெரகராக்களில் பங்கு பற்றும் அந்த யானை ராஜா என அழைக்கப்பட்டது. பின்னர் ஐம்பது ஆண்டுகள் சேவையாற்றி 1988ல் இறந்து போனது. அதனால் ஏறாவூருக்கு ஒரு பெருமை இருந்தது. ஏறாவூரையும், அதன் மைந்தரையும் (பணிக்கரையும்) கௌரவிக்க அரசு பணிக்கரையும், யானையையும் ஆயிரம் ரூபா தாளில் அச்சிட்டது” என்று ஒரு தேர்ந்த பேராசிரியர் போல கூறி முடித்தார். இல்லை கற்பித்து முடித்தார். பின்னர் தமிழ், சிங்கள மொழி ஒப்பீடு, திரிபுகள் என மொழிக்குள் பிரவேசித்தார். ஆங்கிலத்திலேயே இவை போய்க் கொண்டிருந்தன. எனக்கு அவர் வித்தியாசமான பொறுப்பதிகாரியாய் தெரிந்தார். பின்னர் எனது கோரிக்கைக்கு ஏற்ப, ஒரு கடிதத்தையும் தந்தார். பின்னாளில் எஸ்எல்எம். ஹனிபா மூலம் பணிக்கரின் கொம்பன் யானையை இலகுவாக பின்தொடர முடிந்தது. விசித்திரமான கதைகளினால் நாங்களும், எங்கள் வாழ்க்கையும் சூழப்பட்டிருக்கிறது. அவைகளை அசைபோட்டு பார்க்கும்போது வியப்பு வந்து போவதை தவிர்க்க முடிவதில்லை.
No comments:
Post a Comment