Saturday, October 8, 2011

மந்திரச் சேவல்கள்..., விலங்குகள்..., மிருகங்கள்...


-அம்ரிதா ஏயெம்-
மண் வாரி இறைக்கப்பட்டு புழுதி பறந்து கொண்டிருந்தது. இந்தப் புழுதிகள் எங்கு போய்ப் படியப் போகிறதோ?. மண் அள்ளிப் போடல் நடந்துகொண்டிருந்தது. அந்தப் பெரிய மரத்தின் மறைவிலிருந்துதான் கட்டிகளாயும் மண்களாயும், புழுதியாயும், மண் அள்ளிப் போடல் நடந்து கொண்டிருந்தது. நிலம் கீறும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது? எது நிலம் கீறி மண் அள்ளிப் போடுகிறது? என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு பிறகு சாமரப் பருமன் இறகு ஒன்று தெரிய ஆரம்பித்து, எனக்கு ஆச்சரியத்தையும் பயத்தையும் உண்டாக்கி, காட்சி முழுமையாகியது. நானோ என்னை மறைக்கக்கூடிய ஒரு மரத்தின் மறைவிலிருந்து ஒழிந்து பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் காட்;சி முழுமையாகியது. ஒரு பெரிய ஆறு அடி உயரமுள்ள சேவல். சிவப்பும் மஞ்சளும், கறுப்பும் கலந்த நெருப்புக் கண் கொண்ட சேவல், நிலம் கீறி மண் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தது. இ;ந்த மகா பெரிய சேவலைப் பார்த்ததும் எனக்குப் பயம் தொற்றிக்கொண்டது. அதன் ஆபத்து ஏற்படுத்தும் வீச்செல்லைக்கு அப்பால் நான் ஒழிந்து பார்த்துக் கொண்டிருந்தபடியாலும,; நான் காண்பது கனவென்றபடியாலும் எனக்கு பயம் வரவில்லை. அந்த நாள் முதற் கொண்டு இந்தநாள் வரைக்கும் கனவு கலரா? அல்லது கறுப்பு வெள்ளையா? விவாதம் போய்க் கொண்டிருக்கின்றது. நாளை கனவு கலைந்து காலை விழித்தவுடன் கனவு கலர் என்று புறூஃப் பண்ண வேண்டும் என்று கனவிலேயே நினைக்கிறேன். நினைத்துவிட்டு, நிகழ்கால நனவிலேயே நான் கடந்த கால நனவுகளை தொடர்புபடுத்துகிறேனே, அட நான் என்ன பெரிய புத்தி ஜீவியாக இருக்க வேண்டும்? என என்னை எண்ணி பீற்றிக் கொள்கிறேன். ஆனால் விடிந்தால்தான் தெரியும் அது பீற்றலா அல்லது பிதற்றலா என்று.
இப்போது மரத்தில் கையை வைத்து மறைந்திருந்து சேவலை பார்க்கிறபோதுதான் இந்த மரம் பற்றிய எண்ணம் ஏற்படுகிறது. முதலைத் தோல் பட்டை, சாதாரண அளவு மரம். இப்போது நான் மறைந்துகொண்டிருந்தது புல் என்று உணர ஆரம்பிக்கிறேன். மகா பெரிய சேவலைக் கண்டவுடன் அதனைச் சார்ந்து நான் மறைய உதவியது புல் என உணர்ந்தேன். வாழ்க்கையை இயக்குவதே சார்பியம். வாழ்க்கையின் ஊற்று, நம்பிக்கை மற்றும் இத்யாதி எல்லாமே சார்பியம். சிறியது எனப்படுவது பெரியதைச் சார்ந்து, குட்டையெனப்படுவது உயரத்தைச் சார்ந்து, திசையோ நிலையைச் சார்ந்து. ஒரு தடவை இடதெனப்படுவது, மறுதடவை வலதெனப்படும். துன்பம் என்பது இன்பத்தைச் சார்ந்து, துன்பத்துள் வாழ்தல் அல்லது வாழ்தலுக்குள் துன்பம் என்பது பற்றிய ஒப்பீடு இன்பத்துள் வாழ்ந்துஃவாழ்தல் அல்லது வாழ்ந்ததற்குள்ஃவாழ்தலுக்குள் இன்பம்பற்றிய சார்பு. உலகமே சார்பும், ஒப்பும். ஐன்ஸ்ரைனுக்கு சாராதது ஒளிமட்டும். ஆனால் இது கூட இன்று சார்பு. ஒன்றைச் சார்ந்து ஒப்பிட ஒன்று இல்லாது அல்லது தெரியவராது இருக்கும் வரை வாழ்தல் பற்றிய பிரச்சினைகளின் தன்மை பழக்கமாகிவிடும். திடிரென இப்போது, சேவல் என்னைப் பார்த்தது. என்னைக் கிலி பற்றியது. மெல்ல மெல்ல என்னை நோக்கி அடியெடுத்து வைத்தது. நானும் பின்னால் ஓடத் தொடங்க, அதுவும் துரத்த தொடங்குகிறது. பாய்ந்து என் மண்டையில் ஒரு கொத்து கொத்தினால் போதும், என் மூளை கலங்கி வெளியே வந்துவிடும். இப்போது சேவல் என்னை வேகமாக நெருங்கிவிட்டது. கடவுளிடம் உதவி கேட்கின்றேன். உதவி வந்துவிட்டதுதான் என்று நினைக்கின்றேன். “டொக்.. டொக்“ என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. கனவு கலைந்து எழும்பி, கதவைத் திறந்தேன். என்னை சேவலிடமிருந்து காப்பாற்றியது சசி என்று தெரிந்தது.

உடனே நேரத்தைப் பார்த்தேன். காலை 7.55 மணி. எட்டு மணிக்கு இரண்டு பேருக்கும் ஒரு வேலை இருந்தது. நேரந் தவறாமை முக்கியம். உடனே டெனிமை எடுத்து காலுக்குள் நுழைத்து, முன்னாலிருந்த சிங்கில், நின்ற நிலையில் முகம் கழுவிக் கொண்டிருந்தபோதுதான் பல் துலக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்தது. தூரிகையில் பசை வைத்து ஐந்தாறு தரம் இழுத்துவிட்டு, மேசையில் கிடந்த இரகுநாதையரின் திருக்கணித வாக்கிய பஞ்சாங்கத்தையும், அகராதியையும் பரர்த்துவிட்டு எனது பையுடன் மோட்டார் சைக்கிளில் நானும், சசியும் புறப்படத்தொடங்கம் போது நேரம் 8.00 மணி.

கனவு கலரா? கறுப்பு வெள்ளையா?; மனித சஞ்சாரமற்ற மலையடிவார சமநிலத்தில் பரந்து கிடந்த, மஞ்சள் சூரியகாந்திப் பூந்தோட்டத்தையும், அதிலுள்ள மஞ்சள் அரக்கர்களையும், மஞ்சள் விமானத்தையும், நான் எனது ஆறாவது வயதில் கனவில் கண்டதாக நினைத்திருந்த கனவு எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது கலர்களுடன். ஆனால் அம்புலிமாமா வாசித்துவிட்டு சாப்பிடாமல் படுத்ததன் விளைவாகவும் இருக்கலாம். மண்டை வலிக்கத் தொடங்கிவிட்டது. அறவே மண்டைக்குள் ஞாபகம் வரவில்லை. மிகவும் முயற்சி பண்ணுகிறேன். சேவல் பற்றிய உணர்வு இருந்தது. ஆனால் நிறம் பற்றிய உணர்வு இல்லை. ஆனால் மனம் மஞ்சள், சிவப்பு, கறுப்பு என்று பீற்றத் தொடங்குவது பொய்யெனப்பட்டது. பொய்மை என்ற தளத்தை உறுதியாக்கி அதன் மேல் சூனியத்தை வெளியாக்கி, வாழ்வமைத்து, கட்டடங்கள் கட்டி, பொருளாதாரம், அரசியல் உருவாக்கி அருவத்திற்கு உருவம் கொடுத்தால் சந்தோசப்படுவதுதானே பேதமை மனம்.

சாப்பாடு என்ன மாதிரி என்று சசி கேட்டான். நான் சாப்பிட வேண்டும் என்று பேசாமல் தலையாட்டினேன். சசி ஏதாவது வாங்கி வர அந்தச் சந்தைக்கருகில் சைக்கிளை விட்டிறங்கி போனான். அவன் ஏதோ பெட்டிக் கடைக்கு தூரத்தில் நுழைந்து கொண்டிருந்தபோது, ஒரு லொறி சந்தைக்கருகில் வந்து நின்றது. உடனே ஒரு நடுத்தர வயதுக்காரன் லொறிக்கருவில் வந்து நின்றான். அதனைத் தொடர்ந்து எங்கிருந்தெல்லாமோ ஏழெட்டுச் சிறுவர்கள் முதலாளி...முதலாளி என்று கத்திக்கொண்டு வந்தார்கள். எல்லோரும் பத்து வயதுக்குள்தான் இருப்பார்கள் போல. இரண்டு பேரைத் தவிர, மற்றவர்கள் ஒருவருக்கும் சட்டையில்லை. மெலிந்த கறுத்த தேகம். எப்போதோ பாடசாலையில் கொடுத்த நீலக் களிசான்கள், சிலரிடத்தில் அர்ணாக்கொடியின் உபயத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. அப்போது முதலாளி என அழைக்கப்பட்டவன், ஒரு பையனின் தோளில் ஒரு மூடையை வைக்கிறான். அது உருளைக்க்pழங்கு, 15 கிலோகிராம் நிறையுடைய மூடை என்று தெரிந்தது. இன்னும் ஒரு மூடை என்றான் சிறுவன். முதலாளி மீண்டும் வைத்தான். அந்த இரு மூடையுடனேயே அவன் துவளத் தொடங்கினான். இன்னும் ஒரு மூடைக்காக கெஞ்சலுடன் முதலாளியைப் பார்த்தான். முதலாளி மறுத்துவிட்டான். இதற்கிடையில் மற்றச் சிறுவர்களுக்கிடையில், மூட்டை சுமக்க போட்டியேற்பட்டுவிட்டது. முதலாளி எனக்கு.. எனக்கு... முதலாளி... நான்.. நான்... எனச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்க முதலாளி ஒவ்வொருவரின் தோள்களிலும், மூட்டைகளை வைக்கத் தொடங்கினான். முதலில் கிழங்கு மூட்டை வாங்கிய அந்தச் சிறிய நாட்டாண்மையை பார்க்கிறேன். 25 கிலோ பையன் 30 கிலோவை துவண்டு, துவண்டு தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தான். முடிவுப் புள்ளியில் மூட்டையை போட்டுவிட்டு, மீண்டும் திரும்பிவந்து, மீண்டும் சுமப்பான் போல. இவர்களின் தாய், தந்தை, சகோதரர்கள் எல்லாம் எங்கே? இன்னும் ஐந்தாறு வருடங்களில் இவர்களிடம் சிறுபிள்ளைப் பருவம் தொலைய, இவர்களும் தொலைந்து போவார்கள். பின் இவர்களின் அடுத்த வாரிசு மூட்டை சுமக்கும். மீணடும் திரும்பிப் பார்க்கிறேன். இப்பொதும், துவண்டு, துவண்டு இந்தப் பையன்கள்; மூட்டை தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் சுமப்பது மூட்டையல்ல. அவர்களின் வாழ்க்கையை. இப்போது மோட்டார் சைக்கிள், சந்தையிலிருந்து மேற்குப் பக்கமாக காடும் வயலும் சார்ந்த, இடம் நோக்கி போய்க் கொண்டிருந்தது. பாதையே பள்ளம் படுகுழி. ஒரு தடவை, நான் யானை எலும்புக்கூடு எடுத்துவர காட்டுக்கு ரெக்றரில் சென்றபோது முன் ரயர் கழண்டு பறந்ததும் இந்தப் பாதையில்தான்.

போவது வயலும் காடும் சார்ந்த இடங்கள் என்றாலும், இங்கேயும் மக்கள் வசிக்கின்றார்கள்தான். இப்போது வெயில் மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. பாதை நெடுக ஆங்காங்கே மக்கள் புள்ளியாய்த் தெரியத் தொடங்கினார்கள். ஒரு பெண், தலையில் பெரிய சுமையுடன், அந்தப் பாதையில் வயிறு பெருத்து வந்து கொண்டிருந்தாள். கிட்ட வந்தவுடன் அவள் கர்ப்பஸ்த்திரீ என்று தெரிந்தது. வயிறு வெள்ளையும், நீலமும் பாரித்த மாதிரி இருந்தது. எப்படியோ இன்னும் இரு மாதத்தில் பிள்ளை கிடைத்துவிடும். வயிறு கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. இரட்டைப் பிள்ளை என்றால் ஒரு கொடியை இருவருமா? அல்லது இருவரும் இரு கொடிகளையா பகிர்ந்து கொள்வார்கள்; என்று தெரியவில்லை. இந்த வெயிலில், இப்படி வயிற்றிலும், தலையிலும் சமந்து கொண்டு..., மனதில் இதைவிடப் பாரங்களும் இருந்தால், வயிற்றினதும், தலையினதும் பாரங்கள் ஒரு துரும்பாகும். சுமைகளுடன், அந்தப் பெண்ணின் நடை, நடைமுறைச் சாத்தியமா? தெரியவில்லை. ஆனால் உண்மை. கருவினிலே அடிபடத் தொடங்குவதால் அவர்களின் மக்கள் வீரர்களாகிறார்கள். யாராவது, தனியேயும், கூட்டமாகவும், அந்தப் பாதைகளில் நடந்து வரும்போது, கல், மண் ஏற்றிவரும் உழவு இயந்திரங்கள் அவர்களை ஏற்றிச் சென்று இறக்கிவிடுதல் ஒரு எழுதப்படாத கடமை.

ஒரு பையன் தன் தலையுயர சைக்கிளில் பின்பக்கமும், பின் ரயரின் இரு ஒரப் பக்கங்களிலும் மொத்தமாக பெரிய மூன்று கருங்கற்களை கட்டிக் கொண்டு.. இல்லை.. விறகு அடுக்கி கட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். மிகவும் சிறிய வயது. காலில் செருப்பு இல்லை. சைக்கிளுக்கு கூட மிதியடிக் கட்டைகள் இல்லை. இந்தப் பாலை வனத்தில் இந்த வெறும் பாதத்தால் எப்படி அந்த இரும்புக் கம்பியை மிதித்து இந்தப் பாரத்தை இழுக்கிறானோ தெரியாது. பாதை பள்ளமும், படுகுழியும் ஆனபடியால், மோட்டார் சைக்கிள் அவனுக்கு அருகே வர, அவன் இறங்கி சைக்கிளை உருட்டத் தொடங்கினான். என் கடைசித் தம்பியின் வயதைவிட சின்ன வயது. மடித்துக் கட்டிய சாரன் விறகு பட்டு கிழிந்திருந்தது. முழங்காலுக்கு சற்று கீழே பின் பகுதியும், விறகு கிழிபட்டு, இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இது புதிய காயம் இல்லை என்று விளங்கியது. பழைய காயம் தொடர்ந்த தாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால், இரத்தம், வலி பற்றிய பிரக்ஞையை முகத்திற் காட்டாமல், சைக்கிளை உருட்டிக் கொண்டிருந்தான். பெருங்குடல் சிறுகுடலைக் கவ்வ வலி பிறக்கும். அவ்வலியை விட இது என்ன பெரிதா? இந்த விறகு அடிமாட்டு விலைக்கு விலைபோய் எரிந்தால்தான், அவன் வீட்டு அடுப்பும் எரியுமாக்கும். அடுப்புடன் சிலவேளைகளில் மனமும்தான். இதே மாதிரி இன்னொருவன், தன் குடும்பத்தை மிதக்க வைக்க, இரு பக்கமும், தோணியின் கொல்லாவைக் கட்டிக் கொணடு; ஓடிக் கொண்டிருந்தான். இன்னொருவன் தன் குடும்பத்திற்கு பசியிலிருந்து வேலி கட்ட காட்டுக் கம்புகளை கட்டி ஓடிக் கொண்டிருந்தான்.

எங்கே எந்தளவு ஆழம் என்பது பற்றிய பயத்துடன் வேகமாக மணலாற்றை ஆழங்குறைந்த பகுதியூடாக கடந்தோம். அப்போது ஆற்றுக்குள், எங்களுக்கு நேரே அந்த ஆழம் குறைந்த பகுதியால், ஒரு பெண் தன் கைக்குழந்தையுடன் வருவது தெரிந்தது. ஆற்றைக் கடத்தல் நடந்து கொண்டிருந்தது. இரு மாதங்களுக்கு முன், இப்படி ஆற்றைக் கடத்தலில் ஒரு தாயும் பிள்ளையும் மடுவிற்குள் அகப்பட்டு இறந்து போனது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. வெயில், கைக்குழந்தை, தாய், ஆறு, ஆழம் எனக்கு வியப்பாகவும் புதுமையாகவும் இருந்தது.

உடைந்த பிரமாண்டமான சிவப்பு பாலத்தின் கீழால், தாண்டி, புதைகின்ற களி;ப்பாதை தாண்டி, குறுக்குப் பாதையில் வேறொரு பாலத்தடி வந்தோம். மோட்டார் சைக்கிளை நிறுத்தி, றெளசரை மடித்து விட்டேன். பாலத்தின் கீழ் நீர் வடிந்தோடிக்கொண்டிருந்தது. பத்து அடிக்கு கீழிருந்த பாலத்தின் கீழ் மெல்ல இறங்கத் தொடங்கினோம். நீர் வடிந்தோடிக் கொண்டிருந்தது என்றாலும் அவ்வளவு வேகமில்லை. நான் முதலில் நீருக்குள் அடியெடுத்து வைத்தேன். கால் சேற்றில் புதையத் தொடங்கியது. சசி கவனம் என்றான். இப்போது நீர் வழிந்தோடும் மதகின் கட்டிலிருந்து ஆற்றிற்குள் இறங்கிவிட்டேன். சசியும்தான். இடுப்பு பிடித்த தண்ணீர். “சசி எங்கே முதலை“ என்றேன். “அந்தப் பக்கம்தான் இருக்க வேணும்” என்று ஒரு திசையைச் சுட்டிக் காட்டினான். இருவரும் சேற்றுக்குள் புதைந்து முதலையைத் தேடி அந்தப் பக்கம் போய்ப் பார்த்தோம். காணவில்லை. அந்த இடத்தில் கிடந்த, நேற்று சூடுபட்டு இறந்த ஆறரையடி முதலை எங்கே?. இங்கேதானே கிடக்க வேண்டும். சசியும் நானும் ஆளுக்கொரு பக்கம் தேடினோம். முதலை எங்கேயும் இல்லை. ஒரு வேளை, வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டதோ? அல்லது ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து பிரப்பம் காட்டுக்குள் முதலையை அடித்துச்சென்றுவிட்டதோ?. நானும் சசியும், பிரப்பம் கிளைகளை பிரித்து உட்செல்ல முயன்றோம். ஆனால் முடியவில்லை. கையில் முட்கள் தைக்கத் தொடங்கியது. முடியவில்லை. முயற்சியைக் கைவிட்டோம். முட்கள் தைக்காமலிருந்தால், உட்சென்றிருப்போம். ஒரு வேளை முதலை அங்கேயும் இல்லாமலிருந்தால், முட்கள் தைத்திருக்கக்கூடாதுபோல இருக்கலாம். ஏனெனில் உள்ளே சென்றது அநாவசியம் எனக் கருதுவோம் என்ற படியால்.

திடிரென பாலத்தின் மேல், ஒரு கறுத்த, மெல்லிய, நீல களிசான் பையன் சிரித்துக்கொண்டே தேடுவது என்ன என்று கேட்டான். முதலையை என்றேன். “காலையில அங்கதான் படுத்தது, அப்ப வெறெங்காவது போயிருக்கும்” என்றான். என்ன.. நேற்றுச் சுட்ட ஆறரையடி முதலை எப்படிப் படுக்கும் என்றேன். “அண்ணன் நீங்க நிக்கிறது முதல பாளியிலதான்“ என்றான். உடனே முதுகுப் பக்கம் இருந்த சிறுநீரக மேற்பட்டை, அட்ரீனலின் சுரந்து, இதயத் துடிப்பை கூட்டி, “சசி லெற்ஸ் மூவ்“ என்று என்னை கத்த வைத்து, வேகமாக இருவரையும் நாகமரம் இருந்த கரைநோக்கி கரையேற வைத்தது. பாலப் பையனை பார்த்தேன். மறைந்துவிட்டான். பழப் பரிட்சை வைக்க வந்த தேவகுமாரன் போல் தோன்றி சிரித்து மறைந்து விட்டான். கெம்பஸ் மியுசியத்திற்கு ஒரு முதலை மிஸ் பண்ணிவிட்டது கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. நேற்றிருந்த காட்சி நிகழ்காலத்துடன் முறுகித் திரிந்து, பொய்யாகி, எதிர்காலத்துள் சென்றுவிட்டது. யதார்த்தமும், அயதார்த்தமும் சண்டையிட்டு எதிர்காலத்தை துரத்திச் சென்று கொடியாய் என் என் காலைச் சுற்றிப் படர்ந்தன. கொடியை விலக்கி தூரே எறிந்த போதுதான் பெருமூச்சு வந்தது சிறுமூச்சின் ஒலியைவிட சத்தமாக.

வேகமாக கரையேறி, நாக மரம் பிடித்து தலை நிமிர்கிறேன். அது கவிதைச் சூழல். சிறுபிள்ளையின் வயிற்றில் வாயால் ஊத, பிள்ளையின் வயிற்றுத் தசையும், எங்களின் கன்னத் தசையும் அலையியக்கமாக மாறி மாறி காற்றினால் ஏறியிறங்குவது போல வயலிலிருந்த நெற் புற்களும், அப்போது கேட்கும் சிறுபிள்ளையின் சிரிப்பு போல், வாய்க்கால் நீரின் ஒட்ட ஒசையும், அதனால் கிடைக்கும் சந்தோசம் போல் தென்றலும் இருந்து சூழலை இனிமையாக்கின.
“தம்பி இது பாளி மடு ஆறு” என்றுசொல்லி ஒரு முதியவர், நிறைய முதலைப் பாளிகளை காட்டினார். ”ஒரு நாளைக்கு நீ முதலை தேடி முதலைப் பாளிக்குள்ளேயே இறங்குவாய்” என்று எனது ஆசிரியர் அடிக்கடி சொல்வதை நினைக்க எனக்கு சிரிப்பு வந்தது. இதை சசியிடம் பகிர்ந்;தேன். “நாசமத்துப் போவான், இடியுழுந்து போவான், கண்ணத் திண்டிருவான்” என்று சத்தம் போட்டு, மரியாதை இராமனிடம் நீதிகேட்டு வருவதுபோல் எங்களிடம் ஒரு பெண் வந்தாள். அவளாகவே கதைக்கத் தொடங்கினாள். தன்னுடைய, சேவல் கோழிகளை, கூட்டுடன் திருடன்ஃதிருடர்கள் தூக்கிக்கொண்டு போய்விட்டார்களாம். திருடர்களை யாரென்று கண்டு பிடிப்பாளாம். ஏனென்றால் திருடர்களின் காலடி மண்ணை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாளாம். எங்களையும் வந்து பார்க்கச் சொன்னாள். இரண்டு மூன்று காலடிகளைக் காட்டி, பனை ஓலைப் பெட்டியால் மூடத் தொடங்கினாள். அங்கேயும், இங்கேயும் காலடிகளிலிருந்து மண்களை கைபடாதவாறு வெள்ளைச் சீலைக்குள் அள்ளத் தொடங்கினாள். அந்த மண்ணை ஐயரிடம் கொண்டு போனால், ஐயர் சூனியம் செய்வாராம். உடனே திருடர்கள்ஃதிருடன் இறந்து விடுவானாம். அதைவைத்து திருடர்கள் யாரென்று கண்டுபிடித்து விடலாமாம். எனக்கு வியப்பாகவும், மலைப்பாகவும் இருந்தது. அப்போது முதியவர், நாவல் மரத்திற்கு அடியிலிருந்த பற்றைக்குள்ளிருந்து சேவல்கள் இல்லாத கூட்டை மீட்டார். கோழிக் கூட்டைக் காண அவளுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது. இன்னும் ஏசத் தொடங்கினாள். ஆளரவம் குறைந்த இந்க கானகத்தில் இக் கோழிகள் இவளுக்கு பிடிமானமாக இருக்கலாம். அதுவே அவள் வாழ்தலுக்கான இருப்பையும் அர்த்தப்படுத்தலாம். “கோழிகளுக்கு எவ்வளவு வரும்” என்று கேட்டேன். “எழுநூறு” என்றாள். ஐயருக்கு நாநூறு, ஐநூறு அதை விட மேலயும் போகுமென்றாள். செலவு நன்மை பகுப்பாய்வை சொன்னேன். பழிவாங்க அடம்பிடித்தாள். என்ன! ஆடு காப்பணம், சுமை கூலி முக்காப் பணம் போல். சட்டி சுட்டு கைவிடும் வரை ஒன்றும் இங்கே பிரயோசனமில்லை. ஆற்றைப் பார்க்கிறேன் முதலைப் பாளி என்று தெரியாதவரை முதலையை நிம்மதியாக பாளிக்குள் தேடலாம். முதலையை நாமோ அல்லது நம்மை முதலையோ காணாத வரை. நனவுகளிலேயே காலொடிந்த சேவல்கள் என்னமாய் ஓடுகின்றன, சிறகொடிந்த சேவல்கள் என்னமாய் பறக்கின்றன. சொண்டுடைபட்ட சேவல்கள் என்னமாய் பொறுக்கித் தின்னுகின்றன. தொண்டை நசிந்த சேவல்கள் என்னமாய் கூவுகின்றன. ஒடிந்ததற்கும், உடைந்ததற்கும், நசிந்ததற்கும் எதிராக ஏவாத மந்திரம். என்ன! மந்திரம். இந்த மந்திரம் பரா சைக்கொலஜியா அல்லது மெற்றாபிசிக்ஸா அல்லது இரண்டின் கலவையா? விஞ்ஞானத்தின் வியாபகம் மட்டுப்படுத்தப்பட்டது அவதானிக்க முடியாததை ஆராய முடியாததாலாகும். அவதானிக்க முடிந்த சேவல்களையாவது ஆராய்ந்து கிழித்துத்தான் போட்டார்கள். கழுதைகளைச் சுமக்கும் சுவர்ச் சித்திரப் புத்தகங்கள். வாந்திகள், மலங்கள், அழுக்குகள், விசம் கக்கும் சுயநலமிகள். “அம்மா, கவனம் உங்கட இல்ல எங்கட யாரின்ட கால் மண், தவறுதலாக போகப் போகுது..” என்றேன். அதை நான் நக்கலாக சொல்லவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாதாக அவள் முகம் காட்டியது.

இடுப்பிலே குறுக்காக சேலை செருகி இப்போது ஒற்றையடிப் பாiதியிலே மந்திரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள். இறகுகள் இல்லாத வாய் பேசாத கோழிகளுக்காக மரியாதை இராமன்கள் பாவம். மனம் இறுகத் தொடங்கியது. இதிலிருந்து தப்ப வேண்டு;ம். கடவுளிடம் உதவி கேட்டுவிட்டு, சசியை அர்த்தபுஷ்டியுடன் பார்க்கின்றேன். “டொக்.. டொக்..” என்று சத்தம் கேட்கத் தொடங்கியது.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...