Saturday, October 8, 2011

புதிய அடிமைச் சங்கிலிகள்-02

புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் 02

“ஓசியிலயெண்டா, அம்மாக்கொண்டு, அப்பாக்கொண்டு” என்ற மனோபாவந்தான் எம்மைப் பீடித்துள்ள பீடையும் முடுமையுமாகும். இந்த பிரதான மனோபாவத்தைச் சரியாக எடைபோட்டதினால் தானோ என்னவோ வல்லரசுகளினதும், ஏகாதிபத்தியத்தினதும் அடிமைச் சங்கிலியிலிருந்து விடுபட்டுக் கொண்டதாக, பெரிதாகப் பீற்றிக்கொண்டு, பழம்பெருமை, வீறாப்புப் பேசிக்கொண்டு திரிந்தாலும், நாம் இன்னும் அடிமைகளாகவும் அவர்களில் தங்கியுந்தான் இருந்து கொண்டிருக்கிறோம். கிடைத்த சுதந்திரம் என்பது கொள்கைரீதியான அளவில்மட்டுந்தான். கலை, கலாசாரம், பொருளாதாரதளங்களில் இவர்களின் ஊடுவல்கள் மிகவும் அபாயகரமானதாக இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன. இந்த ஊடுருவல்களை பகுத்தறிவதற்கு துறைசார் நிபுணத்துவம் மிகவும் முக்கியமானது. இவைகளில் சில சாதாரண புலனுணர்விற்கு உட்பட்டனவாகவும், மற்றும் பல புலனுனணர்விற்கு அப்பாற்பட்டவையுமாகும். இவைகளை பகுத்துணர நவீன தொழில்நுட்பம் தேவை. (ஓநாயிடமிரு;நது ஆட்டைக் காப்பாற்ற நரியைக் கூப்பிட்ட கதை மாதிரி). இதற்கு கூட ஏகாதிபத்தியத்தில்தான் நாம் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது.

விக்ஸ் எனப் பலராலும் அழைக்கப்படும் “யுக்கலிப்ரஸ்” என்னும் மரங்கள் இன்னும் பரவலாக கிராமங்களில் காணப்படுகின்றன. மக்கள் இதனை தடிமல் மற்றும், சளி உபாதைகள் ஏற்படும் போது விக்ஸ் இலையை அவித்து ஆவியை உள்வாங்குவதன் மூலம் நிவாரணம் பெறுகிறார்கள். அவுஸ்தரேலியாவைப் பிறப்பிடமாக கொண்ட இம்மரங்கள் 1970களில் வட-கிழக்குப் பிரதேசங்களிற்கு அறிமுகமாயின. அவுஸ்தரேலியாவில் வேறு மரங்கள் அதிகம் காணப்படாத வனாந்தரங்களில் இம் மரங்கள் தனியாக வளர்கின்றன. வளர்க்கப்படுகின்றன. நம் அண்டை நாடான இந்தியாவிலோ 15 வருடங்களுக்கு முன்னர் இம் மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு விவசாயப் பண்ணைகளில் இவை நடப்பட்டன. கிராம வாசிகளின் விறகுத் தேவைக்கும், பண்ணைகளில் பராமரிக்கப்படும் கால்நடைகளின் தீவனத்திற்கும் இம் மரங்கள் அங்கு நடப்பட்டன. தோட்ட வரம்புகள், தோட்ட எல்லையோரங்கள் வேலியோரங்களில் இவை நடப்பட்டன. ஆரம்பத்தில் இம் மரங்களின் பிரயோசனம் விறகாகவும், தீவனமாகவும் அமைந்தாலும் அவற்றின் பெறுமதி அதனை விட மேலானது என அறியத் தொடங்கினர். காகித உற்பத்திக்கு காகிதக்கூழ் பெற்றுக் கொள்ளுமளவுக்கு இதன் பெறுமதி உயர்ந்தது என்ற இரகசியத்தை மக்கள் புரிந்து கொண்டனர். அத்தோடு மரவேலைகளுக்கும், தளபாடங்கள் செய்யவும் இம் மரங்களைப் பயன்படுத்தலாம் என்பதையும் தெரிந்து கொண்டனர். இதனால் மக்கள் விறகுத் தேவைக்குப் பதிலாக ஆலைகளுக்கும் மர ஆலைகளுக்கும் அம் மரங்களை விற்றுப் போதிய பணம் உழைக்கலர்ம என நம்பினர். இதனால் அம்மரங்களை பெருமளவுக்கு நடுவதற்கு உந்தப்பட்டனர். இம் மரக் கன்றுகளுக்கு திடீர்த் தேவையும் அதிகரித்தது. இதற்கு உதாரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1979-1984 காலப் பகுதியில் வனத் திணைக்களத்தினர் 8 மில்லியன் விக்ஸ் கன்றுகளை மக்கள் மூலம் நடத் தீர்மானித்திருந்த போதிலும் 350 மில்லியன் கன்றுகளுக்கு எதிர்பாராத தேவையேற்பட்டது. அதிகம் முதலீடுகளைச் செய்து மக்களைக் கொண்டு இம் மரங்களை பெருமளவு வளர்ப்பதில்
விவசாயிகள் பணம் பண்ணும் ஆசையில் மரநடுகையில் ஒர் ஒழுங்கு முறையைக் கவனிக்காது அதிகளவு மரக் கன்றுகளை கண்டபடி நட்டதாலும் வனத் திணைக்களத்தினர் ஆரம்ப காலத்தைப் போலன்றி தரமற்ற கன்றுகளை விநியோகித்தமையினாலும் விக்ஸ் மரத்தின் வளர்ச்சி குறையத் தொடங்கியது. மரங்களின் தரமும், பருமனும் குறைந்து விட்டன. இதனால் பண்ணை விவசாயிகளின் விக்ஸ் மர விவசாயம் சரியத் தொடங்கியது. காகித ஆலைகளும் வன இலாகாவில் இருந்தே தங்கள் தேவைக்கு அவற்றைக் கொள்வனவு செய்தனர். பண்ணை விவசாயிகள் மரங்கள் ஏற்றுமதி செய்து வியாபாரம் நடத்தவோ சந்தை வாய்ப்பு பெறவோ இயலாது தடுமாறினர்.

இந்த நிலவரத்தில் பண்ணை விவசாயிகளுக்கு மற்றொரு பேரிடியும் ஏற்பட்டது. விக்ஸ் மரங்கள் துரிதமாக வளர்ச்சிபெறும் இனமாகும். விரைவில் இம் மரங்கள் வளர்ந்து நிலத்திலிருந்து கனியுப்புக்களையும், நீரையும் உறுஞ்சி முடித்தன. இதனால் மண் வளம் குன்றிப் போனது. ஏனைய விவசாயப் பயிர்ச் செய்கை குன்றி பல விவசாயிகள் பயிர்ச் செய்கையைக் கைவிட்டு ஏழையாயினர். இதிலிருந்து கொட்டும் பூ, இலை, காய் கொண்டுள்ள இரசாயனப் பொருள் ஏனைய தோட்டப் பயிர்களின் வளர்ச்சியையும் தடை செய்தது. மேலும் இதன் இலையை உண்ணும் கோலா கரடி, உக்கச் செய்யும் பக்டீரியாவும் இலங்கையிலும், இந்தியாவிலும் இல்லாத போது இதனை இந்நாடுகளில் அறிமுகம் செய்தது பெரிய துரோகமாகும். இதுவும் விக்ஸ் மர உற்பத்தியினால் ஏனைய தாவரங்கள் வளர்ச்சி குன்றுவதற்கு ஒரு காரணமாகும். இன்னும் கொஞ்சக் காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள்தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்படப் போவது உறுதி.

விக்ஸ் மரங்களை கடலோரப் பயிர்களாக நடலாம். அது காற்றுக்கு தாக்குப் பிடிக்க கூடியதாக இருந்தாலும்கூட காற்று வீசும் போது இம் மரங்கள் ஒரு பக்கமாகவே சாய்வதால் அந் நோக்கமும் நிறைவேறக் கூடியதாக இல்லை. இந்த இடத்தில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போதிய தரிசு நிலங்கள் இல்லாமையால் இம் மரங்களை வளவுகளிலும் விவசாயக் காணிகளிலும் வளர்க்க வேண்டியிருக்கின்றது. இம் மரங்கள் ஏனைய தாவர வளர்ச்சியை பாதிக்கும் என விஞ்ஞானிகள் கருதுவதால் நம் விவசாய உற்பத்திக்கு இது ஊறு விளைவிக்கலாம். இவ் விவகாரத்தில் நமது விஞ்ஞானிகள் அதிகளவு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நிலவரத்தில் இம் மர நடுகைக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டுமா? என்ற கேள்வியும் எழுகின்றது.

ஐரோப்பியரின் வெள்ளெலிகளாக நாங்கள் பயன்படுத்தப்படுகின்றோம். இலங்கையில் சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நெல்லினங்களும், இபில் இபில் மரங்களும் மலைநாட்டில் வளர்க்கப்பட்டிருக்கும் பைனஸ் மரங்களும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சில பருத்தியினங்களும், சூடானின் சில கோதுமையினங்களும், சில தெரிந்தோ அல்லது தெரியாமலோ அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சில உயிர்; அங்கிகளும், முதலாளித்துவ முதலாம் மண்டல நாடுகளால் இன்னும் மூன்றாம் மண்டல நாடுகளை இறுகப் பிடித்து வைத்திருக்கும், உயிரினவியற் தொழில்நுட்பட ஆக்கிரமிப்பேயன்றி வேறொன்றுமில்லை.

எனவே வெளிநாடுகளிலிருந்து இலவசமாகவோ அல்லது வேறு வழியாகவோ தருவிக்கப்படும் எதைப் பற்றியும் முன்னெச்சரிக்கையுடன் பலாபலன்கள் ஆராயப்பட்ட பின்னரே நாட்டில் அறிமுகம் செய்யப்பட வேண்டும். அவ்வாறின்றேல் மேற்கண்ட மாதிரியான பிரச்சினைகள் ஏற்படவே செய்யும். “ஓசியிலயெண்டா அம்மாக்கொண்டு அப்பாக்கொண்டு” என்ற மனோபாவம் எப்போது மாறுகிறதோ, அப்போதுதான் வெள்ளெலிகளாக நாங்கள் ஆக்கப்படுவதிலிருந்து விடுபட முடியும்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...