Saturday, May 12, 2018

மட்டக்களப்பு, கல்லடியில் கண்டதுவும் காண்பதுவும் கடற்பாம்புகளா,அல்லது விலாங்கு மீன்களா?



.எம். றியாஸ் அகமட்,  சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

கல்லடிப் பாலத்திற்கருகிலும், அதனை அண்டிய கடற்கரைப் பகுதிகளிலும்கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் காணப்பட்டுக் கொண்டிருப்பது. கடற்பாம்புகளா அல்லது வேறு ஏதேனும் கடல் உயிரியா என்பது பற்றி சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.
இந்தக்கட்டுரை நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும்.

1.            கடற்பாம்புகள்
2.            மீன்கள்

3.            கல்லடியில் கண்டதுவும் காண்பதுவும் கடற்பாம்புகளா, அல்லது விலாங்கு மீன்களா?
4.            முடிவுரை

01)       கடற்பாம்புகள்:
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்பாம்புகள் ஆய்வுகளின் ஒரு உறுப்பினராக
(Sea Snakes Survey of Sri Lanka)  நான் இருந்து வருகின்றேன். எனவே கடற்பாம்புகள்பற்றி ஓரளவுக்கு என்னால் கூற முடியும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். இலங்கையில் 104  இன பாம்புகள் காணப்படுகின்றன (தரை, நன்னீர், உவர்நீர், கடற் பாம்புகள் அடங்கலாக). இவற்றுள் உள்நாட்டுக்குரிய (அதாவது உலகில் எங்குமே காணப்படாத இலங்கையில் மட்டுமே காணப்படக்கூடிய 51 இனங்களும் 08 உப இனங்களும் அடங்குகின்றன). இவைகள் 12 குடும்பத்திற்குள் அடக்கப்படுகின்றன. இவற்றுள் விசம் கொண்ட பாம்புகள் ஐந்து குடும்பங்களிலேயே இருக்கின்றன. இவற்றுள் கடற்பாம்புகள் ஹைட்ரோபிடே என்ற குடும்பத்தைச ;சேர்ந்தவையாகும். இலங்கையில் 15 இன கடற்பாம்புகள் காணப்படுகின்றன. இவைகளின் வாழிடங்களாக முருகைக்கற்பாறைகளும், கடற்புற்படுக்கைகளும் காணப்படுகின்றன.

கடற்பாம்பின் அமைப்பும், இசைவாக்கங்களும்:
கடற்பாம்புகளானது நீர்வாழ்க்கைக்கான பல்வேறு சிறப்பான இயல்புகளைப் பெற்றிருக்கின்றன. வயிற்றுப் பக்கமாகதட்டையாக்கப்பட்ட துடுப்பு வடிவான வால் அதன் முன்னேறிச்செல்வதற்கான இயக்கத்திற்கு உதவுகின்றது. இந்த வகையான வால்கள் மற்றைய தரை, நன்னீர், உவர்நீர் பாம்புகளில் காணப்படுவதில்லை. மூக்குப் பக்கமான வால்வுகளுள்ள கண்கள். இதனுடன் உப்புச் சீராக்கும் சுரப்பியும் காணப்படும். முழு உடம்பின் நீளத்திற்கு சமனான இடதுபக்க சுவாசப்பையையும் கொண்டு காணப்படும். கடற்பாம்புகள் நைதரசனை தனது தோல்களுக்கூடாக வெளியேற்றும் தகவு கொண்டது. இதன் காரணமாக நைதரசன் வாயுக்குமிழிகள் உடம்பில் சேர்ந்து விடாமல் பாதுகாத்துக் கொள்கின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கடற் பாம்புகள் 75 சென்ரிமீற்றரிலிருந்து 300 சென்ரிமீற்றர் வரை  நீளம் கொண்டுகாணப்படுகின்றது.

விசம்:
பொதுவாக நிலப் பாம்புகளை விட கடற்பாம்புகள் அதிகளவு விசம்கொண்டவை. உலகில் சில நிலப் பாம்புகள் கடற் பாம்புகளைவிட அதிகவிசம் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை கடற்பாம்புகள் நிலப் பாம்புகளைவிட அதிக விசம் கொண்டவையாக இருக்கின்றன. சில பாம்புகள் நாகப் பாம்பை விட 15 மடங்கு விசம் கொண்டவையாக இருக்கின்றன. கடற் பாம்புகளின் விசமானது நரம்புத் தொகுதியையும், தசைத் தொகுதியைம் தாக்குபவனவாக உள்ளன (nurotoxins and myotoxins).

அதிஸ்டவசமாக, மனிதர்கள் பெரும்பாலும் கடல் பாம்புக் கடிக்கு உட்படுவது குறைவு. கடற்பாம்புகடி நிகழ்வுகள் ஆயுர்வேத, மற்றும்அரச வைத்தியசாலைகளில் அறிக்கை செய்யப்படுவது மிகவும் குறைவு. கடற்பாம்புகள் திடிரென யாரையும் கடிப்பதில்லை. அவைகள் கோபப்படுத்தப்படும் போது தாக்க எத்தனிக்கின்றன. அவ்வாறு கடித்தாலும், அது உலர் கடியாகவே (Dry bites) இருக்கிறது. அதாவது விசம் செலுத்தப்படாத கடி. வலையில் மாட்டிக் கொண்ட கடற்பாம்பை கழற்றி விடும்போது, பெரும்பாலும் மீனவர்களே கடிக்கு இலக்காகிறார்கள். 90 சதவீதத்திற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு கடற்பாம்பு அதிக விசம் என்ற விடயம் தெரியாது. ஏதோ கடல்விலாங்கு மீன் என்று கருதிக்கொண்டு கடற்பாம்புகளை இலகுவாக கையாழ்கிறார்கள்.

02) மீன்கள்:
பொதுவாக மீன்களை கசியிழைய மீன்கள், முள் மீன்கள் என இரு வகைப்படுத்தலாம். கசியிழைய மீன்களுக்கு உதாரணமாக சுறா, திருக்கை போன்ற மீன்களையும், முள் மீன்களுக்கு மற்றைய மீன்களையும் உதாரணமாகக் கூறலாம்.

விலாங்கு மீன்:
ஓடர் அங்குலிபோம்ஸ் இல் அடங்கும் 4 உபஓடர்களையும், 20 குடும்பங்களையும், 111 சாதிகளையும், 800 இனங்களையும் கொண்ட விலங்குக் கூட்டமாகும். கல்லடியில் காணப்பட்ட வகை ஒபிச்திடே குடும்பத்தைச் சேர்ந்த, கலேகீலிஸ் எனும் இனமாக கருதப்பட வாய்ப்புண்டு. இந்தக் குடும்பத்தில் 15 இனங்கள் காணப்படுகின்றன. இவை அயனமண்டல கடல் வாழிகள். 4- 35 மீற்றர் ஆழத்தில் காணப்படும். மேற்கு அத்திலாந்திக், மேற்கு, கிழக்கு புளோரிடா, போட்டாரிகா, பகாமாஸ், செனகல், ஐவரிகோஸ்ட் போன்ற நாடுகளில் பொதுவாகக் காணப்படும் இந்தோ-பசுபிக் சமுத்திரத்திற்குரிய இனமாகும். மெல்லிய உருளையான உடல் கொண்ட இந்த மீனில் தெளிவாக பூப்பிளவுகளும், முகுப்புற, குத, வாற் செட்டைகளும் காணப்படுகின்றன. புள்ளிகளும், வரிகளும் கொண்டு சில வௌ;வேறு நிறங்களில் காணப்படுவதனால் நிற கடற்பாம்புகள் எனவும் தவறுதலாக அடையாளம் காணப்படுகின்றன. இது பொதுவாக Snake eels (பாம்பு விலாங்குகள்) என அழைக்கப்படுகின்றன.

 
விலாங்கு மீன்களின் பொதுவான வாழ்க்கை வட்டம்:
பொதுவாக நிறையுடலி நன்னீர் நிலைகளிலும், இளம் பருவங்கள் சவர்நீர் நிலை, கடல் போன்றவற்றில் காணப்படுகின்றன. கடலில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து, நன்னீர் நீர் நிலைகளான குளம், ஆறுகள் போன்றனவற்றிற்கு திரும்புகின்றன. பெரும்பாலும் சேற்றுப் பாங்கான வாழிடங்களை விரும்புகின்றன. ஆறுகளில் கற்களுக்கிடையிலும் காணப்படுகின்றன. இவை சிறிய மீன்களையும், கிறஸ்றேசியன்களையும், மொலக்காக்களையும் உணவாக உட்கொள்ளுகின்றன.

 
இனப்பெருக்கம்:
கடலில் நிறையுடலிகளால் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கப்பட்ட குடம்பிகள் பல நூறு மைல்கள் வேறொரு பகுகிகளுக்கு கடல் நீரோட்டத்தினால் அல்லது சிலவேளை காலநிலை மாற்றங்களினால் எடுத்துச் செல்லப்பட்டு ஆறுகளுக்குள் விடப்படுகின்றன.; இந்த ஆறுகளுக்குள் ஆயிரக் கணக்காக படையெடுத்து இலிங்க முதிர்ச்சியடையும் வரை தங்கி, பின்னர் தங்கள் பிறந்த இடங்களுக்கு திரும்புகின்றன. அங்கேயே முட்டையிட்டு இறக்கின்றன. எல்லா இன விலாங்குமீன்களுக்கு இந்த வாழ்க்கைமுறை பொதுவாக பொருந்துவதில்லை என கூறப்படுகின்றது. விலாங்குகள், உணவு, அலங்கார மீன் போன்ற தேவைகளுக்காகபல்வேறு மீன்பிடி உபகரணங்களினால் பிடிக்கப்படுகின்றன.


03) கல்லடியில் கண்டதுவும் காண்பதுவும்  கடற்பாம்பா,அல்லது விலாங்கு மீனா?

இரு வருடங்களுக்கு முன் நான் எனது சங்கத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையி;ன்அடிப்படையில் சில பகுதிகளை பார்க்கலாம். உயிருள்ள மாதிரிகளும், உயிரற்ற மாதிரிகளும் பரீட்சிக்கப்பட்டு, சிலமுடிவுகள் பெறப்பட்டன. பிடிக்கப்பட்ட மாதிரிகளில் பூப்பிளவுகள் (Gills) அல்லது பூக்கள் தெளிவாகக் காணப்பட்டன. இது மீன்களின் ஒரு இயல்பு. இதனூடாகவே சுவாசம் நடைபெறுகின்றது. பாம்புகளில் இந்தபூப்பிளவுகள் அல்லது பூக்கள் காணப்படுவதில்லை. செட்டைகளும் (fins) காணப்பட்டன. செட்டைகளும் பாம்புகளில் காணப்படுவதில்லை. எனவே கல்லடி பாலத்தின் கீழ்ப் பகுதியிலும், அதனை அண்டிய கடற்கரையிலும் காணப்பட்டது பாம்பல்ல. வேறு ஒரு நீர் உயிரினம். அது விலாங்காக இருக்கலாம் என கருதுகின்றேன் எனவும், அவை எங்கேயிருந்து எப்படி வந்திருக்கலாம் என்றும், அதன்வாழ்க்கை வட்டத்தின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த அங்கத்தவர்களையும் கொண்டிருப்பதன் காரணமாக பல்வேறுநிறங்களில் காணப்படுவதாகவும், அனுபவமற்ற, தூரப்பிரதேசங்களிலிருந்து கொண்டு, களத்திற்கு வராமல் அறிக்கைவிடுபவர்களாலேயே மக்கள் பயப்படுகின்றார்கள் என்றும் அறிக்கை செய்திருந்தேன். எனவே ஊடகங்களுக்கு உள்ள பொறுப்பு, விலாங்குகளுக்குப் பதிலாக கடற் பாம்புகளை உலாவவிடுவதல்ல.

04. முடிவுரை:
எனவே இந்தக் கட்டுரையை மூன்று விடயங்களைக் கூறி முடிக்கலாம்என நினைக்கின்றேன்.
1)            கடந்த வருடம் வந்ததும் அதே விலாங்கு
2)            இந்த வருடம் வந்ததும் இதே விலாங்காக இருக்கலாம்.
3)            விலங்குகளின் அசாதாரண நடத்தைக் கோலங்களிற்கும்இயற்கை அனர்த்தங்களின் முன்னெச்சரிக்கைக்கும் தொடர்புகள் இல்லாமல் இல்லை. ஆனால் எல்லா அசாதாரண நடத்தைகளும் முன்னெச்சரிக்கைகள் இல்லை.

Tuesday, November 28, 2017

அசாதாரண விலங்கு நடத்தைகள் அனர்த்த முன்னெச்சரிக்கைக்கு ஒரு கருவியாக:


ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை)





இரண்டாயிரத்து நான்காம் ஆண்டின்; சுனாமி பேரனரத்;தத்திற்கு பின்னர்தான் அனர்த்த முகாமைத்துவம், அனர்த்தம் நடைபெறுவதற்கு முன்னரான அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள் போன்றவற்றி;ன் தேவைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தோன்றத் தொடங்கியது. ஆனால் அந்த அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள் பற்றிய போதிய அறிவிருந்தால் பெருமளவிலான உயிர்;, பொருளாதார சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இதன்காரணமாக அரசாங்கம் பாரிய பொருளாதார செலவினத்தில் உயர்தொழில்நுட்பம்கொண்ட அனர்த்த முன்னெச்சரிக்கை கட்டடமைப்புக்களை நிறுவியிருக்கின்றது. இவைகளை தவிர்த்து அனர்த்த முன்னெச்சரிக்கையை எதிர்வுகூறும் பல வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் அசாதாரண விலங்கு நடத்தைகளை பாவித்து அனர்த்தங்களை முன்னெச்சரிக்கை செய்வதும் ஒரு வழியாகும். துரதிருஸ்டவசமாக அசாதாரண விலங்கு நடத்தைகள் அனர்த்த முன்னெச்சரிக்கை கருவியாக பாவிக்கலாம் என்ற விடயம் கவனத்தில் எடுக்கப்படாததாகவும், அறியப்பட்டது குறைவாகவும் காணப்படுகின்றது. அத்துடன் பொருளாதார ரீதியில் இது செலவும் மிக மிக குறைந்ததாகும்.


அதிகமான விலங்குகள் ஒலி, வெப்பம், தொடுகை, அதிர்வு, நிலைமின்னியல், இரசாயன செயற்பாடு, காந்தப் புலம் போன்றவைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை உணரக்கூடிய மிக மிகத் திறன் வாய்ந்த புலன் அங்கங்களை கொண்டிருக்கின்றன. உதாரணமாக மீன்கள் மனிதர்கள் உணருவதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்னரேயே நிலஅதிர்வுகளையும், நடுக்கங்களையும் உணரக்கூடியன. யானைகளும், சில விலங்குகளும் நில அதிர்ச்சி மிகத் தூரத்தில் தொடங்கியிருந்தாலும், அதனை உணரும் திறனை கொண்டிருக்கின்றன. பலவகையான பறவை இனங்களும், யானை, புலி போன்ற விலங்களும் 1-3 ஹேற்ஸ் அளவுள்ள கீழ்க்கழியொலிகளை உணரும் திறன் கொண்டவையாக காணப்படுகின்றன. ஆனால் மனிதர்களி;ல் இது 100 – 200 ஹேற்;ஸ் ஆகும்.


சுனாமி வருதவற்கு முன் இந்தோனேசியாவில் பல்லாயிருக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக அந்த இடங்களைவிட்டு நகர்ந்ததாகவும், இலங்கையில பல்லாயிரக் கணக்கான மக்கள் சுனாமியால் கொல்லப்பட்டபோதும், காட்டில் இருந்த ஒரு யானை அல்லது முயல் கூட கொல்லப்படவில்லை என்றும் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
ஜப்பானில் நடந்த ஒரு ஆய்வில் நாய்களின் அசாதரன நடத்தைகளான அதிகமாக கடித்தல், அதிகமாக குரைத்தல் போன்றவை இரு மாதங்களுக்கு பின்னர் வரக்கூடிய 7.2 றிச்டர் அளவுடைய பூமியதிர்ச்சியை முன்னெச்சரிக்கை செய்திருக்கின்றன என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. வுpலங்குகள் பூமியதிர்ச்சிக்கு முன்னர் இடம்பெறும், நிலம் சாய்தல், ஈரப்பதன்;, மின் ஓட்டம், காந்தப் புலம் போன்றவைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை உணரக்கூடியன. இவைகள் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடந்த ஆய்வுகளின் மூலம் நிருபிக்கப்பட்டிருக்கின்றன. சிலந்திகள், மற்றும் சில பூச்சிகள், எலி (காய்;ந்த மண்ணில் விதைகளைப் புதைத்தல்), போன்றவை இந்த ஈரப்பதனை உணரும் விலங்குகளுக்கு உதாரணங்களாகும்.

உலகின் பல நாடுகளின் உள்ளுர்க்குடிகள் இன்றும் பறவைகளின் அலறல்களையும், கடல்வாழ் உயிரினங்கள் நீந்தும் திசைகளின்; மாற்றங்களையும் வைத்து கடற் கொந்தழிப்பு, சுனாமி  போன்ற இயற்கை அனரத்தங்களை முன்னெச்சரிக்கை செய்கிறார்கள். ஆரியத்திரன என்கின்ற இலங்கை ஆய்வாளர்p சுனாமிக்கு முன்னர், சுமாத்திராவின் கடற்படுகைகளிலிருந்து இலங்கையை நோக்கி; மீன்கூட்டங்கள் இடம் பெயர்ந்ததை குறிப்பிடுகிறரார். ஏனெனில் மீன்களின் பூமியதிர்ச்சியை உணரும் திறன் மிக மிக அபாரமானது. மீன்கள் மனிதர்கள் உணருவதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்னரேயே நிலஅதிர்வுகளையும், நடுக்கங்களையும் உணரக்கூடியன. சுறா, திருக்கை போன்றவையும், பல மீனினங்களும் மின்புலத்தில் ஏற்படும் மாற்றங்கள் (அதாவது ஒரு கோடியில் ஒரு பங்கு வோல்ட்டேஜ்) மாற்றங்களை உணரக்கூடியன. டொல்பின் போன்ற திமிங்கிலங்கள் (பறவைகளும் கூட) காந்தப் புலத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு அசாதாரண நடத்தைகளை காட்டக்கூடியன.

சுவாசிலாந்தில் வெள்ளப்பெருக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்படுகின்றன வறட்சியும் மிகப் பெரிய அனர்த்தங்களாக காணப்படுகின்றன. இதனை அம் மக்கள் புளோசியஸ் என்ற பறவை மரத்தில் கூடு கட்டும் உயரத்தை வைத்து, அதாவது மரத்தில் அதிக உயரத்தில் கூடுகள் கட்டினால் வெள்ளப் பெருக்கு ஏற்படப் போகிறது என்ளும், குறைந்த உயரத்தில் கட்டினால் ஏற்படாது என்றும் அனர்த்த முன்னெச்சரிக்கைய பெற்றுக் கொள்கிறார்கள். பறவைகளின் அலறலை வைத்து மழை வரப்போவதையும், மேலும் அசாதாரண விலங்கு நடத்தைகளுடன் காற்றின் திசை, சந்திர பிறைகளின் வடிவங்கள் வைத்து இயற்கை அனர்த்தங்களை அம் மக்கள் முன்னெச்சரிக்ககை செய்கிறார்கள். தன்சானியாவில் ஆடுகளின் நடத்தைகளை வைத்து வரட்சியையும், வரப் போகின்ற உணவுப் பஞ்சத்தையும் எதிர்வுகூறுகின்றார்கள்.

ருஸ்யாவின் கம்சற் ஓர்குக் பிரதேச வேட்டையாடுபவர்களும் மேய்ப்பர்களும் சேகரிப்பவர்களும் வானத்தின் நிறங்கள், நாய் பனியில் முதுகை வைத்து உருளுதல், வானில் காகங்கள் வட்டமடித்தல் போன்றவைகளை வைத்து அனர்த்தங்களை முன்னெச்சரிக்ககை செய்கிறார்கள். இந்தோனேசியாவின் 80500 பேரைக் கொண்ட சிமிலு சமூகத்தினர் எருமை மாடுகளின் அசாதாரண நடத்தைகளிலிருந்து முன்னெச்சரி;க்கையைப் பெற்று உயர்வான இடங்களுக்கு நகர்ந்ததன் காரணமாக காரணமாக 2004ம் ஆண்டின் சுனாமி பேரழிவில் தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள். இந்தோனேசியாவின் ஆசே பிராந்தியத்தின் முழு நாடு பூராக 170000 பேர் கொல்லப்பட்டு போக, சிமிலு சமூகத்தினரில், ஏழு பேரே கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். சீனாவில் நடாத்தப்பட்ட பல ஆய்வுகள் நாய், நரி, பண்டா கரடி, பன்றி, பசு, குதிரை, கோவேறு கழுதை, லோச்சஸ், புலிகள் போன்றவை பூமியதிர்ச்சிக்கு முன் அசாதாரண நடத்தைகளைக் காட்டுவதாகவும், நெடுந் தூக்கத்திலுள்ள பாம்புகளின் தூக்கம் குழப்பப்பட்டு, அவை வெளியில் வந்து பனியில் உறைந்து போவதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஆடுகள் தங்கள் கூடுகளுக்குள் செல்ல மறுத்தல், பூனையும் பன்றியும் தங்களது குட்டிகளை கௌவிக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்தல், நடு இரவில் கோழிகள் கூட்டில்; மோதி ஒலி எழுப்பல், மீன்கள் மீன் தொட்டியுடன் மோதி ஒலி எழுப்பல், பறவைகள் தங்கள் சுடுகளை விட்டு வெளியேறல், மிருகக்காட்சி சாலைகளின் விலங்குகள் இரவில் தங்களது இடங்களுக்கு சென்று தங்குவதற்கு மறுத்தல், பாம்புகள், பல்லிகள், சிறிய முலையூட்டிகள் (எலி, மூஞ்சுறு) தங்களது பொந்துகளை விட்டு வெளியேறிச் செல்லுதல், கடற்கரையோரங்களில் பூச்சிகள் பெரும் திரளாகக் குவிதல், கால்நடைகள் உயர்ந்த இடங்களுக்கு செல்லுதல், வீட்டு வளர்ப்பு பிராணிகள் பணிய மறுத்தல், காட்டு வாழ் பறவைகள் தங்களது வழமையான வாழிடங்களை விட்டு வெளியேறல் போன்றவை பூமியதிர்ச்சிக்கு முன்னரும் மற்றைய அனர்த்தங்களுக்கு முன்னரும் நடக்கும் அசாதாரண விலங்கு நடத்தைகளுள் சிலவாகும்.

அசாதாரண விலங்கு நடத்தைகளை அன்னர்த்த முன்னெச்சரிக்கைக்கு ஒரு கருவியாக உபயோகிப்பதனை பல வளர்ந்த நாடுகளிலும், இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலும் இன்னும் ஒரு வளராத, கவனிக்கப்படாத துறையாகவும், திறன்வாய்ந்த நுட்பமாகவும் காணப்படுகின்றது. எனவே நாளாந்தம் விலங்குகளின் அசாதரண நடத்தைகளை உற்று நோக்குவதன் மூலமும், விலங்குகளின் அசாதரண நடத்தைகளை அனர்த்த முன்னெச்சரிக்கைக்கு ஒரு கருவியாக பாவிப்பதன் மூலமும், பாரியளவிலான நிதியை சேமிப்பதுடன், பெருமளவிலான உயிரிழப்பு, சொத்திழப்புக்களையும் தவிர்க்கலாம்.












Tuesday, November 7, 2017

உயிரியல் சந்தமும் (Biological Rhythm) உயிரியல் கடிகாரமும் (Biological Clock)


 -.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

கரப்பான் பூச்சிகள் இரவிலேயே உணவைத் தேடுகின்றன. வடவரைக் கோளத்திலுள்ள பறவைகள் வருடத்தின் குறிப்பிட்ட மாதங்களிலேயே தகாதகாலம் கழிக்க தெற்கு நோக்கி இடம்பெயருகின்றன. கடற்கரையோரத்தின் வளைகளிலுள்ள நண்டுகள் தாழ் அலைகளின்போதே வளைகளைவிட்டு வெளியே வருகின்றன. மனிதர்களாகிய நாங்கள் இரவிலேயே தூங்குகின்றோம். இவைகளெல்லாம் ஏன் இவ்வாறு நடைபெறுகின்றன?. ஏனெனில் விலங்குகள் தொடர்ச்சியாக அவைகளின் செயற்பாடுகளை செய்வதில்லை.
சூழற் காரணிகளுக்கேற்ப விலங்குகளும் தங்களது நடத்தைகளை மாற்றிக் கொள்ளுகின்றன. இது இயற்கையின் வட்டத்திற்குட்பட்ட முறையிலேயே நடக்கின்றது.


விலங்குகளின் செயற்பாடுகள் சூழற்காரணிகளின் மீடிறன்களுடன் நேரடித் தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன. இது உயிரியல் சந்தம் (Biological Rhythm) என அழைக்கப்படுகின்றது. உயிரியல் சந்தமானது ஒரு கல அங்கிகளிலிருந்து பல்கல அங்கிகள்வரை, தாவரங்களிலிருந்து விலங்குகள் வரை காணப்படுகின்றன. விலங்குகளைப் பொறுத்தவரை அவைகள் பல வகையான உயிரியல் சந்தங்களைக் காட்டுகின்றன. மனிதனில் நித்திரை-விழிப்பு சந்தம், அல்கஹோல் அனுசேப சந்தம், கற்றல் வினைத்திறன் சந்தம், போன்ற நூற்றுக்கு மேற்பட்ட சந்தங்கள் காணப்படுகின்றன. அவைகளைக் கற்பதும், அறிவதும் ஆர்வத்தைத் தூண்டுவனவாகவும், மனித நலன்களின் நிமித்தம் பயன்படுத்துவதற்கு பிரயோகிக்க கூடியனவாகவும் உள்ளன. உதாரணமாக- மனிதக் கற்றல் வினைத்திறன் சந்தத்தை எடுத்துக் கொண்டால்,  அதிகாலையிலிருந்து காலை 10.00 மணிவரை கற்றலும், மனனமாக்கலும் அதிகரித்து, பின்னர் பிற்பகல் 1.00 மணி வரை படிப்படியாக குறைகிறது. பின்னர் பிற்பகல் 3.00 மணிவரை அதிகரிக்கிறது. அதன் பின்னர் குறைகிறது. இந்த சந்தம் பற்றிய அறிவை எங்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பயன்படுத்தலாம்.
பல்வேறு சூழற்காரணிகள் காரணமாக உயிரியல் சந்தத்தில் பல வகைகள் காணப்படுகின்றன.

1.            மேற்சக்கர சந்தம் (Epicycle): இது குறைந்த காலத்திற்கு ஒரு தடவை நடைபெறுவது. லக்வேர்ம் எனப்படும் கடலில் வாழும் புழுக்கள் 6-8 நிமிடங்களுக்கொரு தடவை உணவு உண்ணுதல், இதற்கு உதாரணமாகும்.


2.            அலைக்குரிய சந்தம் (Tidal Rhythm): அலையடிப்பை அடிப்படையாக கொண்டு கடற்கரையில் வாழும் விலங்குகள் காட்டும் நடத்தைகள் இதற்குள் அடங்கும். உதாரணமாக சிப்பி, மட்டி போன்றன உயர் அலையில் ஓடுகளை திறந்து வைத்து உணவை பிடித்து உண்பதுடன், தாழ் அலையில் ஓடுகளை மூடி, நீரிழப்பைத் தடுக்கின்றன.

3.            நாளுக்குரிய சந்தம் (Circadian Rhythm): இருபத்து நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு முறை, இரவு நடத்தை, பகல் நடத்தை என மாறி மாறி நடைபெறுவது. ஊதாரணம் - காகம், ஆடு, மாடு போன்;றன பகல் நேரங்களிலும், எலி, மூஞ்சுறு போன்றன இரவிலும், மேலும் சில விலங்குகள் சூரிய உதயத்திலும் அல்லது சூரிய அஸ்த்தமன நேரங்களிலும் செயற்படுபவையாகக் காணப்படுகின்றன.

4.            சந்திர சந்தம் (Lunar Rhythm): இது 28 நாட்களுக்கு ஒரு தடவை சந்திரனைவைத்து நடைபெறுவது. குரியன் என்ற மீன்கள் முழுநிலவிலேயே கடற்கரைக்கு வந்து மண்ணில் முட்டையிடுதல் ஒவ்வொரு முழுவநிலவு நாளிலும் நடைபெறுகிறது. மனிதப் பெண்களின் மாதவிடாய்ச் சக்கரமும் இதன் அடிப்படையிலேயெ நடைபெறுவதாக கருதப்படுகின்றது.


5.            வருடாந்த சந்தம் (Circannual Rhythm): இரு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுவது. விலங்குகளின் கோடை நெடுந்தூக்கம், இடப்பெயர்வு, தகாத காலங்களின் உறங்குநிலை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

உயிரியல் சந்தமானது எப்போதும் சூழலில் ஏற்படும் மாற்றங்களில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. விலங்குகளில் காணப்படும் உள் நேரக்கட்டுப்பாட்டு பொறிமுறையினால் (Internal Timing Mechanism) உயிரியல் சந்தமானது பேணப்படுகின்றது. இதன் காரணமாகவே சூழலில் மாற்றங்கள் நிகழாத போதும் விலங்குகள் உயிரியல் சந்தத்தைக் காட்டுகின்றன. ஒரே மாதிரியான சூழற்காரணியில் ஒரு விலங்கை வைத்திருந்தாலும் அவை, ஒழுங்கான உயிரியல் சந்தத்தை காட்டுகின்றது. ஒரு மனிதனை ஒரு பூட்டிய அறையினுள் 24 மணித்தியாலங்களுக்கு வெளிச்சத்தில் அல்லது இருட்டினில் வைத்திருந்தாலும், அவன் இரவு நேரமானவுடன் தூக்கத்திற்கு சென்று காலை நேரமானவுடன் தூக்கத்திலிருந்து விழிக்கின்றான்.
உயிரிகள் எந்தவித சூழற் காரணிகளின் துணையுமின்றி தாங்களாகவே உயிரியல் சந்தத்தை ஒரு பொறிமுறை மூலம் பேணுகின்றன. இந்தப் பொறிமுறை உயிரியல் கடிகாரம் என அழைக்கப்படுகின்றது. உயிரியல் கடிகாரம் இரண்டு காரணிகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவது காரணி Zeitgeber அல்லது நேரம் வழங்குனர் (Time Giver) ஆகும். இது உள்ளிருக்கின்ற கடிகாரத்துடன் சூழற்காரணிகளை இணைக்கின்றது. இரண்டாவது காரணி பேஸ்மேக்கர். இது தனது சந்தத்தை தானே, சூழற் காரணிகளின் துணை எதுவுமின்றி பேணிக்கொள்ளும்.
சமீப காலம் வரை உயிரியல் கடிகாரம், அதன் உடற்றொழிலியல் சம்பந்தமாகமிகக் குறைவாகவே அறியக் கிடைத்திருக்கின்றது. இன்னும் பல்வேறு ஆய்வுகள் உயிரியல் கடிகாரத்தின் அமைவிடம் தேடி பல தசாப்தங்களாக நடந்து கொண்டிருக்கின்றன. கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகளில் நரம்புத் தொகுதி;யின் ஒப்ரிக் லோப் என்ற பகுதியிலும், முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் மூளையின் சுப்றா கியாஸ்மெற்றிக் நியுக்கிளியஸ் என்ற பகுதியிலும் பேஸ்மேக்கர் அமைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உயிரியல் கடிகாரம் செயற்படும் முறையைக் கண்டுபிடித்ததற்காக 2017ம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு இம் முறை ஜெப்ரி சி. ஹோல், மைக்கல் ரொஸ்பாஸ், மைக்கல் டபிள்யு யங் என்ற மூவருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தப் நோபல் பரிசிலிருந்தே உயிரியல் கடிகாரம் என்பது உயிரிகளுக்கும், அதன் உடற்றொழில்களுக்கும், நடத்தைகளுக்கும் மிக முக்கியமானது என்பது புலப்படுகின்றது.


கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...