Friday, December 9, 2016

அரிந்த ஆப்பிள் கோளங்கள் முகநூல் தமிழுக்கு ஒரு அணி


அரிந்த ஆப்பிள் கோளங்கள் முகநூல் தமிழுக்கு ஒரு அணி

ஏறத்தாள பத்து வருடங்களுக்கு முன்னர் திண்ணை.கொம் இணையப் வாரப் பத்திரிகையில்; பிரசுரிக்கப்பட்ட தனது கவிதைகளை தொகுத்து கவிஞர் டீன்கபூர் அவர்களினால் வெளியிடப்பட்ட திண்ணைக் கவிதைகள் என்ற தொகுதிக்கு நான் எழுதிய முன்னுரைக்கு திண்ணைக் கவிதைகள்- இணையத் தமிழுக்கு ஒரு அணி என்று தலைப்பு கொடுத்திருந்தேன்.


பத்து வருடங்களுக்குள் தொழில்நுட்பத்தின் அகோர வளர்ச்சி பல்வேறு சாத்தியப்பாடுகளையும் எமக்கு திறந்துவிட்டுள்ளது. அதற்கு உதாரணம்தான் நஸீஹா முகைதீனின் அரிந்த ஆப்பிள் கோளங்கள். முற்று முழுதாக ஸ்மார்ட் போனினாலேயே தட்டச்சு செய்யப்பட்டு முகநூலிலேயே பிரசுரிக்கப்பட்ட கவிதைகள்.
எனது வாசிப்பானுபவத்தில், நஸீஹா எந்த குரு வழிபாடுகளுமற்று தனக்கேயுரிய அலாதியான மொழியொன்றுடன் உலாவருவது போல் தெரிகிறார். நஸீஹாவின் படைப்பாளுமையையும் எழுத்தாற்றலையும் பறைசாற்றும் எழுத்துகளுக்கு சிறகு முளைத்து நீரை விலத்தி, நிலத்தை துழைத்து, வளியில் தவழ்ந்து முள்ளிவாய்க்கால் தொடங்கி, ரொசாரியோ (சேகுவரா), அலப்போ (சிரியா), பைசா கோபுரம,; தேம்ஸ் நதிக்கரை, சைப்ரஸ் மரங்கள், ஸலாகுத்தீன் அய்யூபி, டாஸ்கண்ட், கலீல் ஜிப்ரானினதும், செல்மாவினதும் பெய்ரூட் வீதிகள் என அலைந்து திரிகின்றன. கவி மொழியின் வௌ;வேறு வகையறாக்களின் சாத்தியப்பாடுகளும் காணப்படுவது போல் தென்படுகின்றன. பெரும்பாலான கவிதைகள் விளிம்புநிலையோர், ஓடுக்கப்படுவோர், நொறுக்கப்படுவோர், ஏங்கிக்கிடப்போர் பற்றிப் பேசுகின்றன.
இன்னொருவகையில்சொல்லப்போனால் போர், புரட்சி, சுதந்திரம், அகதிமை, சிறுமி, சிறுவர், தாய்மை, அடிமை, தோல்வி, வாழ்வைக் கண்டடையத் துடிக்கின்ற ஏக்கம், பெரும் சலிப்பு பற்றிப் பேசுகின்றன. தனது தாய்நாடான இலங்கை யுத்தத்தை மட்டும் பேசாமல் உலகளாவிய யுத்தங்களைப் பற்றியும்அவைகளினால் நெருக்கடிக்குள்ளாகும் மானிடர்கள் பற்றியும் பேசுகின்ற கவிதைகள்; எல்லையற்ற மானிட நேயத்தை எடத்தியம்புவதாய் இருக்கின்றன.
அந்நியப்படுத்தப்படாத வார்த்தைகளுக்குள் அந்நியப்படுத்தப்பட்ட நிலக்காட்சிகளுடன் அதன் காலநிலைத் தன்மையுடன் புலக்காட்சிகள் விரிந்து கவிதைகளின் அந்நிய அழகினை (Exotic Beauty) அதிகரிக்கச் செய்திருக்கின்றன.
அரிந்த ஆப்பிள் கோளங்களின் கவிதைகள் தலைப்புகளின்றி காணப்படுவதே ஒரு வித்தியாசமான வாசிப்பானுபவத்தை கொடுக்கலாம். தலைப்பிடுதல் பிரதிமீதான வாசகனின் கட்டற்ற சுதந்திரத்தை மட்டுப்படுத்தி திசை திருப்பலாம் என்று கருதியிருப்பார் என்னவோ?. இந்தக் கவிதைகளை தொகுத்து நூலுருவாக்குவதில் ஊக்கப்படுத்திய நண்பர்கள் சிறாஜ் மஸ்ஹ_ர், கவிஞர் ஏ.எம். குர்சித், கவிஞர் ஜெமில், மற்றும் புதுப்புனைவு இலக்கிய வட்ட மருதமுனை நண்பர்களுக்கும், நன்றிகள் உரித்தாகுக.
அம்ரிதா ஏயெம்
சிரேஷ்ட விரிவுரையாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம்
வந்தாறுமூலை
இலங்கை

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...