Wednesday, August 17, 2016

மூன்றாம் பிறையின் கண்ணே கலைமானே தந்தைகளுக்கும் மகள்களுக்குமான என்றென்றைக்கும் சாசுவதமான உயிரை உருக்கும் ரசவாதப் பாடல்.

மூன்றாம் பிறையின் கண்ணே கலைமானே தந்தைகளுக்கும் மகள்களுக்குமான என்றென்றைக்கும் சாசுவதமான உயிரை உருக்கும் ரசவாதப் பாடல்.

- அம்ரிதா ஏயெம்

“தேவலோக வாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா. ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம்.அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். 

“மூன்றாம் பிறை” படம் மூலமாக. மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன்.
ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு........
எனக்கு......
எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்...!”
                                                                                                  - பாலுமகேந்திரா
                                                                       **
எனது மகள் பிறந்தவுடன் மகளைத் தூங்க வைக்க நிலா நிலா ஓடி வா, ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் களுடனான பயணத்தின் அலுத்துக் களைத்துப் போன ஒரு சந்தர்ப்பத்தில் Lullaby of tamil child என்று google பண்ணினேன். அதிலே ஒரு பதிவு பீ. சுசிலா பாடிய எல்லா பாட்டுக்களுமே தாலாட்டுக்கள்தான் என்று கூறியது. அன்றிலிருந்து மகளின் பணயம் தொடங்கியது. ஏனெனில் வலிகளும், தனிமைகளும், அலைச்சல்களும் நிறைந்த துண்பக் கடலை தாண்டுவதற்கு ஒரு தோணி தேவைப்பட்டது. துன்பக் கடலை தாண்டும் போது தோணியாவது கீதம்.
                                                                             **

அமைதியான நதியினிலே ஓடம், அத்தை மடி மெத்தையடி, அத்திக்காய் காய் காய், சின்ன சின்ன கண்ணனுக்கு, எங்கிருந்த போதும் உன்னை, என்னாளும் வாழ்விலே, இதய வீணை தூங்கும் போது. காகித ஒடம், காதல் சிறகை, காலமென்னும் நதியினிலே,, கண்ணனின் சந்நிதியில், காவேரி ஓரம், மாலை பொழுதின் மயக்கத்திலே, மலர்ந்தும் மலாராத பாதி மலர், நானே வருவேன், நெஞ்சம் மறப்பதில்லை, பார்த்த ஞாபகம் இல்லையோ, பூந்தேனில் கலந்து, பொழுதும் விடியும், லவ்பேட்ஸ் லவ்பேட்ஸ், சிட்டுக்குரவி முத்தம் கொடுத்து, அழகே வா, அருகே வா, சொந்தமில்லை பந்தமில்லை, தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே, ஊர் உறங்குது பொழுதும் உறங்குது, தன்ணிலவு தேனிறைக்க, சொன்னது நீதானா?, உனது மலர் கொடியிலே, உன்னை ஒன்று கேட்பேன், பதினாறு வயதினிலே, செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம், பக்கத்து வீட்டு பருவ மச்சான், தேடினேன் வந்தது, உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன், பார்த்தால் பசி தீரும், தங்கத்திலே ஒரு குறை, தென்றல் வரும், ஆடாமல் ஆடுகிறேன், உன்னை நான் சந்தித்தேன், இரவுக்கு ஆயிரம் கண்கள், பச்சை மரம் ஒன்று, காலமென்னும் நதியினிலே. கண்ணா கருமை நிற கண்ணா போன்றவை இந்த தாயுள்ள பிள்ளைக்கு இன்னொரு மடியாயின.
ஆசையே அலைபோல, அதிசய ராகம், அன்னக்கிளி, சின்ன கண்ணனுக்கு, சின்னக் கண்ணன் அழைக்கிறான், தெய்வம் தந்த வீடு, என் இனிய பொன்னிலாவே, உன்னைவிட்டால் யாருமில்லை, இலக்கணம் மாறுதோ, இளமை என்னும் பூங்காற்று, இந்த மன்றத்தில் ஓடி வரும், இரவும் நிலவும், காலையும் நீயே மாலையும் நீயே, காலங்களில் அவள் வசந்தம், மாமன் வச்சான், மயக்கமா கலக்கமா, மௌனமான நேரம், சிங்காரவேலனே தேவா, ஒரு வானவில் போலே, மோகன புன்னகை, போய் வா நதியலையே, தேனே தென்பாண்டி மீனே, சம்சாரம் என்பது வீணை, சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தில் நல்ல உள்ளம், உள்ளம் என்பது ஆமை, நந்தா என் நிலா, வான் நிலா நிலா, காதலின் பொன் வீதியில், வசந்த கால கோலங்கள் போன்றவைகளும், இந்த சீசனுக்கான பஞ்சுஅருணாசலத்தின் முதற்பாடலாகிய பொன்னெழில் பூத்தது புதுவானில் வரை இன்னொரு மடியாய் இருக்கின்றன.
                                                                                       **

இந்தப் பயணத்தின் தோணி கொண்டு தாண்டும் போது ஓரிடத்தில் தரைதட்டி கண்டடைந்ததுதான், மூன்றானம் பிறையின் கண்ணே கலைமானே. அன்றிலிருந்து எங்கே பயணம் செய்து விட்டு வந்தாலும், அலைந்துவிட்டு வந்தாலும், கண்ணே கலைமானே தவிர்க்க முடியாத தாய்வீடாகியது. தரிப்பிடமாகியது. யூடியுப்பில் கண்ணே கலைமானே 802896 வியுக்களில் ஆகக் குறைந்தது 5வீதமாவது மகளால் நிகழ்த்தப்பட்டிருக்கும். ஐபேட்டும், ரெப்பும், லெப்டொப்பும், ஸ்மார்ட் போன்களும் இந்த பணயத்தில் தேய்ந்துவிட்டிருந்தன.

பின்னொருநாளில் மகள் கண்ணே கலைமானேயின் அடுத்த கட்டத்துக்குள் தாவி விட்டிருந்தது. சுருமை அக்கியொன் மெய்ன், (சத்மா (ஹிந்தி), ஜேசுதாஸ்), கதாகெ கல்பனாகெ. (வசந்த கோகிலா (தெலுங்கு), எஸ். பி. பாலசுப்ரமணியம்), அதற்குப் பின்னர் எஸ்.பி. பாடாத பாடல்களில் கண்ணே கலைமானே, பின்னர் வயலின், பல வகையான கிட்டார்கள், புல்லாங்குழல், வீணை, பியானோ, பல்வேறு தனித்த இழை இசைக் கருவிகள், மேலும் மேடை நிகழ்ச்சிகள், பல சுப்பர், சீனியர், ஜீனியர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஆண்களும் பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும், இளைஞர்களும், இளைஞிகளும், கிழவர்களும், கிழவிகளுமாகவும், கரோக்கிகளாகவும் சாத்தியமான மொழிகளிலும் புகுந்து விளையாடியிருந்தனர். இதன் காரணமாக கண்ணே கலைமானே இசையின் எல்லா சாத்தியப்பாடுகளையும் சாத்தியப்படுத்தியது. அந்தளவுக்கு கண்ணே கலைமானேயில் என்ன இருக்கிறது?.
                                                                  **

கமலஹாசன், பாலுமகேந்திரா ஆகிய இருவருக்கும் தேசிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்து காலங்களையும் மீறி, ரசனை மாற்றங்களையும் மீறி, மனதையும் பாதித்து, அதில் என்றும் நிற்கின்ற செவ்வியல்தன்மை கொண்ட, அற்புதமான திரைப்படம்தான் மூன்றாம் பிறை. 1981 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் தனது நோய்க்கு சிகிச்சை பெற  அமெரிக்கா செல்லும்போது தி.நகரிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் வழியில் இயக்குனர் பாலு மகேந்திரா காரில் உடன் செல்கையில் இரண்டே நிமிடங்களில் எழுதிய வரையறுக்க முடியாத ஆயுளைக் கொண்ட பாடல்தான் கண்ணே கலைமானே. ஜேசுதாசும், இளையராஜாவும், பாலு மகேந்திராவும் கண்ணதாசனின் பாடல்களுக்கு அற்புதமாக உயிர் கொடுத்திருப்பார்கள்.


விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படு;ம் விஜி (சிறிதேவி) மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் வழியில் தவறிவிடுகிறார். பின்னர் தவறுதலாக விலைமாதுவாக விற்கப்பட, அங்கு அவரைச் சந்திக்கும் சுப்ரமணி (கமலஹாசன்) என்னும் ஆசிரியர் அவளைக் காப்பாற்றி அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றான். விஜியின் நிலைகண்டு பரிதவிக்கும் சுப்ரமணி ஒரு கட்டத்தில் அவள் மேல் அவனை அறியாமலேயே காதல் கொண்டு அவளை பாதுகாக்கிறான். அந்தச் சூழலில் இடம்பெறும் பாடல்தான் இது. கண்ணே கலைமானே பாடலில் மூன்றாம் பிறை திரைப்படத்தின் மொத்தக் கதையும் சொல்லப்பட்டிருக்கும். இதுதான் கண்ணதாசன்.

இப் பாடல் இளையராஜாவுக்கு மிகவும் சவாலான பாடலாகும். காதலிக்கு உடம்பில் பிரச்சினையில்லை. மனதில்தான் பிரச்சினை. மனதளவில் குழந்தையாய் இருப்பவளிடம் பாடும் தாலாட்டு. அதில் அதிகம் தாய்மையும் இருக்க வேண்டும். ஆழ்ந்த சோகமும் இருக்க வேண்டும். எனவே இரண்டையும் கலந்து காபி ராகத்தில், ஜேசுதாசின் மனத்தின் அடித்தளத்திலிருந்து சோகமாய் ஊற்றெடுக்கும் மெலன்ஜொலிக்கல் குரலில் வரும் அற்புதமான பாடலாக அமைந்துவிட்டிருக்கும். இந்தப் பாடலில் ராஜாவின் புலாங்குழல் பல்லவிக்கு இடையில் புகுந்து ஒரு ராஜாங்கமே நடாத்தியிருக்கும்.

கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோஓராரிராரோராரிராரோஓராரிராரோ
கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோஓராரிராரோராரிராரோஓராரிராரோ
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி
கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோஓராரிராரோராரிராரோஓராரிராரோ

ஜனனி தினகரன் என்பவர் மொழிபெயர்த்த இந்தப் பாடலின் உயிரை உருக்கும் ஆங்கில வரிகளும் எங்களின் உயிரைப் பிழிகிறது.
Dear beautiful deer, I found you like a young peacock
I see you in the mornings and evenings (implying all day)
I’m asking god for this
(lullaby syllables)
(lullaby syllables)
If you were a mute, it is peaceful in a way
If you were poor, there is a peace in that too
You are a parrot’s little one or a cuckoo’s little one singing about the earth
For some reason, god has deceived you, fate has made you mentally ill
I felt love, I have dreamed and nurtured the love
Sweet one, I have filled my thoughts with you
I became your life, don’t ever forget me
Without you, what is peace? You are my sacred sanctuary
(By Janani Dhinakaran, The Outsider's Journey)

கண்ணதாசன் இந்தப் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்றவர், அமெரிக்காவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கவிஞரின் பூத உடல் சென்னைக்கு திரும்பி வந்த போது அப்போது ஆறு வயதான கவிஞரின் மகளான விசாலியும், இளம் வயதிலேயே மறைந்துபோன கவிஞரின் மகனான கலைவாணனும் கண்ணே கலைமானே பாடலை தங்கள் தந்தை தங்களுக்கு பாடி வைத்து விட்டுச் சென்ற தாலாட்டாகவே நினைப்பதாகப் கூறினார்கள்

கன்னியின் காதலி படத்தில்கலங்காதிரு மனமேஎன்று தொடங்கிய அவரது சினிமா வரிகள் மூன்றாம் பிறை படத்தில் கண்ணே கலைமானேஎன்ற வரிகளோடு அமரத்துவம் பெற்றது. ‘கண்ணே கலைமானே.. ‘ என்ற பாடலைப் போல், மீண்டுமொரு ரசவாதப் பாடல் திரையில் தோன்ற வாய்ப்பேயில்லை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கண்ணே கலைமானே ஏன் எனக்கும் மகளுக்கும் இன்னும் பிடித்துப் போகிறது? வரிகளுக்காகவா? இராகத்திற்காகவா? இசைக்கோர்வைக்காகவா? அடிமனத்திலிருந்து பீறிட்டெழும் சோகத்தைப் பிழியும் குரலுக்காகவா? ஊட்டியின் ஊசிப்பனியின் துவாரங்களுக்குள் நுழைந்து வெளிவரும் நுண்ணனு ணர்வுகளைக் காட்டிநிற்கின்ற ஒளிப்பதிவுக்காகவா? விஜிக்காகவா? சுப்ரமணிக்காகவா?

துன்பக் கேணியிலிருந்து தாண்டும் நிச்சயமற்றிருக்கும் குழந்தையுள்ளம் கொண்ட காதலிக்கும், காதலனுக்குமானது இந்தப் பாடல் என்று யாரு சொன்னது?
ஆங்கே இருக்கும் சுப்ரமணியும், விஜியும் நானும் மகளும்தான்.


கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி…”

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...